18 ஜூலை, 2026

புதிய ஹைட்ரஜன் ரயிலில் என்ன புதுமைகள்?

 

ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது 
சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம்

            இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் பதிவாகியுள்ளது. ஜூலை 17, 2026 அன்று, ஹரியானா மாநிலம் வடக்கு ரயில்வேயின் ஜிண்ட்-சோனிபட் பிரிவில் (89 கி.மீ.) இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. "Make in India" முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ரயில், சுத்தமான ரயில் போக்குவரத்தின் சாத்தியக்கூறை மதிப்பிடும் ஒரு முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளது. இதன் மூலம், ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்த ஹைட்ரஜன் ரயிலில் என்ன புதுமை ?

            உலகளவில் ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் கடந்த 7–8 ஆண்டுகளாகவே உருவாகி வருகிறது; தற்போது ஒரு சில நாடுகளில் மட்டுமே இது கடைப்பிடிக்கப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்யும் இந்த ரயில்கள், அதிக மின்சாரத் தொடர்புக் கம்பிகள் (electrification) இல்லாமலேயே இயங்கும் திறன் கொண்டவை. இந்தியாவின் புதிய ரயில் உலகிலேயே மிக அதிக ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் ரயிலாகும் — 3,200 குதிரைத் திறன் (3200 HP) கொண்ட எஞ்சின் மற்றும் 10 கோச்சுகளுடன் இயங்குகிறது. வெளிநாடுகளில் பொதுவாக 3–4 கோச்சுகள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய ரயில் தனது முதல் முயற்சியிலேயே அதிக நீளத்துடன் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் 1,200 கிலோவாட்(1200 KV) திறன் கொண்ட எரிபொருள் செல் (fuel cell) அமைப்பால் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் (வடிவமைப்பு வேகம் 110 கி.மீ.) சுமார் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மேலும், 3,000 கிலோகிராம் ஹைட்ரஜனைச் சேமிக்கக்கூடிய அமைப்பும் இதில் உள்ளது.

விஞ்ஞான அடிப்படையில் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது ?

ஹைட்ரஜன் ரயிலின் இயக்கத்தை ஐந்து அறிவியல் படிநிலைகளாகப் புரிந்துகொள்ளலாம்:

**1. ஹைட்ரஜன் சேமிப்பு** ஹைட்ரஜன் (H₂) வாயு 350–700 பார் அளவு மிக உயர்ந்த அழுத்தத்தில் சிறப்பு டேங்குகளில் சேமிக்கப்பட்டு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது.

**2. எரிபொருள் செல் வினை (Fuel Cell)** — சேமிக்கப்பட்ட ஹைட்ரஜன், எரிபொருள் செல் அமைப்புக்கு அனுப்பப்படுகிறது. அங்கு ஹைட்ரஜனும் (H₂) காற்றிலிருந்து பெறப்படும் ஆக்சிஜனும் (O₂) ஒரு மின்வேதியியல் வினையில் இணைகின்றன. இந்த வினையின் விளைபொருளாக மின்சக்தியும், தண்ணீரும் (H₂O) மட்டுமே உருவாகின்றன வேறு எந்த கழிவும் இல்லை.

**3. மின் சக்தி சேமிப்பு** இவ்வாறு உற்பத்தியாகும் மின்சக்தி, ரயிலின் பேட்டரி அமைப்பில் சேமிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப கூடுதல் சக்தி பேட்டரியில் தேக்கி வைக்கப்பட்டு, அதிக ஆற்றல் தேவைப்படும் நேரங்களில் (உதாரணமாக ஏற்றம், விரைவான முடுக்கம்) பயன்படுத்தப்படுகிறது.

**4. மின் மோட்டார் இயக்கம்** சேமிக்கப்பட்ட அல்லது உடனடியாக உற்பத்தியாகும் மின்சக்தி, மோட்டாரை இயக்கி, அதன் மூலம் ரயிலின் சக்கரங்களைச் சுழற்றுகிறது.

**5. வெளியேறும் ஒரே கழிவு தண்ணீர்** இந்த முழு செயல்முறையிலும் வெளிப்படும் ஒரே பொருள் தண்ணீர் (H₂O) மட்டுமே. இதனால், டீசல் இயந்திரங்களைப் போலவே புகை, கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், துகள் மாசு போன்றவை இதில் இருந்து வெளியேறுவதில்லை.

இந்த முன்னெடுப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

            இந்தியாவின் தூய்மையான போக்குவரத்து நோக்கிய நகர்வில் இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. மின்சாரத் தொடர்புக் கம்பிகள் இல்லாத (non-electrified) ரயில்வே பாதைகளிலும் இந்த ரயில் இயங்கக்கூடும் என்பதும், டீசல் ரயில்களை விட அமைதியாக இயங்குகிறது என்பதும் இதன் முக்கிய அம்சங்களாகும்.

இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தில் சில சவால்களும் உள்ளன:

- பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) உற்பத்தி இன்னும் விலை உயர்ந்ததாகவே உள்ளது.

- ஹைட்ரஜனை நிரப்பும் உள்கட்டமைப்பு தற்போது வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது.

- ஹைட்ரஜனை உயர் அழுத்தத்தில் பாதுகாப்பாக சேமிப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கலானது.

- டீசல் ரயில்களை விட ஆரம்பகட்ட முதலீட்டுச் செலவு அதிகமாக உள்ளது.

            இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, ஹைட்ரஜன் இயங்கும் ரயில் வலையமைப்புக்கு தனித்துவமான உள்கட்டமைப்பும், பராமரிப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன வழக்கமான ரயில் பாதைகளிலிருந்து இது வேறுபடுகிறது. இதற்கான தொழிற்சாலைகள் மற்றும் துணை வசதிகளை உருவாக்குவது ஹரியானாவின் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் ஹைட்ரஜன் ரயில்கள்

            ஜெர்மனி நாடு 2018-ஆம் ஆண்டிலேயே உலகின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் பயணிகள் ரயிலை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளன. இப்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

அடுத்த கட்டம் என்ன?

            தற்போது சோனிபட்-டெல்லி பிரிவில் இந்த ரயிலை மேலும் சோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மரபு சுற்றுலா தளங்கள் (heritage routes) மற்றும் சுற்றுலா பயணிகள் பாதைகளிலும் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சாத்தியக்கூறு ஆராயப்பட்டு வருகிறது.

தயாரிப்பின் தரம்

            ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலுக்கு தேவைப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் 40% அளவை வழங்கியுள்ளது. ஜிண்டாலின் , ஜெய்ப்பூர் மற்றும் ஹிஸார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உயர்ரக ஆஸ்டெனிடிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தரம் X5CrNi1810, இந்த ரயிலின் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலச் செயல்பாடுகள்

            ஹைட்ரஜன் தொழில்நுட்பம், எரிபொருள் எரிப்பதன் மூலம் மாசு உண்டாகும் பாரம்பரிய முறைக்கு பதிலாக, ஒரு சுத்தமான, அறிவியல் அடிப்படையிலான தீர்வை முன்வைக்கிறது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து மின்சக்தியையும் தண்ணீரையும் மட்டுமே உருவாக்கும் இந்த எளிய வேதியியல் கொள்கை, இப்போது இந்திய ரயில்வேயின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாக மாறியுள்ளது. இது இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தாலும், சுத்தமான, அமைதியான, நீடித்த போக்குவரத்து முறை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இது ஒரு முக்கியமான முதல் அடியாகக் கருதப்படுகிறது.

தகவல் உதவி



14 ஜூலை, 2026

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - நாமே பதிவு செய்யலாம்

 

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027

நம் விவரங்களை நாமே பதிவு செய்வோம் (Self Enumeration)

            இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்டமாக, குடிமக்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் நேரடியாகப் பதிவு செய்யும் "Self Enumeration" வசதி தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.

எப்படிப் பயன்படுத்துவது?

            கீழே உள்ள இணையதளத்தில் நுழைந்து, கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து, நம் விவரங்களைப் பதிவு செய்யலாம். பதிவு முடிந்தவுடன் கிடைக்கும் Self Enumeration ID-ஐ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த ID-ஐ மட்டும் தெரிவித்தால் போதும் — 33 கேள்விகளுக்கான பதில்களும் அவருக்குக் கிடைத்துவிடும், மீண்டும் அனைத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

முழு விவரங்களையும் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

https://youtu.be/LQ640zAyroY?si=rU2_D40UtooE90CJ

🔗 பதிவு செய்ய: https://se.census.gov.in/

📅 தமிழ்நாட்டில் பதிவு செய்யவேண்டிய கடைசி நாள்: ஜூலை 31, 2026

13 ஜூலை, 2026

காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள்

                                 காமராஜர்
மறக்க முடியாத மனிதநேய வரலாறு

    ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு வரும்காமராஜர். 1903-ஆம் ஆண்டு இந்த நாளில் விருதுநகரில், தேங்காய் வணிகராக இருந்த குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு, குலதெய்வமான காமாட்சியின் பெயரையும், "ராசா" என்ற செல்லப்பெயரையும் இணைத்து காமராசா என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் காமராசர் என மாறி, இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தின் அடையாளமாக நிலைத்து நிற்கிறது.

எளிய தொடக்கம், கடினமான சூழல்

    காமராஜரின் குழந்தைப் பருவம் சுகமானதாக இருக்கவில்லை. அவருக்கு வெறும் ஆறு வயதே ஆனபோது தந்தை இறந்துவிட்டார். குடும்பத்தைக் காப்பாற்ற ,தாயார் தன் நகைகளை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏனாதி நாராயண வித்யாசாலையில் தொடங்கிய அவரது படிப்பு, குடும்பச் சூழலால் ஆறாம் வகுப்புடன் நின்றுவிட்டது. அதன் பிறகு மாமாவின் துணிக்கடையில் உதவியாளராகச் சேர்ந்தார். "படிக்காத மேதை" என்று பின்னாளில் அவர் அழைக்கப்பட்டதற்கு , இந்த ஆரம்பகால வாழ்க்கையே அடிப்படை.  படிப்பு குறைவாக இருந்தாலும், மனிதர்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலிலும், நிர்வாகத் திறமையிலும் அவர் நிகரற்றவராகத் திகழ்ந்தார் என்பதே வரலாறு அளிக்கும் ஆச்சரியச் செய்தி.

சுதந்திரப் போராட்டத்தில் இளைஞன்

    1919-ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் அறிமுகத்தின் மூலம் தேசிய இயக்கத்தில் இணைந்த காமராஜர், அன்றிலிருந்து முழுநேர சுதந்திரப் போராட்ட வீரராக மாறினார். 1930-ஆம் ஆண்டு ,உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார். பின்னரும் பல்வேறு தேசிய இயக்கப் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைத்தண்டனை அனுபவித்தார். இந்தச் சிறைவாசக் காலங்களே அவரை ஒரு கடின உழைப்பாளியாகவும், மக்கள் மனங்களை அறிந்த தலைவராகவும் வடிவமைத்தன.

முதலமைச்சராக.....

    1954-ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர், சுமார் ஒன்பது ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். அந்தக் காலகட்டம்  தமிழக அரசியலின் பொற்காலம்" என்றே இன்றும் போற்றப்படுகிறது

ஏழை மாணவர்கள், பள்ளிக்குச் செல்லத் தயங்கியதை உணர்ந்த அவர், இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார்இது இன்று வரை தமிழக அரசுப் பள்ளிகளின் அடையாளமாக நீடிக்கும் ஒரு புரட்சிகரத் திட்டம். குழந்தைகள் தடையின்றிக் கல்வி பயில, ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார், கல்வியறிவு விகிதத்தைக் கணிசமாக உயர்த்தினார். இதனாலேயே அவர் "கல்விக் கண் திறந்த காமராஜர்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இன்றும் அவரது பிறந்தநாளான ஜூலை 15, தமிழ்நாடு அரசால் "கல்வி வளர்ச்சி நாள்" எனக் கொண்டாடப்படுகிறது.

தொழில் வளர்ச்சி

    கல்வியோடு நிற்காமல், தொழில் வளர்ச்சியிலும் காமராஜர் தீவிரமாக ஈடுபட்டார். நெய்வேலி லிக்னைட் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF), திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (BHEL), கல்பாக்கம் அணுமின் நிலையம், ஊட்டி புகைப்படப் படச்சுருள் தொழிற்சாலை(HPF) போன்ற பெரும் திட்டங்களை உருவாக்கி, தமிழகத்தை தொழில் வளர்ச்சியிலும் முன்னெடுத்துச் சென்றார்.

முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள்


    காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் (1954-1963) விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கியமான நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீரைச் சேகரித்து, வறண்ட பகுதிகளுக்குத் திருப்பும் நோக்கில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் (Parambikulam - Aliyar Project - PAP) இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. கேரளம், தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே 1958-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளுக்கு நீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக பின்னர் மாறியது. இதேபோல, தென் தமிழகத்தில் வைகை அணை கட்டப்பட்டு மதுரை, விருதுநகர் பகுதிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் அமராவதி அணையும், தருமபுரி பகுதியில் சாத்தனூர் அணையும் இக்காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு நிலையான நீர் ஆதாரத்தை உறுதி செய்தன. கல்வி, தொழில் வளர்ச்சியுடன் இணைந்து, இந்த நீர்ப்பாசனத் திட்டங்களும் காமராஜரின் ஆட்சிக் காலத்தை தமிழக வேளாண் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாற்றின.

எளிமையின் வடிவம்

    பதவி உச்சத்தில் இருந்தபோதும் காமராஜர் தன் எளிமையை ஒருபோதும் இழக்கவில்லை. வெள்ளை கதர் சட்டையும் , வேட்டியும் மட்டுமே அவரது உடை. எளிய உணவே அவரது தேர்வு. அரசு அளிக்கும் சிறப்புச் சலுகைகளை மறுத்தார். இந்த நேர்மையும் எளிமையும் காரணமாகவே மக்கள் அவரை அன்போடு "கருப்பு காந்தி" என்று அழைத்தனர். அதிகாரம் மனிதனை மாற்றும் என்பது பொதுவான நம்பிக்கை என்றாலும், காமராஜர் அதற்கு விதிவிலக்காக வாழ்ந்து காட்டியவர்.

காமராஜ் திட்டம்
தன்னலமற்ற தியாகம்

    1963-ஆம் ஆண்டு காமராஜர் ஒரு அபூர்வமான முடிவை எடுத்தார். கட்சியை பலப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் பதவியையும் தன் அரசியல் அதிகாரங்களையும் தானாக முன்வந்து துறந்தார். இந்த "காமராஜ் திட்டம்" ( K – PLAN ) என்று அழைக்கப்பட்ட நடவடிக்கையால் பல மூத்த தலைவர்கள் அரசு பதவிகளை விட்டு அமைப்புப் பணிகளில் கவனம் செலுத்தினர். தனிப்பட்ட அதிகாரத்தைத் தியாகம் செய்து , கட்சியை வலுப்படுத்திய இந்த முடிவு, இந்திய அரசியல் வரலாற்றிலேயே, ஓர் அரி உதாரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின்
"கிங்மேக்கர்"

    பதவியில் இல்லாமலேயே காமராஜர் இந்திய தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். 1964-ஆம் ஆண்டு நேரு மறைவுக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்குவதில் அவரது பங்கு முக்கியமானது. 1966-ஆம் ஆண்டு சாஸ்திரியின் திடீர் மறைவுக்குப் பின், இந்திரா காந்தியை பிரதமராக்கியதிலும் காமராஜரின் முடிவே தீர்க்கமானதாக இருந்தது. இரு பிரதமர்களை உருவாக்கிய இந்தத் திறமை காரணமாகவே அவர் "இந்தியாவின் கிங்மேக்கர்" என்று போற்றப்படுகிறார். எதிர்த்தவர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் பண்பும், அரசியலில் வீண் பூசல்களைத் தவிர்க்க வேண்டும் என்ற அவரது கருத்தும் அரசியல்வாதிகளுக்கு, ஓர் இன்றியமையாத பாடமாகும்.

11 ஜூலை, 2026

WORLD POPULATION DAY - JULY 11

 

       உலக மக்கள்தொகை தினம் - ஜூலை 11

    ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலகம் முழுவதும் "உலக மக்கள்தொகை தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு (UNDP) இந்நாளைத் தொடங்கி வைத்தது.

    1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியைத் தொட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள், குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், தாய் மற்றும் சேய் நல்வாழ்வு, இளைஞர் உரிமைகள் போன்ற முக்கியத் தலைப்புகளின்மீது உலக கவனத்தை ஈர்ப்பதே இந்நாளின் நோக்கமாகும்.

சமீபத்திய நிலவரம்

    2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உலக மக்கள்தொகை 8000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியா, சீனாவை முந்திக்கொண்டு இன்று உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. இது நமக்குப் பெருமை மட்டுமல்ல, பெரும் பொறுப்பையும் சேர்த்தே தருகிறது. உணவு உற்பத்தி, ,இருப்பிடம், குடிநீர் வளம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை இத்தனை பேருக்கும் சமமாக வழங்குவது எளிதான காரியமல்ல.

    சுவாரசியமாக, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், உலகளவில் மெதுவாகக் குறைந்து வருகிறது. ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகள் மக்கள்தொகைக் குறைவால் அவதிப்படும் நிலையில், ஆப்பிரிக்கக் கண்டம் இன்னும் அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் தென் மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கிட்டத்தட்ட நிலைப்புத் தன்மையை அடைந்துவிட்ட நிலையில், வடமாநிலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி விகிதம் காணப்படுகிறது.

சவால்களும் வாய்ப்புகளும்

    மக்கள்தொகை பெருக்கம் ஒரு பக்கம் சவால்களை உருவாக்கினாலும், மறுபக்கம் "மக்கள்தொகைப் பயன்" (Demographic Dividend) எனும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தியாவின் சராசரி வயது இன்று 28 - க்கும் குறைவாக உள்ளது என்பது, உலகின் இளம் தொழிலாளர் படையை நாம் பெற்றிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இந்த இளம் சக்தியை சரியான முறையில் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்புகள் மூலம் பயன்படுத்தினால், அடுத்த மூன்று பத்தாண்டுகளுக்கு இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்க முடியும்.

    ஆனால் இந்த வாய்ப்பு, தானாக நிகழாது. போதிய வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால், இளைஞர் திரள் ஒரு சுமையாக மாறும் அபாயமும் உள்ளது. எனவே மக்கள்தொகைக் கொள்கை , வெறும் "கட்டுப்பாடு" என்பதைத் தாண்டி, தரமான கல்வி, சுகாதாரம், பெண்களுக்கான கல்வியறிவு, குடும்பக் கட்டுப்பாட்டு வசதிகளை எளிதில் அணுகும் வகையிலான திட்டமிடலாக மாற வேண்டும்.

பெண்களும், மக்கள்தொகைக் கொள்கையும்

    உலக அனுபவம் நமக்குக் கற்பிக்கும் ஒரு உண்மை என்னவெனில், பெண்களின் கல்வியறிவு உயரும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தானாகவே குறைகிறது என்பதே. கேரளா , இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவது, திருமண வயதை உயர்த்துவது, பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்குவது ஆகியவை மறைமுகமாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு உதவும் வழிகளாகும். கட்டாயத் திட்டங்களைவிட, இத்தகைய கல்வி சார்ந்த அணுகுமுறையே நீடித்து நிற்கும் தீர்வாக அமைகிறது.

நினைவில் கொள்க!

    உலக மக்கள்தொகை தினம் நமக்கு நினைவூட்டுவது என்னவெனில், ஒவ்வொரு மனிதனும் ஒரு புள்ளிவிவரம் மட்டுமல்ல, வாய்ப்புகளுக்கும், திறமைக்கும் உரிமையுடையவன் என்பதே. மக்கள்தொகையை ஒரு சுமையாகப் பார்க்காமல், சரியான திட்டமிடலுடன் அதை வளத்தின் ஆதாரமாக மாற்றுவதே இக்காலத்தின் தேவை. கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்யும்போது மட்டுமே, இந்தியா, தன் இளம் மக்கள்தொகையின் முழுத் திறனையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

    

இந்நாளில், நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம்: நாட்டின் வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் என்ன பங்களிப்பு செய்யலாம்?

8 ஜூலை, 2026

உலக ஒவ்வாமை தினம் - ஜூலை 8

 

உலக ஒவ்வாமை தினம்: விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு

 ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 8 ஆம் தேதி உலக ஒவ்வாமை தினம் (World Allergy Day) கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வாமை (Allergy) என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune System), உண்மையில் தீங்கு விளைவிக்காத சில பொருட்களைத் தவறாக எதிரிகளாகக் கருதி அதிகப்படியான எதிர்வினை புரிவதால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலையாகும். இந்த ஒவ்வாமையைத் தூண்டும் பொருட்கள் "அலர்ஜென்கள்" (Allergens) என்று அழைக்கப்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பு (
WHO) மற்றும் உலக ஒவ்வாமை அமைப்பு (World Allergy Organization) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 30 முதல் 40 சதவீதம் பேர் வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையான ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் நகர்ப்புற மக்களிடையே இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது? 

ஒவ்வாமை வருவதற்கு மரபணு, சுற்றுச்சூழல், காற்று மாசுபாடு, தொழிற்சாலைப் புகை, காலநிலை மாற்றம், புகைப்பிடித்தல், உணவுப் பழக்க மாற்றம், வீட்டில் தூசி அதிகமாக இருப்பது, பூஞ்சை வளர்ச்சி, செல்லப்பிராணிகளின் முடி, இரசாயனப் பொருட்களின் பயன்பாடு போன்ற பல காரணிகள் உள்ளன. 

சமீபத்திய ஆராய்ச்சிகள் குடலில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் (
Gut Microbiome) சமநிலை பாதிக்கப்படுவதும் ஒவ்வாமை உருவாவதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறுகின்றன.  


வீட்டில் ஏற்படும் ஒவ்வாமைகள் 

வீட்டில் அதிகம் காணப்படும் ஒவ்வாமைக்குக் காரணம் தூசியில் வாழும் மிகச் சிறிய "டஸ்ட் மைட்ஸ்" (Dust Mites) ஆகும். 


    
தலையணை, மெத்தை, போர்வை, திரைச்சீலை, கம்பளம் போன்றவற்றில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. பூஞ்சை வளர்ச்சி, கொசு மற்றும் கரப்பான் பூச்சி எச்சங்கள், வாசனைத் திரவியங்கள், அறை வாசனை ஸ்பிரே, சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனப் பொருட்கள், செல்லப்பிராணிகளின் முடி மற்றும் உதிர்ந்த தோல் துகள்களும் ஒவ்வாமையைத் தூண்டுகின்றன.

தடுக்கும் வழிமுறைகள் 

* வாரத்திற்கு ஒருமுறை வெந்நீரில் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றைத் துவைக்க வேண்டும்.

* வீட்டைத் தூசி இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

* ஈரப்பதம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பூஞ்சை வளர்ச்சியை உடனடியாக அகற்ற வேண்டும்.

* தேவையற்ற வாசனைத் திரவியங்கள் மற்றும் புகை உற்பத்தி செய்யும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* செல்லப்பிராணிகளைப் படுக்கையறைக்குள் அனுமதிக்காமல் இருப்பது சிலருக்கு உதவியாக இருக்கும்.

 அலுவலகங்களில் ஏற்படும் ஒவ்வாமைகள் 

ஏர் கண்டிஷனர் (AC) முறையாகச் சுத்தம் செய்யப்படாதபோது அதில் பூஞ்சை மற்றும் தூசித் துகள்கள் சேர்ந்து ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பழைய கோப்புகள், காகிதத் தூசி, அச்சுப்பொறி (Printer) டோனர் துகள்கள், இரசாயன வாசனை, தரை விரிப்புகளில் சேரும் தூசி, காற்றோட்டமில்லாத அறைகள் ஆகியவை அலுவலக ஒவ்வாமைக்குக் காரணமாகின்றன. 

தடுப்பு முறைகள் 

* காற்றோட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

* ஏர் கண்டிஷனர்களைக் காலந்தோறும் பராமரிக்க வேண்டும்.

* பணியிடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* தூசி அதிகம் உருவாகும் பொருட்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

* அதிக வாசனை கொண்ட வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். 

பயணங்களின்போது ஏற்படும் ஒவ்வாமைகள் 

பேருந்து, இரயில், விமானம் போன்றவற்றில் தூசி, வாசனைத் திரவியங்கள், குளிரூட்டப்பட்ட காற்று, மகரந்தத் துகள்கள் மற்றும் மாசடைந்த காற்று ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது புதிய உணவுகள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், சில பழங்கள் போன்றவை உணவு ஒவ்வாமையை உண்டாக்கலாம். ஹோட்டல் அறைகளில் உள்ள தூசி மற்றும் பூஞ்சையும் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

பயணத்தின் போது கவனிக்க வேண்டியவை 

* மருத்துவர் பரிந்துரைத்த ஒவ்வாமை மருந்துகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

* உணவு ஒவ்வாமை இருப்பவர்கள் உணவுப் பொருட்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.

* முகக்கவசம் பயன்படுத்துவது தூசி மற்றும் மகரந்தத் துகள்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

* அதிக தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும்.

* உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை வரலாறு உள்ளவர்கள் (மருத்துவரின் ஆலோசனை பெற்று) எபினெப்ரின் (Epinephrine) தானியங்கி ஊசியை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். 

அறிகுறிகள் 

ஒவ்வாமையின் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.
1. தொடர்ந்து தும்மல்
,
2.
மூக்கில் நீர் வடிதல்,
3.
மூக்கு அடைப்பு,
4.
கண் சிவத்தல்,
5.
கண் அரிப்பு,
6.
தோலில் சிவப்பு தடிப்புகள், அரிப்பு,
7.
உதடு அல்லது முகம் வீங்குதல்,
8.
இருமல்,
9.
மூச்சுத்திணறல்,
10.
மார்பு இறுக்கம்
                                 போன்றவை பொதுவான அறிகுறிகள். சிலருக்கு ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்து
, மயக்கம், சுவாசக் குறைபாடு உள்ளிட்ட "அனாபிலாக்சிஸ்" (Anaphylaxis) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம். இது உடனடி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையாகும். 

அறிவியல் கண்டுபிடிப்புகள் 

கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வாமையைக் கண்டறியும் முறைகள் மிகவும் துல்லியமாக வளர்ச்சி பெற்றுள்ளன. 


தோல் குத்துப் பரிசோதனை (Skin Prick Test), குறிப்பிட்ட IgE இரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு அடிப்படையிலான (Component-resolved Diagnostics) பரிசோதனைகள் மூலம் எந்தப் பொருள் ஒவ்வாமையைத் தூண்டுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. உயிரியல் மருந்துகள் (Biologic Medicines) எனப்படும் புதிய தலைமுறை சிகிச்சை முறைகள் கடுமையான ஆஸ்துமா மற்றும் சில ஒவ்வாமை நோய்களுக்கு நல்ல பலனை அளித்து வருகின்றன. 

சிகிச்சை முறைகள் 

ஒவ்வாமைக்கான முதல் சிகிச்சை, ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பதுதான். அதன் பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி ஆண்டிஹிஸ்டமின் (Antihistamine) மாத்திரைகள், மூக்குத் தெளிப்பான் (Nasal Corticosteroid Spray), கண் சொட்டு மருந்துகள், ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இன்ஹேலர்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. 

சிலருக்கு "அலர்ஜன் இம்யூனோதெரபி" (Allergen Immuno therapy) எனப்படும் நோய் எதிர்ப்பு மாற்றுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளின் மிகச் சிறிய அளவை நீண்ட காலத்திற்கு மருத்துவரின் கண்காணிப்பில் உடலுக்குள் செலுத்துவதோ அல்லது நாக்குக்குக் கீழே வைப்பதோ மூலம், அந்தப் பொருளை உடல் படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் திறன் பெறுகிறது. இதனால் ஒவ்வாமையின் தீவிரம் குறையலாம். 

ஒவ்வாமை குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள் 

"ஒவ்வாமை தானாகவே குணமாகிவிடும்", "அனைத்து ஒவ்வாமைக்கும் ஒரே மாத்திரை போதும்", "வீட்டில் செய்யும் வைத்தியங்களால் முழுமையாக குணப்படுத்தலாம்" போன்ற நம்பிக்கைகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. தானாக மருந்துகளை உட்கொள்வது அல்லது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது. 

நாம் என்ன செய்ய வேண்டும்? 

ஒவ்வாமை ஒரு சாதாரண தும்மல் அல்லது அரிப்பு மட்டுமல்ல; சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ நிலையாகவும் மாறலாம். ஆனால் சரியான விழிப்புணர்வு, காரணிகளை முன்கூட்டியே கண்டறிதல், சுத்தமான சுற்றுச்சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை பெறுதல் ஆகியவற்றின் மூலம் பெரும்பாலான ஒவ்வாமைகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும். உலக ஒவ்வாமை தினம் நமக்கு நினைவூட்டுவது ஒன்றே...

பிரபலமான இடுகைகள்