31 டிசம்பர், 2021

இந்திய தேசியக்கொடி முதன்முதலில் ஏற்றப்பட்ட நாள்

 'முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற ஒன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில்
சிந்தனை ஒன்று டையாள்' 


    இன்றைய டிசம்பர் 31-ம் தேதிக்கு, இந்திய  விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும் அவர்கள் அதை அநேகமாக மறந்துபோயிருப்பார்கள்.
 

       இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு இருப்பது போன்ற முக்கியத்துவம் டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் உண்டு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்ந்த அந்த நாளை, வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை தினமாகவே கருதுவார்கள்.

         
1929 டிசம்பர் 31-ம் தேதி லாகூர் ராவி நதிக்கரையில் பெரும்திரளாகக்கூடிய தொண்டர் கூட்டத்துக்கு நடுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றிய நிகழ்வு மறந்து விடக்கூடியதா என்ன? அதற்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களின் நீட்சியாகத்தான் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாம் பார்க்க வேண்டும்.

      1927-இல் இந்திய அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் பிரிட்டிஷ் காலனிய அரசு ஜான் சைமன் குழுவை அமைத்தது. அந்த சைமன் குழுவுக்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் பெரும் திரளாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் போராட்டத்தின்போது லாலா லஜபதி ராய் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தது மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது. 

     இர்வின் பிரபு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தார். அதை இந்தியத் தலைவர்கள் பலர் வரவேற்றனர். ஆனால் பிரிட்டனில் அதற்கு எதிர்ப்பு அதிகரித்ததால் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 

       இதற்கிடையில்  'முழுமையான சுதந்திரம்' என்கிற அறைகூவலை பகத் சிங் விடுத்திருந்தார். பண்டித நேருவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸூம் அதை ஆதரித்தனர். லாகூரில் கூட இருந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திரம் கோரிக்கையை நிறைவேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது.  

      அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு லாகூர் நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது லாகூரிலுள்ள பார்ஸ்டல் சிறையில்  பகத் சிங், ராஜ குரு, சுக தேவ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். லாலா லஜபதி ராயை தாக்கியதற்கு பழிவாங்கும் நோக்கில் நடத்திய கொலைக்காக அவர்கள் மரண தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். 1929 டிசம்பர் மாதம் அதே பார்ஸ்டல் சிறையில் இன்னும் பல விடுதலைப் போராளிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். 

     சிறையில் இருந்த விடுதலைப் போராளிகள் லாகூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் பரிபூரண சுதந்திரம் தீர்மானத்தால் உற்சாகம் அடைந்திருந்தனர்.  கடுமையான தடையுத்தரவுகளையும் மீறி லாகூர் நகரம் காங்கிரஸ் மாநாட்டுக்காகவும், அதில் நிறைவேற்றப்பட இருக்கும் பூர்ண ஸ்வராஜ் தீர்மானத்தை ஆதரித்தும் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததாக பல வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 

       டிசம்பர் 30 நள்ளிரவில், ராவி நதிக்கரையில் ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றுவதாக இருக்கிறார் என்கிற செய்தியும், அங்கிருந்தபடி பூர்ண ஸ்சுவராஜ் கோஷத்தை அவர் முன்வைப்பார் என்கிற தகவலும் பார்ஸ்டல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட போராளிகளை எட்டியதும் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். தண்டனைக் கைதி ஒருவர் மூலம் பகத் சிங்கிடம் தொடர்பு கொண்டார் ஒரு போராளி. 

    அன்று நள்ளிரவில் ஜவாஹர்லால் நேரு ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடியை ஏற்றும்போது பார்ஸ்டல் சிறைச்சாலையில் உள்ள விடுதலைப் போராளிகள் அனைவரும் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும் என்கிற அந்தக் கோரிக்கையை பகத் சிங்கும் வரவேற்றார். சிறைச்சாலையில் இருந்த போராளிகள் அனைவருக்கும் தகவல் பரவியது. 

     நள்ளிரவு 12 மணி, ராவி நதிக்கரையில் பெருந்திரளான மக்கள் கூட்டத்துக்கு நடுவே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதே நேரத்தில் பார்ஸ்டல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த அத்தனை விடுதலைப் போராளிகளும் ஒரே குரலில் "வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று முழங்கத் தொடங்கினர். அங்கிருந்த காவலர்கள் அவர்களை அமைதியாக இருக்கும்படி கெஞ்சிப் பார்த்தும் விண்ணைப் பிளக்கும் அந்த கோஷம் அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒலித்தது.

      ஆச்சரியம் அதுவல்ல. லாகூர் பார்ஸ்டல் சிறைச்சாலையைப் போலவே, மேற்கு வங்கத்து அலிப்பூர் சிறைச்சாலையிலும்,  இந்தியாவின் தென்கோடியிலுள்ள கண்ணனூர் சிறையிலும், ஏனைய பல சிறைகளிலும் 1929 டிசம்பர் 31 ஆம் தேதி அதேபோல வந்தேமாதரம் கோஷம் எழுப்பப்பட்டதே, எப்படி? யார் சொல்லி அவர்களுக்குத் தகவல் போனது?

      இப்போதுபோல தகவல் தொடர்புகள் இல்லாத, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அந்த காலத்தில் விடுதலை வேட்கையும் தேசிய உணர்வும் அவர்களை இணைத்திருக்க வேண்டும்.

நன்றி : தினமணி, 31.12.2021 தலையங்கம்

30 டிசம்பர், 2021

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள்

 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள்


* நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

* நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காக, தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.

* பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக் காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.

* பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்லர்.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.

* கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.

* ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!

* 1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.

* நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.

* நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு - தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.

* நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.

* விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

* பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கலைஞர்.மு.கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.

* தொடக்கத்தில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக இயங்கிவந்தன. ஆனால், நம்மாழ்வார் ஆசைப்பட்டதாலேயே பூவுலகின் நண்பர்கள், ரிஸ்டோர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம், பெண்கள் இணைப்புக் குழு, இந்திய நல்வாழ்வு நல்லறம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு 2008 இல் தொடங்கப்பட்டது.

* 1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தன. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!

* தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

* நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.

* நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.

* தன் வாழ்நாளின் இறுதிவரை, இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

* காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

* வாழ்நாளின் பெரும்பாலான நாள்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.

* அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.

ரமணமகரிஷி பிறந்த தினம்

  ‘நான் யார்?' விடைகண்ட ரமண மகரிஷி!

            ஸ்ரீ ரமணர் மதுரைக்குக் கிழக்கே முப்பது மைல் தொலைவிலுள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் பிறந்தார். பெற்றோர்கள் சுந்தரமய்யர் அழகம்மை ஆவர். ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வேங்கட ராமன். அவருக்கு நாகசாமி என்ற மூத்த சகோதரரும் நாகசுந்தரம் என்ற இளைய சகோதரரும் உண்டு. அலமேலு இளைய சகோதரி. 

          திருச்சுழி பஞ்சாயத்துத் தலைவராயிருந்த சுந்தரமய்யர் இறந்தபோது ரமணருக்கு வயது பதினொன்று. தந்தையின் மரணம் வாழ்வு, சாவு பற்றிய உண்மையை அவருக்கு உணர்த்தியது. ரமணருக்கு விளையாட்டில் இருந்த அளவு விருப்பம் படிப்பில் இல்லாமல் போனது. தந்தையின் மறைவுக்குப் பிறகு சுந்தரமய்யரின் சகோதரர்களான சுப்பையரும், நெல்லையப்பரும் அக்குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ரமணர் மதுரையில் இருந்த சித்தப்பா சுப்பையர் வீட்டில் தங்கிப் படித்தார்.

        1896 ஜூலை மாதத்தில் ஒருநாள் வீட்டு மாடியில் இருந்த போது அவரை மரண பயம் கவ்விக் கொண்டது அவர் முழு உணர்வோடு இருந்தாலும் உடல் பிணம் போல் விறைத்துப் போனது. அவருள் ‘நான் என்பது என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. உடம்பின் செய்கையில் இருந்து வேறுபட்டு இயங்கும் ஓர் ஆற்றல் அது என்று அவர் உணர்ந்தார். அந்த உணர்வு உறுதிப்பட அவருடைய மரணபயம் நீங்கியது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாதாரண வாழ்க்கை என்பது அவருக்கு இயலாது போயிற்று. அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் ஏற்பட்டது. 

       ஒருநாள் சுப்பையரைப் பார்க்க வந்த நண்பரொருவர் தாம் திருவண்ணாமலை சென்று வந்ததையும், அருணாசலேஸ்வரர் மகிமையையும் கூறக் கேட்டார் ரமணர்.ரமணர் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவருக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது. ஸ்ரீரமணருக்கு மனம் முழுவதும் அருணாசல நினைவாயிருந்தது. திருவண்ணாமலையிலிருந்து தமக்கு அழைப்பு வந்ததாய் அவருக்குத் தோன்றியது.

        வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றார். ‘நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவரது உத்தரவின் பேரில் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்து இருக்கிறது. யாரும் இது குறித்து வருந்த வேண்டாம் என்பதே அக்கடிதத்தில் இருந்த செய்தி. தடைகள் பல கடந்து 1896 செப்டம்பர் முதலாம் நாள் அவர் திருவண்ணாமலையை அடைந்தார்.நேராக கோவில் கருவறைக்குச் சென்று ‘அப்பா, நான் வந்து விட்டேன் என்று தன் வருகையை அறிவித்தார். 

        சில மாதங்கள் உடலை மறந்து இதயத்தில் மூழ்கி இதய ஆனந்தத்தில் திளைத்தார். முழு மவுனத்தில் இருந்தார். அவ்வப்போது யாரேனும் ஒரு கவளம் உணவை அவருடைய வாயில் திணிப்பார்கள்.அவர் உணவிட்டவரையும் அறியார், தாம் உண்டதையும் அறியார். ரமணரைத் தரிசிக்க பக்தர்கள் திரள் திரளாய் வந்தனர். அது அவருடைய தியானத்துக்கு இடையூறாக இருந்தது.

       அவர் பாதாள லிங்கேசுவரர் கோயிலுக்குள் இருந்த குகையில் தியானத்தைத் தொடர்ந்தார். சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவரது பெருமை மேலும் பரவலாயிற்று. மீனாட்சி அம்மாள் என்கிற பெண்மணி அவருக்குத் தொண்டு செய்து வந்தார். பிற்பாடு ‘குருமூர்த்தம்’, ‘மாந்தோப்பு’ என்று இடம் மாறி நிஷ்டையில் இருந்தார். பல குன்றுகளிலும், குகைகளிலும் தியானம் செய்தார். 

       ரமணரின் இருப்பிடம் தேடி அவரது தாயாரும், மூத்த சகோதரரும் அவரைக் காண வந்தனர். மகான் நிலையில் இருந்தவரைக் கண்டு வியந்தனர். தங்களுடன் ஊருக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், ரமணர் அவர்களுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார். 

        கணபதி முனிவர், சிவப்பிரகாசம் பிள்ளை போன்றோர் ரமணருக்கு நெருக்கமாயினர். அருணாச்சல பஞ்சரத்னம், உபதேசசாரம், அட்சரமணி மாலை போன்ற பல நூல்களை ரமணர் இயற்றினார்.அவர் மிகவும் எளிமையானவர். பின்னாளில் ஆசிரமம் அமைத்து வசித்தபோது அங்கே பக்தர்களுக்கு உணவு சமைக்கும் வேலையிலும் உதவுவார். அவர் சிக்கனமானவர். சிறு காகிதத் துண்டையும் தூக்கி எறியாமல் ஏதாவது குறிப்புகள் எழுதப் பயன்படுத்துவார். உணவளிப்பார். பறவைகளிடத்தும் விலங்குகளிடத்தும் அன்பு காட்டி, ரமணரின் புகழ் எங்கும் பரவியது.

       வெளிநாட்டவர் பலரும் அவரைத் தரிசிக்க வந்தார்கள். உள்நாட்டிலும் சிலர் அவருடனேயே சீடர்களாய் தங்கிவிட்டனர். எல்லாருடைய சவுகரித்துக்காகவும்தான் ஆசிரமம் அமைக்கப்பட்டது.தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தீட்சை அளித்தார் ரமணர் .ரமணருடைய மூத்த சகோதரர் இறந்த பின், அண்ணி யாரும் காலமானார். இளைய சகோதரி துறவறம் மேற்கொண்டார். இளையவர் நாகசுந்தரத்தின் மனைவியும் மரித்தார்.

        அதனால் ரமணரின் தாயாரும் இளைய சகோதரரும் திருவண்ணாமலைக்கே வந்து விட்டனர். இளையவர் ‘நிரஞ்சனானந்த சுவாமிகள்’ என்கிற தீட்சா நாமத்துடன் (ரமணரால் தீட்சையளிக்கப்பெற்று) ஆசி ஆசிரமப் பொறுப்பேற்றார்.1922 மே மாதம் உடல் நலக் குறைவுற்று தாயார் இறந்த போது ரமணர் அவருக்கு ஹஸ்த தீட்சை அளித்து பிறப்பற்ற முக்தி கிடைக்கச் செய்தார். ரமணர்  ஆசிரமம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. அவருடைய நூல்களை வெளியிட்டு விற்பனை செய்ய ஆசிரமத்தில் ஒரு தனிப் பிரிவே இயங்கி வந்தது. 

      ரமணருக்கு எழுபது வயதானபோது உடம்பில் கட்டிகள் தோன்றின. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் தொந்தரவு நீங்கிய பாடில்லை. அவருடைய எழுபதாவது வயதைக் குறித்து ரமண ஜயந்தி வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டது.

       சுவாமிகள் தங்களை விட்டுப் போவதை எண்ணி பக்தர்கள் பெருந்துயரத்துக்குள்ளாயினர்.அவர் சொன்னார், ‘நான் எங்கே போவேன், இங்குதான் இருப்பேன் என்று. அன்று 16.4.1950 வெள்ளிக்கிழமை இரவு மணி 8.47. பகவான் ரமணர் மகா சமாதி அடைந்தார். 

      அவர் மரணம் அடைந்த அன்று வானில் ஒளிமிக்க விண்மீனாய் அவர் ஆன்மா ஊர்ந்து சென்றது. அருணாசலத்தின் உச்சியை அடைந்து மறைந்தது. அன்று ஆயிரக்கணக்கானவர்கள் அந்த ஜோதியைக் கண்டனர். இன்று ஒவ்வோர் இதயத்திலும் ஒளிவிடும் விளக்காய் அவர் விளங்குகிறார்.

28 டிசம்பர், 2021

ரத்தன் டாட்டா பிறந்த நாள்

  “உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!" - ரத்தன் டாட்டா

       இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபாரக் குழுமத்தை, உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலகச் சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா அவர்களின் பிறந்த நாள் இன்று.

       உலக அரங்கில், இந்தியாவின் தொழில் முகமாகப் பார்க்கப்படுபவர் ரத்தன் டாட்டா.சம்பாதித்த பணத்தில் 60 சதவிகிதத்தை மக்களுக்கான சமூகப்பணிகளுக்கு செலவிட்டு வருபவர் இவர். மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா.   

     பிறப்பிலிருந்து தற்போது வரை தாய், தந்தையர் அன்பை தவிர அளவு கடந்த செல்வம், பெயர், புகழ் என அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. முறையாகப் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். இன்றளவும், பல இந்தியர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் IBM நிறுவனத்தில் அன்றே இவருக்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்கும் போது, தன்னிடம் 'ரெஸ்யூம்' என்ற ஒன்றே இல்லை என ஒரு நாள் மேடையில் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

   இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, தாய்நாட்டிற்கே திரும்பினார். தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான, சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார். 30 வருடங்கள், டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்குப் பங்காற்றிய ரத்தன் டாடா, 1991 இல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார். 

     “எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறுவார். அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம். 

     உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். 

     ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க, உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ்.

      உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க, உலகச் சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம். தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது.

      சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் எனப் பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். விலை முன்பு சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்) , உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்குத் தலை வணங்கின.

           "நீங்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? " எனக்கேட்டதற்கு “4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன” என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் டாடா. 

   உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும், ரத்தன் டாடாவின் பங்கு அளப்பரியது.

     நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்துள்ளது டாடா.  

   “என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்” என்பார் ரத்தன் டாடா.

 அவரது சிறகுகள் இன்னும் பல்லாண்டு காலம் பல இடங்களில் விரிந்து பறக்கட்டும்!

திருபாய் அம்பானி பிறந்தநாள்

  "உன் கனவுகளை, நீ நனவாக்கத் தவறினால், பிறர், அவர்களது கனவுகளை நிறைவேற்ற, உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” 
                                                                                       - திருபாய் அம்பானி 

         50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி பிறந்த தினம் டிசம்பர் 28.

         1932 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் பிறந்தார் அம்பானி. நடுத்தரக் குடும்பம். இவரது கையில் செல்வம் புரளவில்லை. ஆனால் மனதில் நம்பிக்கையும், திறமையும் வற்றாத ஜீவநதி போல் ஊற்றெடுத்தது. தனது 16 வயதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது.

         இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளைத் துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். ஏமன் சென்ற அம்பானி, அங்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். சிறிது காலம் கழித்து அப்பெட்ரோல் பங்கிலேயே நிர்வாகம் பார்க்கத் தொடங்கினார். பின்னர் இவர் 1958 இல் இந்தியா திரும்பி, சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்கினார்.


        1958 இல் தனது நண்பர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ‘மஜின்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார் அம்பானி. 50,000 ரூபாய் முதலீட்டில் 350 சதுரடியில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். 1966 இல் இவர் ரிலையன்ஸைத் தோற்றுவித்தார். டெக்ஸ்டைல் மூலம், சந்தையில் அடியெடுத்து வைத்த ரிலையன்ஸ் அதிபர், தனது அண்ணன் மகனான விமலின் நினைவாக ‘விமல்’ என்ற பெயரில் தங்களது பொருட்களைத் தயாரித்து வெளியிட்டார். கூடிய விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானது விமல். அதன்பிறகு பாலியஸ்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்.

       லாபத்தை அதிகரிக்க, பாலியஸ்டரை, தானே தயாரிக்க நினைத்தார் அம்பானி. அதற்கான கனரக இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து பாலியஸ்டர் தொழிற்சாலையை உருவாக்கினார். உலக வங்கியிலிருந்து அத்தொழிற்சாலையை பார்க்க வந்த வல்லுநர்கள், 'வெறும் 14 மாதங்களில் இவர்கள் இத்தொழிற்சாலையை அமைத்த விதம் அபாரமானது. உலகத்தரத்தில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது' என்று சான்றளித்தனர். இதுதான் அம்பானியின் தொலைநோக்குப் பார்வை.


        1986 இல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரமிக்க வைத்தனர். பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

      1990 களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

       கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய சக்தியாய் நிற்கிறது ரிலையன்ஸ். உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது அறிவு, திறமையால் செதுக்கிய திருபாய் அம்பானி, மூளை பாதிப்பால், மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69 ஆவது வயதில் 2002-ம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

      இன்று அவரது கனவுகளை நனவாக்கும் முயற்சியில், அவரது மகன்களான,முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ஈடுபட்டு, நம் நாட்டின் பெருமையை, உலக அளவில் நிலைநாட்டி வருகின்றனர்.

27 டிசம்பர், 2021

லூயி பாஸ்டியர் (Louis Pasteur) பிறந்த நாள்

 நுண்ணுயிரியியலின் தந்தை - லூயி பாஸ்டியர் பிறந்த நாள்  

* நேரடி மருத்துவராக இல்லாமல் மருத்துவத் துறைக்கும், நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முதன்மைப் பங்களித்தவர் பிரெஞ்சு அறிஞர் லூயி பாஸ்டியர்.

* இவர் வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டில் கால்நடைகளையும் மனித குலத்தையும் நோய்கள் பிடித்து அல்லல்படுத்தின. பாஸ்டியரே தன்னுடைய மூன்றுமகள்களை டைபாய்டு நோய்க்குப் பலிகொடுத்துள்ளார். இந்தப் பின்னணியில்தான் அவருடைய கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

* அவருடைய தாய்நாடான பிரான்சில் வேளாண்மைத் துறை சந்தித்த பெரும் சவால்களைப் பாஸ்டியர்தான் களைந்தார். ஒயினை நொதிக்க வைக்கும்போது சீர்கெட்டுப் போவதற்கான காரணம், பட்டுப் புழு வளர்ப்பைப் பாதித்த பெப்ரீன் நோயிலிருந்து மீட்பு மட்டுமில்லாமல் கோழிகளைத் தாக்கிய காலரா நோய், கால்நடைகளைத் தாக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்ததற்காக, பாஸ்டியர் கொண்டாடப்படுகிறார்.

* அறிவியல் ஆய்வுகளை, ஆய்வகங்களுக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்து அவர் கண்டறியவில்லை. ஒவ்வொரு புதிய அறிவியல் சவால் அவரை அழைத்தபோதும், நேரடியாகக் களத்துக்குச் சென்றார். உரிய புரிதலைப் பெறுவதற்காக, அது சார்ந்து அனுபவம் பெற்றவர்களை, நேரில் சந்தித்தார். நேரடிக்கள ஆய்வு அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படை அம்சமாக இருந்தது. 

* அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு வெறிநாய்க் கடிக்கான சிகிச்சை ஊசியைக் கண்டறிந்ததுதான். பாஸ்டியரின் ஆராய்ச்சிக் குழு இதைக் கண்டறிவதற்கு முன்னர்வரை, வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்கள், இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததன.

* வெறிநாய் கடித்தால், அந்த நாயைப் போலவே நடந்து கொண்டு, நீருக்குப் பயந்து ஒடுங்கி இருந்து, பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். 'நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையைக் கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன.ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

* பாஸ்டியர், பல நாய்களின் பின்னால், உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்தார். நாயின் உமிழ் நீரை, தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டுப் பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயதுச் சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனைக் குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. 

தீவிரமான ஆராய்ச்சி, தொடர் உழைப்பு, துணிச்சலான முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவரது ஆராய்ச்சிகளின் அடித்தளமாக அமைந்துள்ளன. மற்றவர்களால் அவிழ்க்க முடியாத அறிவியல் புதிர்களுக்கு, தன் சிந்தனைத் திறனால் பாஸ்டியர் விடை கண்டறிந்துள்ளார். 

* அறிவியல் ஆய்வு ஒன்றையே முதன்மையாகக்கொண்டு வாழ்நாளெல்லாம் இயங்கியுள்ளார். அதேநேரம் அவருடைய வெற்றி என்பது தனிநபரின் சாதனையல்ல. அவருக்குத் துணையாக, அக்கறையான மனைவி, செயலுறுதி வாய்ந்த உதவியாளர்கள் திறம்படச் செயலாற்றி இருக்கிறார்கள். 

மது தயாரிப்பில் சில நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் விளைவுகளைத் தடுக்க, தயாரிப்பு நடைமுறையின்போது மதுவை வெப்பப்படுத்துதல், பிறகு நுண்ணுயிரிகள் வளர்வதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் செய்தல் ஆகிய நடைமுறைகளை அறிவியல்பூர்வமாகப் பரிசோதித்து, பாஸ்டியர் கண்டறிந்தார். இந்த முறை பலனளித்தது. இதுவே, பிற்காலத்தில் பாஸ்டராக்கம் (Pasteurization) என்றழைக்கப்பட்டது.

* பால் போன்ற கால்நடை உற்பத்திப் பொருள்களிலும் நுண்ணுயிரிகள் எளிதில் பெருகுகின்றன. அவற்றைத் தடைசெய்வதற்கான பதப்படுத்தும் நடைமுறையே பாஸ்டராக்கம். மகத்தான அறிவியல் வெற்றிகளைப் பெற்ற பாஸ்டியர்.

* இளம் வயதில் பிரகாசமான மாணவராக இருந்ததில்லை. கல்லூரிப் படிப்புக்குப் பிறகே பரிமளிக்கத் தொடங்கியுள்ளார். இளம் வயதில் ஓவியத்தில் ஆர்வம்கொண்டிருந்த அவர், தோல் பதனிடும் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்.

அறிவியலின் செயல்முறைகள் மீது பெருமதிப்பும், தீவிரப் பிடிப்பும் கொண்டவராகவே இருந்திருக்கிறார். மேற்கத்திய நடைமுறைப்படி இருவர் சந்தித்துக் கொள்ளும்போதும் விடைபெறும்போதும் சம்பிரதாயமாகக் கைகுலுக்கிக்கொள்வது வழக்கம். நுண்ணுயிரிகளைப் பற்றி அதிகம் அறிந்திருந்த பாஸ்டியர், அக்காலத்திலேயே, மற்றவர்களிடம் கைகுலுக்குவதை விரும்பாதவர். 

* பாஸ்டியர் இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பல செயல்பாடுகள் நகர்வதில்லை. அதேநேரம், மனித குலத்துக்கு தன்னுடைய ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, பாஸ்டியர். உருவாக்கிய புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பாஸ்டியர். இன்ஸ்டிடியூட், இன்றைக்கு உலகெங்கும் கிளைகள் பரப்பி இருக்கிறது. 

* உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது வழிவந்தவர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் ஆராய்ச்சித் துறையிலும் இன்றைக்கும் பெரும் பங்களித்து வருகின்றனர். அவரது வழிவந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். 

* இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்குப் போனது என்றால் இவரைத் திருமண நாளன்று காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கிப் போனார்கள். அங்கே எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஆய்வு செய்து கொண்டிருந்தார். 

* “உனக்கு இன்றைக்குத் திருமணம்” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். தன்னலம் மறந்து, மற்றவர்களுக்காக உழைத்தவர் லூயி பாஸ்டியர்.

26 டிசம்பர், 2021

தோழர் நல்லகண்ணு பிறந்தநாள்

 


சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) பிறந்த தினம்

 தற்கால கணினியின் தந்தை என்று போற்றப்படும், உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 26).



 * லண்டனில் (1791) பிறந்தவர். பொற்கொல்லராக இருந்த தந்தை, பின்னர் வியாபாரி, வங்கியாளராக உயர்ந்தவர்.

 *சிறுவயதில் மோசமான உடல்நிலை காரணமாக சார்லஸ், பள்ளிக்குப் போக முடியவில்லை. வீட்டுக்கே ஆசிரியர்களை வரவழைத்துக் கல்வி கற்பித்தனர்.

 * ஹோம்வுட் அகாடமியில் சிறிது காலம் பயின்றார். அங்கு நூலகத்தில் இருந்த நூல்கள், இவரிடம் கணித ஆர்வத்தைத் தூண்டின. வானியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்ட பள்ளி ஆசிரியரால், இவருக்கு அறிவியலிலும் ஆர்வம் அதிகரித்தது.

 * அல்ஜீப்ராவை ஆர்வத்துடன் கற்றார்.1810 இல் கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஏற்கெனவே பல மேதைகளின் நூல்களைப் பயின்று சுயமாக கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த இவருக்கு, அங்கு கற்பிக்கப்படும் கணிதம் ஏமாற்றம் அளித்தது.

 * நண்பர்கள் ஜே.ஹெர்ஷல், ஜி.பீகாக் உள்ளிட்ட பலருடன் இணைந்து ‘அனலிட்டிகல் சொசைட்டி’ என்ற அமைப்பை 1812இல் தொடங்கினார். கேம்ப்ரிட்ஜில் பாரம்பரியக் கற்பித்தல் முறையை மாற்றி, நவீன கணித முறைகளை அறிமுகம் செய்வதுதான் இதன் நோக்கம். இந்த அமைப்பு விரைவில் பிரபலமடைந்தது.

 * சிறந்த கணித வல்லுனராக உயர்ந்ததால், தேர்வு இல்லாமலேயே 1814 இல் இவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜில் பேராசிரியர் பதவிக்கு 3 முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டார்.

* 1827இல் தந்தையின் சொத்துகள் இவருக்கு வந்தன. அதன் பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டார். அதுவரை மறுக்கப்பட்ட பேராசிரியர் பணி தேடி வந்தது.

 * வானியலிலும் சிறந்து விளங்கினார். ராயல் கல்வி நிறுவனத்தில் வானியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் முன்னணி கணித வல்லுநர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். உலகப் புகழ்பெற்ற வானியலாளர் ஹெர்சலுடன் இணைந்து மின்காந்தவியல் குறித்து ஆராய்ந்தார்.

 * 1820 இல் வானியல் கழகம் தொடங்கப்பட உறுதுணையாக இருந்தார். கணிதம், வானியல் தொடர்பான கணிப்புகளை மேற்கொள்ள, புரோகிராம் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இறுதியாக 1835 இல் இப்படிப்பட்ட ஒரு சாதனத்தை (அனலிட்டிகல் இன்ஜின்) உருவாக்கினார்.

 * இதில் மில், ஸ்டோர் என்ற 2 பகுதிகள் இருந்தன. மில் என்பது தற்போதைய கணினிகளின் ‘சிபியூ’வுக்கு இணையானதாகவும், ‘ஸ்டோர்’ தற்போதைய கணினியின் மெமரி பகுதியாகவும் செயல்பட்டன. இதுவே இன்றைய கணினியின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. வானியல் கணிப்புகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டது.

 * இதற்காக இவருக்கு வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அனலிட்டிகல் இன்ஜின் அடிப்படையில் ‘செகண்ட் டிஃபரென்ஸ்’ என்ற இன்ஜினைக் கண்டறிந்தார். மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, ரயில்பாதையை அளவிடும் கருவி, சீரான அஞ்சல் கட்டண முறைக்கான கருவி, கிரீன்விச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளியைக் கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி உள்ளிட்ட இயந்திரங்களைக் கண்டறிந்தார்.

 * பல நூல்களை எழுதினார். இவரைப் பற்றி நூல்கள், நாவல்களும் எழுதப்பட்டன. திரைப்படங்கள், ஆவணப் படங்களும் தயாரிக்கப்பட்டன. கணிதம், கண்டுபிடிப்பு, பகுப்பாய்வு, தத்துவம் இயந்திரப் பொறியியல் எனப் பல்வேறு களங்களில் முத்திரை பதித்த சார்லஸ் பேபேஜ் 80 ஆவது வயதில் (1871) மறைந்தார்.

25 டிசம்பர், 2021

தேசிய நல் ஆளுகை (Good Governance Day ) தினம் (வாஜ்பாய் பிறந்தநாள்)

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும்  நாடு முழுவதும் தேசிய நல் ஆளுகை (Good Governance Day) தினமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

     நாடு முழுவதும், வெளிப்படையான, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்குவதில் அரசாங்கத்திற்கு உள்ள நிர்வாக அர்ப்பணிப்பைப் பற்றி மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தரநிலைப்படுத்துவதற்காகவும், நாட்டு மக்களுக்கு அதிகத் திறனுடைய, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்கிடும் வகையில் அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

     நிர்வகிப்பில் அரசுக்கு உள்ள பொறுப்புடைமையைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து அதன் மூலம் வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு இத்தினம் தோற்றுவிக்கப்ட்டது.

வாஜ்பாயியின் சாதனைகள்

   1. இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. ”நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம்” என்று கூறியவர் வாஜ்பாய். உலக நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு, இந்தியா, போக்ரான் அணு குண்டு சோதனை செய்த பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை.

  2. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% லிருந்து 70% அளவிற்கு (2012) உயர்த்தியது. இந்தச் சாதனை  ”தொலைத் தொடர்புத் துறையில் ஒரு புரட்சி” எனப்படுகிறது.

  3. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்தான் "கல்விபெறுவதற்கான உரிமைச் சட்டம்" (RTE) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றனர். கல்வித் துறையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

        4. வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போரை எதிர்கொண்டது இந்தியா. அதே போல 1999, 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளிக் காற்றுத் தாக்குதல், 2001 இல் பெரும் பூகம்பம், 2002-2003 இல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ஃப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.


     5. 1998 இல் இந்தியாவில் நேஷனல் ஹைவே டெவலப்மென்ட் பிராஜக்ட் (தங்கநாற்கர) என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய். இந்த திட்டத்தின் கீழ் 49,260 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டன. 

    நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ள வாஜ்பாய், நான்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து (உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி) வெவ்வேறு காலங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற, மக்கள் பிரதிநிதியாகத்
திகழ்ந்தார்.


24 டிசம்பர், 2021

எம்.ஜி.ஆர் நினைவு நாள்

 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி....


      இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனனுக்கும், சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர். இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்குத் திரும்ப முடிவெடுத்தார்.

       ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.

       பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு, வெள்ளித்திரை மீதே இருந்தது.

     அந்தக் காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.

     இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண், வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.

     14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.

      அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில்தான் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக, உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.


    அந்த ஒரு திருப்பத்திலேயே தனக்கான பாதை எது என்பதை உணர்ந்தவராக தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாகவும், அவை சாமானியர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்கு கைகொடுத்தவை,  கதை வசனங்கள் மற்றும் திரைப்பாடல்கள்.

     1936 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.

    எம்ஜிஆருக்குப் பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தின. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதைப்போல, இந்திய திரைப்பட வரலாற்றில், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.

    திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    1972இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். தனது புதிய கட்சி, அண்ணாவின் கோட்பாடுகளைப் பின்பற்றும் என்று அறிவித்தார் எம்ஜிஆர்.எம்ஜிஆர் தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த பள்ளிகளில் சத்துணவு, இலவச பற்பொடி, சீருடை, காலணி போன்றவை சிறார்கள் மனதில் எம்ஜிஆருக்கு ஒரு நீங்காத இடத்தை பெற்றுத்தந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் எம்ஜிஆரின் அரசியலைக் கொண்டு சேர்க்க உதவியது.

    1984இல் சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகளால் சுகவீனம் அடைந்தார் எம்ஜிஆர். அதன் பிறகு வெளிநாட்டு மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை மேற்கொண்டார்.

     பின்னர் நடந்த தேர்தலில் பிரசாரத்துக்கு செல்லாமலேயே வென்ற எம்ஜிஆர், ஆட்சியில் தொடர்ந்தபோதும், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், எம்ஜிஆரின் உயிர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிரிந்தது.

அவரது வாழ்வு 

“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? 


என்ற கேள்விக்கு விடையாக அமைந்தது.

நன்றி : பி.பி.சி

23 டிசம்பர், 2021

தேசிய விவசாயிகள் தினம் & சரண்சிங் பிறந்த தினம்

 எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்


    ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23ஆம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

        இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாளானது, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து  21 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுவதற்குத் தனிப்பட்ட காரணங்கள் உண்டு.

       பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979ஆம் ஆண்டு, இந்தியாவின் 7 ஆவது பிரதமராகப் பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தைக் கொண்டு வந்தார். அதேசமயம் நிலச்சுவான்தார்கள், வட்டிக்குப் பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.

      உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திற்குட்பட்ட நூர்பூரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தார். உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. 

      அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண்சிங் கருத்து தெரிவித்தார். சரண்சிங் அவரது குறுகிய பதவிக்காலத்தில் ஒரு நாள்கூட மக்களவையை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

      இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதையும், உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

    உத்தரப்பிரதேச மாநிலத்தில், தேசிய விவசாயிகள் தினத்தன்று அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது 

     'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர்,1987 மே 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

     'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றார், திருவள்ளுவர். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் பாரதி. அப்பெருமக்கள் போற்றிய வேளாண்மையை நாமும் போற்றுவோம். விவசாயிகள் துயர் நீக்கவும், தொழில் உயரவும், வருமானம் பெருகவும், வழிகாணவும், துணைநின்று விவசாயிகள் வாழ்வு வளம் பெற என்றும் பாடுபடுவோம்.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம் ஆனால் ஒருபோதும் அது உணவிற்கு மாற்றாக இருக்க முடியாது. எனவே, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால்தான், நாம் நிலவில் மட்டுமல்ல, எங்கும் கால் பதிக்க முடியும். இதை உணர்ந்துகொண்டு விவசாயிகளின் வியர்வைக்கும், உழைப்புக்கும் மதிப்பளித்து எந்நாளும் அவர்கள் வாழ்வு செழிக்கப்பாடுபடுவோம் என உறுதியேற்போம்.


    விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்குத் தாங்களே விலைநிர்ணயம் செய்யும் காலம்தான் விவசாயிகளின் வாழ்வில் பொற்காலமாக இருக்கும்.இடைத்தரகர்களை ஒழித்து நேரடி விற்பனையில் விவசாயிகளே இறங்கும்போது மட்டுமே,பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலைமாறி,விவசாயியின் வீட்டு வாசலில் அனைவரும் நிற்கும் காலம் வரும். இது சா(ச)த்தியம். 

முடிவு விவசாயிகள் கையில்...

22 டிசம்பர், 2021

தேசிய கணித தினம்

       ஜீரோவை, ஹீரோ ஆக்கியவர்

     1887ஆம் ஆண்டு இதே நாளில்தான், உலகம் போற்றும் ஒரு கணிதமேதை தமிழகத்தில் உருவானார். காசுக்குக் கணிதத்தை விற்றவரல்ல அவர்; தன் மூளையின் மூலதனமாக்கியவர். கணிதத்தை மனப்பாடம் செய்யாமல், மனம் மயங்கிக் கற்றவர். அவர்தான் ராமானுஜம். ஈரோட்டில் சீனிவாச ஐயங்கார், கோமளத்தம்மா தம்பதி தவமாய் தவமிருந்து பெற்ற வரம் தான் ராமானுஜம். 

ராமானுஜம் வாழ்ந்த வீடு

       குடும்பச் சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்தது ராமானுஜத்தின் குடும்பம். ராமானுஜத்தையும் வகுப்பறையில் பார்ப்பது கடினம். கோவில் மண்டபங்களில் சாக்பீஸ்கள் மூலம் பலவித கணக்குகளைப் போட்டு அதற்கு விடை காண்பார். விடையே கிடைக்காத பல கணக்குகளுக்கு, தூங்கும்போதும் கனவில் விடை கண்டுபிடிப்பார். 

     ஒருமுறை ராமானுஜத்தின் நண்பர் சாரங்கபாணி கணிதப் பாடத்தில், அவரை விட மதிப்பெண் கூடுதலாக பெற்றுவிட்டார். இதனால், அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் ராமானுஜம். அந்த அளவுக்கு எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 9ஆம் வகுப்பிலேயே பட்டப்படிப்பின் கணக்குகளுக்குத் தீர்வுகண்டதால், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவே பின்னாளில் அவர் கணித மேதையாக உயர ஊக்கம் அளித்தது என்றால் மிகையல்ல. 

     கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் படிக்கும்போது கணிதத்தின் மீது கொண்ட ஆர்வமிகுதி காரணமாக மூன்று முறை ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றார். 

     அவர்தான், பின்னாளில் கணிதத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேற்றங்களை எழுதி வியக்கவைத்தார். ஒவ்வொரு நாளும் தனது கணிதக் குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது. 

    1909 இல் திருமணமனவுடன் வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துகொண்டே ‘பெர்நெவுவியன் எண்கள்’ என்ற கணிதத்துறை பற்றிய, சிறப்புக் கட்டுரையை வெளியிட்டார். 

   இதனால் உலகமே இவரது அறிவாற்றலைக் கண்டு வியந்தது. இதை அறிந்த சென்னை துறைமுக கழகப் பொறுப்பு தலைவர் ஸ்பிரிஸ் என்ற ஆங்கிலேயர்,இவரது கணிதக் குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். இதை படித்து பார்த்து வியந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவர், இங்கிலாந்துக்கு வரும்படி ராமானுஜத்துக்கு அழைப்பு விடுத்தார். 

பேராசிரியர் ஹார்டி

      1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணித மேதைகளுடன் உரையாடினார். கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 

    அங்கு கிடைத்த உதவித்தொகை மூலம் டிரினிட்டி கல்லூரியில் பயின்றார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார். அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்து நாடு பெருமைப்படுத்தியது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஃபெலோஷிப் பதவியும் (Fellowship Of Royal Society - FRS) அவருக்கு கிட்டியது. 

        ஒருமுறை, பேராசிரியர் ஹார்டி, சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது, தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார். உடனே, சீனிவாச இராமானுசன், அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.

1729 = 10 3  + 9 3    =  12 3   +  1  

     33 வயதை கடப்பதற்குள் அவரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான். குறுகிய காலத்தில் கணித மேதை ராமானுஜம் மறைந்தாலும், அவருடைய புகழ் காலத்தை வென்று சரித்திரம் படைத்து இருக்கிறது. 

      ராமானுஜம் கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான் இன்று, அனைத்துத் துறையிலும் பயன்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. நேரு, தான் எழுதிய நூலில், ‘ராமானுஜத்தின் குறுகிய கால வாழ்வும், மரணமும் இந்தியாவின் நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவில் உண்பதற்கு உணவும், கல்வியும் ஏற்படுத்தி கொடுத்தால், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், எழுத்தாளர்களும் உருவாகி, புதிய பாரதத்தினைப் படைப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

     ஜெர்மனியும், சுவீடனும் ஆண்டு முழுவதும் கணித மேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் மாநாட்டை நடத்துகின்றன. இதன் மூலம் தமிழரின் பெருமை போற்றப்படுகிறது. 

     2012ஆம் ஆண்டு ராமானுஜரின் 125ஆவது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22 ஆம் தேதியை தேசிய கணித தினமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியும் “தேசிய கணித தினம்” கொண்டாடப்படுகிறது. 

      கணித மேதையின் பிறந்த நாளான இன்று, இளைய தலைமுறை இணையத்திலேயே செலவழிக்காமல் ராமானுஜரின் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் போற்றி, தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

21 டிசம்பர், 2021

ரேடியம் கண்டறியப்பட்ட நாள்

         அறிவியலுக்குக் கிடைத்த ஓர் அற்புதத் தனிமம்


மேரி கியூரி

      ரேடியம் என்பது கதிர்வீச்சுள்ள ஒரு தனிமம். போலந்து நாட்டைச் சேர்ந்த பிரெஞ்சு அறிவியலாளரான மேரி கியூரி, அவரது கணவர், பியரி கியூரி இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்ட் தாதுவை, தொடர்ந்து ஆய்வு செய்தார்கள். 

பியரி கியூரி

     பிட்ச்பிளென்ட் நிறைய தனிமங்களைக் கொண்ட ஒரு தனிமமாகும். போலோனியத்தைக் கண்டுபிடிப்பது சிறிது சுலபமாக இருந்தது. ஏனெனில் வேதியியல் ரீதியாக அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. மேலும் பிஸ்மத்தை ஒத்த தனிமமாக பிட்ச்பிளென்டில் இது மட்டுமே இருந்தது. 

      ஆனால் ரேடியத்தைக் கண்டுபிடிப்பதோ கடினமாக இருந்தது. ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. மேலும் பிட்ச்பிளென்டில் பேரியமே இருக்கிறது. இறுதியாக 1902இல் ஒரு டன் பிட்ச்பிளென்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குளோரைடைப் பிரித்தெடுத்தனர். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு தீவிரக் கதிர்வீச்சு கொண்ட ரேடியம் என்னும் புதிய மூலகத்தை,1898 டிசம்பர் 21 ஆம் தேதி, கண்டுபிடித்தார்கள்.

      இந்த அரிய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, இருவருக்கும் ரசாயன விஞ்ஞானத்திற்கு 1903 ல் நோபல் பரிசு கிடைத்தது.மேரி கியூரிதான் நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார். கியூரி தம்பதிகள், வேலைப்பளு அதிகம் இருந்ததால், நோபெல் பரிசை பெற்றுக்கொள்ள, ஸ்டாக்ஹோம் செல்லவில்லை. நோபெல் பரிசு பெறுபவர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்பதால் இருவரும் 1905 இல் ஸ்டாக்ஹோமிற்குச் சென்றனர். 

நோபெல் பரிசு

        ஜூலை 4,1934 இல் மேரி பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானிடோரியத்தில் பல்லாண்டுகள் கதிரியக்க வெளிப்பாடோடு பழகியதால், இரத்த சோகையால் உயிரிழந்தார். அவர் பையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் கொண்ட சோதனைக் குழாய்களை வைத்திருந்திருக்கிறார். மேலும் அவைகளை தனது மேசையிலும் வைத்திருந்திருக்கிறார். போரின் போது மருத்துவமனைகளில் ஒரு கதிரியக்கராக பணியாற்றியபோது ஒழுங்கான உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை. அதனாலும் அவருக்கு ஆபத்து நேர்ந்தது.

     மேரி கியூரி, தனது கணவர் பியரியுடன் ச்கேயுக்ஸில் புதைக்கப்பட்டார். அறுபது வருடங்களுக்கு பிறகு, 1995 ஆம் ஆண்டில், தங்கள் சாதனைகளின் நினைவாக, பாரிஸ் பாந்தியனுக்கு இருவரின் கல்லறைகளும் மாற்றப்பட்டன. இதுவரை இப்படி மரியாதை வழங்கப்பட்ட ஒரே பெண் மேரி கியூரிதான்.

      அவரது,1890 காலத்து ஆவணங்கள், கையாள மிகவும் ஆபத்தானவையாக, இன்றும் கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகள் கதிரியக்க வெளிப்பாடு கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட, அதிக கதிரியக்க வெளிப்பாடு கொண்டதாகும்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...