16 நவம்பர், 2021

தேசிய பத்திரிக்கை தினம் - நவம்பர் 16

      


   தேசிய பத்திரிக்கை தினம் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India )  தொடங்கப்பட்ட நவம்பர் 16ஆம் நாள், தேசிய பத்திரிக்கை தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

     ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கௌரவிக்க, தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

    குரலற்றவர்களின் குரலாகப் பத்திரிக்கைகள் விளங்கவேண்டும். அரசியல் விருப்பு வெறுப்பின்றி , தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல், செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்குச் சரியான பாதைகளை தெளிவுபடுத்துவது போன்ற பணிகளை பத்திரிக்கைகள் செய்யவேண்டும்.

     மக்கள் இன்னலுறும் காலங்களில், அவர்களுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்வது பத்திரிக்கைகளே. சாதி, மதம், போன்ற எந்த ஒரு சார்பும் இன்றி, நாட்டிற்கும் ,சட்டத்திற்கும், உற்ற தோழனாக விளங்கவேண்டியது பத்திரிக்கைகளே. 

 

Our liberty depends on the freedom of the press, and that cannot be limited without being lost - Thomas Jefferson

உலக சகிப்புத்தன்மை தினம் - நவம்பர் 16

         


        கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு, உலக சகிப்புத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1995ஆம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. 

        இந்த உறுதிமொழியின்படி 1996ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதி உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று, மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

       வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஓர் உறுதி மொழியை 1995ஆம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது. 

        ஒரு மனிதன் சக மனிதனை மதித்தல், அவனின் உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல், ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து,வியந்து பாராட்டி, அவர்களின் உரிமைகளில் தலையிடாமல்,ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்கிறோம். 

       இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

        மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது.

       புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது. 

      வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை நம் குழந்தைகள் மனதில் ஆழமாக ஊன்ற வேண்டியது நமது கடமை.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...