27 ஜூலை, 2026

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் நினைவுநாள்

 

அப்துல் கலாம் நினைவு நாள்

ஒரு எளிய மனிதரின் உன்னத வாழ்க்கைப் பயணம்

ராமேஸ்வரத்தில் ஒரு எளிய தொடக்கம்

1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் என்ற சிற்றூரில், ஒரு சாதாரண படகோட்டியின் மகனாகப் பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம். வறுமையின் நடுவே வளர்ந்த அவர், சிறு வயதிலேயே குடும்பத்திற்கு உதவும் நோக்கில் செய்தித்தாள் விநியோகித்து படிப்புச் செலவை ஈட்டினார். கடின உழைப்பும் கற்றலின் மீதான தாகமும் அவரது இளமைக் காலத்தின் முக்கிய அடையாளங்களாக இருந்தன. தந்தையிடமிருந்து பெற்ற ஒழுக்கமும், நேர்மையும், தாயிடமிருந்து பெற்ற பரிவும், பொறுமையும் அவரது ஆளுமையை வடிவமைத்தன.

கல்வியும் இளமைக்கால வாழ்க்கையும்

ராமேஸ்வரத்தில் தொடக்கக் கல்வியை முடித்த கலாம், துவாரசேரி ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் பின்னர் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் படித்தார். இயற்பியலில் பட்டம் பெற்ற பிறகு, தனது ஆர்வத்தைப் பின்பற்றி சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் (Madras Institute of Technology) விமானப் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சகோதரியின் அணிகலன்களை அடகு வைத்து படிப்புச் செலவை ஈடுசெய்ததாக கலாமே பின்னாளில் நினைவுகூர்ந்துள்ளார். இந்த ஆரம்பகால போராட்டங்களே, எளிமையிலிருந்தும் பொறுமையிலிருந்தும் பெரிய கனவுகளை எப்படி நனவாக்குவது என்பதை அவருக்குக் கற்றுக் கொடுத்தன.

அறிவியல் பயணத்தின் தொடக்கம்

பொறியியல் படிப்பை முடித்த பிறகு, 1960 -களின் தொடக்கத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தார். இந்திய விமானப் படைக்காக ஒரு சிறிய ஹோவர்கிராஃப்ட் வடிவமைப்பதில் ஈடுபட்ட அவர், தொழில்நுட்பத் துறையில் தன் முதல் அடிகளை எடுத்து வைத்தார். இக்காலகட்டத்தில் அவர் பெற்ற அனுபவம், பின்னாளில் அவரை இந்தியாவின் மிக முக்கியமான விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை வழிநடத்தும் நிலைக்கு அழைத்துச் சென்றது.

விண்வெளித் துறையில் ஒரு பாய்ச்சல்

1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) மாற்றப்பட்ட கலாம், நாட்டின் முதல் செயற்கைக்கோள் ஏவுகணையான SLV-III திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். பல தோல்விகளுக்குப் பிறகு, 1980ஆம் ஆண்டு ரோஹினி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி, இந்தியாவை, விண்வெளி நுழைவுத் திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் இணைத்தார். இது இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

மிசைல் மேன் ஆஃப் இந்தியா

1980-களின் நடுப்பகுதியில் மீண்டும் DRDO -விற்குத் திரும்பிய கலாம், ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணைத் திட்டத்தின் (Integrated Guided Missile Development Programme) தலைவராகப் பணியாற்றினார். இதன் விளைவாக அக்னி, பிருத்வி போன்ற முக்கிய ஏவுகணைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டு பொக்ரானில் நடைபெற்ற அணுசக்தி சோதனைகளிலும் அவர் முக்கியப் பங்காற்றி, இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்றுவதில் துணைபுரிந்தார். இந்தச் சாதனைகளின் காரணமாகவே அவர் "மிசைல் மேன் ஆஃப் இந்தியா" என்று உலகறியப் பட்டார்.

தேசிய அறிவியல் ஆலோசகராக

1999 முதல் 2001 வரை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும், டி.ஆர்.டி.ஓவின் செயலராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவர், இந்தியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தன் கனவை "இந்தியா 2020" (1998) எனும் நூலில் விரிவாக முன்வைத்தார். இதே காலகட்டத்தில் அவர் எழுதிய "Wings of Fire" (1999) என்ற சுயசரிதை, அவரது வாழ்க்கைப் பயணத்தையும் கொள்கைகளையும் உலகறியச் செய்தது.

குடியரசுத் தலைவர் பதவியில்

2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற கலாம், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட "மக்கள் தலைவர்" (People's President) என்ற அடையாளத்தைப் பெற்றார். மாணவர்களுடன் நேரடியாக உரையாடுவதிலும், அவர்களது கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளிப்பதிலும் அவர் தனிப்பட்ட மகிழ்ச்சி கண்டார். 2007 வரை இப்பதவியில் இருந்த அவர், தேசத் தலைமையை, எளிமையுடனும் நேர்மையுடனும் நிறைவேற்றிக் காட்டினார்.

பதவிக்குப் பின்னரான ஆசிரியப் பணி

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகும், அவர் தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களுடன் நேரடியாகப் பேசி அவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் "Ignited Minds", "The Luminous Sparks" போன்ற பல நூல்களை எழுதி, இளைஞர்களின் மனங்களில் அறிவார்ந்த தீப்பொறியை ஏற்றினார்.

எளிமையும் விழுமியங்களும்

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை முறை, அவரது சிந்தனைகளைப் போலவே எளிமையானதாக இருந்தது. குடியரசுத் தலைவராக இருந்தபோதும், அவர் தனிப்பட்ட உடைமைகளை மிகக் குறைவாகவே வைத்திருந்தார். திருமணம் செய்து கொள்ளாமல், தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும் இளைஞர்களுக்காகவும் அர்ப்பணித்தார்இசை கேட்பதிலும், வீணை வாசிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, குரானையும் பகவத் கீதையையும் ஒரே மதிப்புடன் படித்தார்.

இறுதி நாளும் நிரந்தர நினைவும்

2015 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் "வாழக்கூடிய கிரகத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதே காலமானார். ஓர் ஆசிரியனாகவே தன் வாழ்க்கையை நிறைவு செய்தார் என்பது, அவரது கல்விப் பணிக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் இந்நாளில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அவரை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அவரது கொள்கைகளைப் பின்பற்ற இளைஞர்கள் உறுதி பூணுகின்றனர்.

சாதனைகள் ஒரு பார்வையில் (துறை வாரியாக)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

     இஸ்ரோவில் SLV-III திட்ட இயக்குநராகப் பணியாற்றி, 1980ல் ரோஹினி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தினார்.

     டி.ஆர்.டி.ஓவில் அக்னி, பிருத்வி ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

     1998ல் பொக்ரான் அணுசக்தி சோதனைகளில் முக்கியப் பங்காற்றினார்.

     "மிசைல் மேன் ஆஃப் இந்தியா" என்ற பட்டம் பெற்றார்.

அரசியல் மற்றும் தலைமைத்துவத் துறை

     2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.

     கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட "மக்கள் தலைவர்" என்ற அடையாளத்தைப் பெற்றார்.

கல்வி மற்றும் ஆசிரியத் துறை

     IIT, IIM உள்ளிட்ட நிறுவனங்களில் மாணவர்களுக்கு விரிவுரைகள் வழங்கினார்.

     நாடு முழுவதும் இளைஞர்களைச் சந்தித்து அறிவியல் கல்வியை ஊக்குவித்தார்.

     ஷில்லாங்கில் விரிவுரை வழங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே காலமானார்.

இலக்கியத் துறை

     "Wings of Fire" எனும் சுயசரிதை பன்னாட்டு அளவில் பாராட்டைப் பெற்றது.

     "இந்தியா 2020" நூலில் வளர்ந்த நாடாக மாறும் திட்டத்தை விவரித்தார்.

     "Ignited Minds", "The Luminous Sparks" உள்ளிட்ட நூல்களை எழுதினார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

     1981 — பத்ம பூஷண் விருது.

     1990 — பத்ம விபூஷண் விருது.

     1997 — பாரத ரத்னா, இந்தியாவின் மிக உயரிய குடிமக்கள் விருது.

     உலகின் பல பல்கலைக்கழகங்களால் கௌரவ முனைவர் பட்டங்கள்.

18 ஜூலை, 2026

புதிய ஹைட்ரஜன் ரயிலில் என்ன புதுமைகள்?

 

ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது 
சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம்

            இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் பதிவாகியுள்ளது. ஜூலை 17, 2026 அன்று, ஹரியானா மாநிலம் வடக்கு ரயில்வேயின் ஜிண்ட்-சோனிபட் பிரிவில் (89 கி.மீ.) இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. "Make in India" முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ரயில், சுத்தமான ரயில் போக்குவரத்தின் சாத்தியக்கூறை மதிப்பிடும் ஒரு முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளது. இதன் மூலம், ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்த ஹைட்ரஜன் ரயிலில் என்ன புதுமை ?

            உலகளவில் ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் கடந்த 7–8 ஆண்டுகளாகவே உருவாகி வருகிறது; தற்போது ஒரு சில நாடுகளில் மட்டுமே இது கடைப்பிடிக்கப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்யும் இந்த ரயில்கள், அதிக மின்சாரத் தொடர்புக் கம்பிகள் (electrification) இல்லாமலேயே இயங்கும் திறன் கொண்டவை. 

        இந்தியாவின் புதிய ரயில் உலகிலேயே மிக அதிக ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் ரயிலாகும்
— 3,200 குதிரைத் திறன் (3200 HP) கொண்ட எஞ்சின் மற்றும் 10 கோச்சுகளுடன் இயங்குகிறது. வெளிநாடுகளில் பொதுவாக 3–4 கோச்சுகள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய ரயில் தனது முதல் முயற்சியிலேயே அதிக நீளத்துடன் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் 1,200 கிலோவாட்(1200 KV) திறன் கொண்ட எரிபொருள் செல் (fuel cell) அமைப்பால் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் (வடிவமைப்பு வேகம் 110 கி.மீ.) சுமார் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மேலும், 3,000 கிலோகிராம் ஹைட்ரஜனைச் சேமிக்கக்கூடிய அமைப்பும் இதில் உள்ளது.

விஞ்ஞான அடிப்படையில் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது ?

ஹைட்ரஜன் ரயிலின் இயக்கத்தை ஐந்து அறிவியல் படிநிலைகளாகப் புரிந்துகொள்ளலாம்:

1. ஹைட்ரஜன் சேமிப்பு ஹைட்ரஜன் (H₂) வாயு 350–700 பார் அளவு மிக உயர்ந்த அழுத்தத்தில் சிறப்பு டேங்குகளில் சேமிக்கப்பட்டு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது.

2. எரிபொருள் செல் வினை (Fuel Cell)சேமிக்கப்பட்ட ஹைட்ரஜன், எரிபொருள் செல் அமைப்புக்கு அனுப்பப்படுகிறது. அங்கு ஹைட்ரஜனும் (H₂) காற்றிலிருந்து பெறப்படும் ஆக்சிஜனும் (O₂) ஒரு மின்வேதியியல் வினையில் இணைகின்றன. இந்த வினையின் விளைபொருளாக மின்சக்தியும், தண்ணீரும் (H₂O) மட்டுமே உருவாகின்றன வேறு எந்த கழிவும் இல்லை.

3. மின் சக்தி சேமிப்பு — இவ்வாறு உற்பத்தியாகும் மின்சக்தி, ரயிலின் பேட்டரி அமைப்பில் சேமிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப கூடுதல் சக்தி பேட்டரியில் தேக்கி வைக்கப்பட்டு, அதிக ஆற்றல் தேவைப்படும் நேரங்களில் (உதாரணமாக ஏற்றம், விரைவான முடுக்கம்) பயன்படுத்தப்படுகிறது.

4. மின் மோட்டார் இயக்கம் சேமிக்கப்பட்ட அல்லது உடனடியாக உற்பத்தியாகும் மின்சக்தி, மோட்டாரை இயக்கி, அதன் மூலம் ரயிலின் சக்கரங்களைச் சுழற்றுகிறது.

5. வெளியேறும் ஒரே கழிவு தண்ணீர் இந்த முழு செயல்முறையிலும் வெளிப்படும் ஒரே பொருள் தண்ணீர் (H₂O) மட்டுமே. இதனால், டீசல் இயந்திரங்களைப் போலவே புகை, கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், துகள் மாசு போன்றவை இதில் இருந்து வெளியேறுவதில்லை.

இந்த முன்னெடுப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

            இந்தியாவின் தூய்மையான போக்குவரத்து நோக்கிய நகர்வில் இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. மின்சாரத் தொடர்புக் கம்பிகள் இல்லாத (non-electrified) ரயில்வே பாதைகளிலும் இந்த ரயில் இயங்கக்கூடும் என்பதும், டீசல் ரயில்களை விட அமைதியாக இயங்குகிறது என்பதும் இதன் முக்கிய அம்சங்களாகும்.

இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தில் சில சவால்களும் உள்ளன:

- பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) உற்பத்தி இன்னும் விலை உயர்ந்ததாகவே உள்ளது.

- ஹைட்ரஜனை நிரப்பும் உள்கட்டமைப்பு தற்போது வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது.

- ஹைட்ரஜனை உயர் அழுத்தத்தில் பாதுகாப்பாக சேமிப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கலானது.

- டீசல் ரயில்களை விட ஆரம்பகட்ட முதலீட்டுச் செலவு அதிகமாக உள்ளது.

            இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, ஹைட்ரஜன் இயங்கும் ரயில் வலையமைப்புக்கு தனித்துவமான உள்கட்டமைப்பும், பராமரிப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன வழக்கமான ரயில் பாதைகளிலிருந்து இது வேறுபடுகிறது. இதற்கான தொழிற்சாலைகள் மற்றும் துணை வசதிகளை உருவாக்குவது ஹரியானாவின் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் ஹைட்ரஜன் ரயில்கள்

            ஜெர்மனி நாடு 2018-ஆம் ஆண்டிலேயே உலகின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் பயணிகள் ரயிலை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளன. இப்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

அடுத்த கட்டம் என்ன?

            தற்போது சோனிபட்-டெல்லி பிரிவில் இந்த ரயிலை மேலும் சோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மரபு சுற்றுலா தளங்கள் (heritage routes) மற்றும் சுற்றுலா பயணிகள் பாதைகளிலும் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சாத்தியக்கூறு ஆராயப்பட்டு வருகிறது.

தயாரிப்பின் தரம்

            ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலுக்கு தேவைப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் 40% அளவை வழங்கியுள்ளது. ஜிண்டாலின் , ஜெய்ப்பூர் மற்றும் ஹிஸார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உயர்ரக ஆஸ்டெனிடிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தரம் X5CrNi1810, இந்த ரயிலின் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலச் செயல்பாடுகள்

            ஹைட்ரஜன் தொழில்நுட்பம், எரிபொருள் எரிப்பதன் மூலம் மாசு உண்டாகும் பாரம்பரிய முறைக்கு பதிலாக, ஒரு சுத்தமான, அறிவியல் அடிப்படையிலான தீர்வை முன்வைக்கிறது. 
            

ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து மின்சக்தியையும் தண்ணீரையும் மட்டுமே உருவாக்கும் இந்த எளிய வேதியியல் கொள்கை, இப்போது இந்திய ரயில்வேயின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாக மாறியுள்ளது. 

            இது இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தாலும்
, சுத்தமான, அமைதியான, நீடித்த போக்குவரத்து முறை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இது ஒரு முக்கியமான முதல் அடியாகக் கருதப்படுகிறது.

தகவல் உதவி

14 ஜூலை, 2026

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - நாமே பதிவு செய்யலாம்

 

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027

நம் விவரங்களை நாமே பதிவு செய்வோம் (Self Enumeration)

            இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்டமாக, குடிமக்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் நேரடியாகப் பதிவு செய்யும் "Self Enumeration" வசதி தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.

எப்படிப் பயன்படுத்துவது?

            கீழே உள்ள இணையதளத்தில் நுழைந்து, கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து, நம் விவரங்களைப் பதிவு செய்யலாம். பதிவு முடிந்தவுடன் கிடைக்கும் Self Enumeration ID-ஐ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த ID-ஐ மட்டும் தெரிவித்தால் போதும் — 33 கேள்விகளுக்கான பதில்களும் அவருக்குக் கிடைத்துவிடும், மீண்டும் அனைத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

முழு விவரங்களையும் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

https://youtu.be/LQ640zAyroY?si=rU2_D40UtooE90CJ

🔗 பதிவு செய்ய: https://se.census.gov.in/

📅 தமிழ்நாட்டில் பதிவு செய்யவேண்டிய கடைசி நாள்: ஜூலை 31, 2026

பிரபலமான இடுகைகள்