31 அக்டோபர், 2021

இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி நினைவு நாள்

   


   செல்வச்செழிப்பும் மேற்கத்திய நாகரிகமும் நிறைந்த மோதிலால் நேருவின் இல்லமான 42 அறைகள் கொண்ட ஆனந்தபவன் மாடியில் விலை உயர்ந்த, மேற்கத்திய உடைகள், இறக்குமதி செய்யப்பட்ட மரச்சாமானங்கள், இன்னபிற ஆடம்பரப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்க காந்தி நாட்டுமக்களுக்கு விடுத்த அறை கூவலையொட்டி ஆனந்தபவனில் அரங்கேறிய இந்தக் காட்சியே சிறு குழந்தையான இந்திரா (இந்து) அறிந்துகொண்ட முதல் அரசியல் நிகழ்வு.

    1921-ல் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் அமர்ந்துகொண்டு, அலகாபாத் நீதிமன்ற நடவடவடிக்கைகளைக் கவனிக்க முயன்றுகொண்டிருந்தார் நான்கு வயது இந்திரா. அதன் இறுதியில் தாத்தாவுக்கும் தந்தைக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அதுவே அவருக்குப் பழகிவிட்டது. ஒருகட்டத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் இந்திரா, “வீட்டில் எல்லோரும் ஜெயிலுக்குப் போயிட்டாங்க” என்று பெருமிதத்தோடு சொல்லும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.

    நாட்டுக்காக ஒரு குடும்பமே சிறைச்சாலைக்குச் செல்வது பெருமைதான். ஆனால் சிறுமி இந்திராவின் வாழ்வில் நேரு குடும்பத்தின் சிறைவாசம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். அன்புசெலுத்த, அருகிலிருந்து கவனித்துக்கொள்ள, குடும்பத்தினர் யாரும் இல்லாத சூழல் அந்தச் சிறுமியின் வாழ்வில் தீராத தனிமையையும் மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்தியது. அதுவே அவரை இறுக்கமானவராகவும் மாற்றிவிட்டது. இதன் தாக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

    ஐந்து வயது முதல் பதினேழு வயதுவரையுள்ள சிறார்களைக் கொண்டு தானே உருவாக்கிய ‘வானர சேனை’யோடு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் இந்திரா. அப்பொழுது அவருக்கு 12 வயது! கடிதங்கள், ரகசிய ஆவணங்களைக் காவல்துறையின் அடக்குமுறையை மீறி தலைவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, தடியடியில் காயம்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகளின் காயங்களுக்கு மருந்திடுவது என்று நீண்டது ‘வானர சேனை’யின் பணி.

    இந்தியா விடுதலை அடைந்ததும் பிரதமர் நேருவின் வீட்டு நிர்வாகம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை மற்றும் உள்நாட்டு மதக் கலவரத்தில் அகதிகளானவர்களுக்கு காந்தியோடு சேர்ந்து பணியாற்றுதல், தனது தந்தையோடு வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்திரா ஏற்கவேண்டியிருந்தது. இது அவருக்கு அரசியல், வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திரம் தொடர்பான பயிற்சியாக அமைந்தது. அதீத கடமையுணர்ச்சியோடும் அர்ப்பணிப்போடும் இந்திரா அவற்றில் ஈடுபட்டார்.

    நேரு மரணமடைந்தபோது, ஆனந்த பவனம் தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. குடியிருக்க வீடுகூட இல்லாத நிலையில்தான் நேரு, இந்திராவை விட்டுச் சென்றிருந்தார். நேருவின் மரணத்துக்குப் பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த இந்திரா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவர்களின் வற்புறுத்தலால் சாஸ்திரி அமைச்சரவையில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரானார்.

    மூன்றாண்டுகளில் சீனா, பாகிஸ்தான் என இரண்டு போர்கள், நேரு, சாஸ்திரி இருபெரும் தலைவர்களின் மரணம், மழையின்மை, வறட்சி, உணவுப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி கையிருப்பின்மை, உலக சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாத சூழல், தானியங்களுக்கு அமெரிக்க பொதுச்சட்டம் என்று மிகவும் நெருக்கடியான, சவால்கள் மிகுந்த சூழ்நிலையிலேயே இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

    வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் சாதனைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. 

    இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு உண்டு.

    இந்தியாவின் இரும்புப் பெண்மணி, வலிமையான பிரதமர் நாட்டிற்காக 66 வயதில் தனது உயிரையே அர்ப்பணித்தார். உயிரைவிட கொள்கை முக்கியம் என்பதை நிரூபித்தார். ஆக்ஸ்போர்டில் நவீன வரலாறு படிக்கச் சென்று, முடிக்காமல் தந்தையை கவனித்துக்கொள்ள பாதியில் திரும்பிவந்த இந்திரா, தானே ஒரு வரலாறானார்!

    இந்திரா மறையும் முன்னர் கலந்து கொண்ட கூட்டத்தில், 

“I am alive today, I may not be there tomorrow. I shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen India and keep a united India alive.” என்றார்.

     இந்திராவின் மரணம், அவரின் ரத்தத்தை மட்டுமல்ல, எளியவர்களின் ரத்தத்தையும் சேர்த்தே சிந்தச்செய்தது !


தேசிய ஒற்றுமை தினம் - வல்லபபாய் படேல் பிறந்த தினம்



• ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் போன்று, இந்தியாவை ஒன்றுபடுத்தி, ஒரே நாடாகக் கட்டமைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல்.அதனால் இவரை இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கிறோம்.

• இவர், குஜராத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.

• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி, சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் இலண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டு, வக்கீல் தொழிலை உதறி, சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.

• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கரப் பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்குக் கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால், காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!

• பர்தோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாகிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அவரது பங்களிப்பால் கவரப்பட்ட காந்தியடிகளால் ‘சர்தார்’ என்று அழைக்கப் பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போயின.

• வட்டமேஜை மாநாட்டுத் தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.

"சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய்" என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

• நாடு முழுவதும், ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த போது, அத்தகைய 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான், உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.

• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக 'சகல' வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும், இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.

• இத்தகு மனவுறுதி படைத்த வல்லபபாய் படேல் தனது 75 ஆம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இவருக்காக 597 அடியில் (182 மீ) உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.

•  “இந்தியாவின் பிஸ்மார்க்”,   “இந்தியாவின் இரும்பு மனிதர்” ,  “சர்தார்” வல்லபபாய் படேலின் 146 ஆவது பிறந்தநாள் - தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒன்றுபட்ட இந்தியாவே, உலகிலுள்ள ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கும்.


Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...