10 ஜனவரி, 2022

எழுத்தாளர் ஆர். சூடாமணி பிறந்தநாள்

         எழுத்தே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர்; சமூக முன்னேற்றத்தைத் தம் எழுத்தில் அடி நாதமாக வைத்திருந்தவர்; தன் எழுத்தின் பயன் சமூக சீர்திருத்தத்துக்கு சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர்

ஆர்.சூடாமணி

        1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராகவன், சென்னை மாநில தலைமைச் செயலராக இருந்தார். தாய் கனகவல்லி சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். பின்னாள்களில் சூடாமணி தன்னை ஓர் ஓவியராக நிலைநிறுத்திக் கொள்ள அவருடைய தாயும் காரணமாக இருந்திருக்கிறார். 

         எல்லாக் குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்ந்த சூடாமணிக்கு, ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்டச் சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தார். ஆனாலும் அம்மை நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. 

        இவரின் இயல்பான உடல் வளர்ச்சி தடைபட்டது. வளர்ச்சி குறைவான குழந்தையாகவே வளர்ந்தார். இதன் காரணமாக இவருடைய தந்தை இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. தன்னுடைய அருமை மகளுக்குப் பாடம் சொல்லித்தர ஆசிரியரை வீட்டுக்கே வரவைத்தார். கற்பதில் ஆர்வம் மிகுந்த சூடாமணி, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்று விளங்கினார். சூடாமணியின் வாசிப்புத்தளம் விரிவடைந்தது. புத்தகங்களுக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். 

         சூடாமணி 1954 முதல் எழுதினாலும், இவரது முதல் சிறுகதை "காவேரி' என்னும் பெயரில் 1957-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியாகி பாராட்டைப் பெற்றது. இக்கதைக்காக இவருக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு வெளிவந்த "மனதுக்கு இனியவள்' என்னும் நாவல் இவரை அனைவரும் அறியும்படி செய்தது. இந்நாவல் சூடாமணியின் வாழ்க்கையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. தன் வரலாற்றுச் சாயல் கொண்டது.

         உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இந்நாவலுக்கு சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது. சூடாமணி, விவேகானந்தர் மீது அளவற்ற அன்பும் காந்தியத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவராக இருந்தார். எளிமையான வெண்மைநிற ஆடைகளை அணிவதையே விரும்பினார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். 

        பெண் எழுத்தாளர் பலரை உருவாக்கிய கலைமகள் இதழ்தான் இவரையும் உருவாக்கியது. அதனால்,  “கலைமகள் எழுத்தாளர்” என்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழைத் தவிர ஆங்கிலத்திலும்  “சூடாமணி ராகவன்” என்ற பெயரில் புனைகதைகளை எழுதியுள்ளார். இவருடைய நாவலொன்று "யாமினி' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

        "சிரத்தையான எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்குமிடையே உள்ள இடைவெளியை நிரப்பியவர் சூடாமணி' என்று விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டவர். தமிழில் பெண்ணியமும் அதுசார்ந்த கோட்பாடுகளும் உருவாவதற்கு மறைமுகமாகக் களம் அமைத்துக் கொடுத்தவர் என்பதை அவரது படைப்புகளை வாசித்தவர்கள் நன்கறிவார்கள். ஆனாலும் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர். 

         சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. மனிதனின் ஆழ்மனச் சிக்கலை உளவியல் பூர்வமாக ஆராய்பவை. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்ட சூடாமணி தன் எழுத்தின் வழியே அன்பை விதைத்தவர்; உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தவர்; "உளவியல் எழுத்தாளர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

         இவர் படைத்த சிறுகதைகள்

         அந்த நேரம் (1969), இழந்த மகுடம் (1973), ஓர் இந்தியன் இறக்கிறான் (1975), ஆர். சூடாமணியின் சிறுகதைகள் (1978), உலகத்தினிடம் என்ன பயம் (1978), சுவரொட்டி (1985), அம்மா (1987), கிணறு (1991), அஸ்தமனக் கோலங்கள் (1993), காவலை மீறி (1996), ஆர். சூடாமணியின் கதைகள் (2001).

        இறுதியாகக் குறிப்பிட்டுள்ள இந்த நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது.

         பரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இவருக்கு இலக்கியச் சிந்தனை பரிசை பலமுறை இவரது கதைகள் பெற்றுத்தந்தன. இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. மும்பை தமிழ்ச் சங்க விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

         சூடாமணிக்கு 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக்கண் காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்புச் செய்தது. இத் தொகையைக்கூட பல்வேறு சேவை அமைப்புகளுக்குப் பகிர்ந்தளித்து மனநிறைவடைந்தார் சூடாமணி. 

         2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி சூடாமணி காலமானார்.அவர் விருப்பப்படி அவரின் மறைவுக்குப் பிறகு பல கோடி மதிப்புள்ள சொத்து இராமகிருஷ்ண மடத்துக்கே எழுதி வைக்கப்பட்டது. இத்தகு சிறப்பு மிகுந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...