14 டிசம்பர், 2021

சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம்

 

       ஆண்டு தோறும் டிசம்பர் 14 ஆம் தேதி சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    நாம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும், நம் அன்றாடப் பணிகளுக்கு அவசியமான ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆற்றல்களை வீணாக்கி வருகிறோம். தற்போது, நம்மிடம் இருக்கும் இந்த ஆற்றல்கள் எல்லாம், 100 அல்லது 150 வருடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஆற்றல் பாதுகாப்புக் குறித்து கட்டுரைகள் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல்,போட்டிகள் நடத்துதல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கியக் குறிக்கோளாகும்.

      தற்போது நிலக்கரி, பெட்ரோல், அணு, மின்சாரம் ஆகியவை முக்கிய எரிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு அடுத்த 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி அடுத்த 200 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எரிசக்தியைச் சேமிக்கும் கட்டிடங்களைக் கட்டும்போது அவற்றின் எரிசக்திப் பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களைத் தொழிட்நுட்ப வல்லுநர்கள் கண்காணிப்பதற்கு வசதியான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

     தொடக்கத்தில் சற்று அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பது இத்தகைய கட்டிடங்களை அமைப்பதில் ஒரு பெரும் தடையாக இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் இதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருந்தாலும் அதனால் ஏற்படும் மின்சார சிக்கனம், அதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டை விட பெருமளவு லாபம் கிடைக்கும். 

      எனவே எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டுவதற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற தயக்கத்தை போக்குவதற்கான முயற்சியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

    மின்சாரத்தைப் போலவே நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் பயணமும் அதற்கான வாகனங்களும். இதற்காக வாகன எரிபொருளுக்கு நாம் பெருமளவு செலவு செய்கிறோம். அத்துடன் இந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.

   பெட்ரோலும் டீசலும் பெட்ரோலியம் எனும் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30-40 ஆண்டுகளில் தீர்ந்து போகக்கூடியது.

     இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலும் டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலைச் சார்ந்து நாம் இயங்க முடியாது.

    எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பெட்ரோல், டீசலைச் சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றையும் குறைத்துப் பணத்தையும் சேமிக்க முடியும்.

     பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். தனியாகக் காரில் செல்வதைத் தவிருங்கள். அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.

     சைக்கிள், மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளை அதிகம் பயன்படுத்த முயற்சியுங்கள்.
எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள். வெயில் நேரடியாகப் படும் இடத்தில் நிறுத்துவது எரிபொருளை அதிகம் ஆவியாக வைக்கலாம்.இந்த யோசனைகளைத் தொடர்ந்து நினைவில் வைத்துக் கடைப்பிடித்துவந்தால், எரிபொருள் செலவை நிச்சயம் குறைக்கலாம்.

     எனவே, நமது வருங்காலச் சந்ததியினருக்கு எரிபொருள் ஆற்றலை கொஞ்சமாவது விட்டு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுநாள்

 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுநாள் இன்று 

 * தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணியனுக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். 

 * எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பாப்புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர் . ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார் . அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி , பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ , அருமைப்பாடல் ” எனக்கூறி இருவருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.அன்றுமுதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும் அழைக்கப்பட்டார் . 

 * எட்டயபுரத்திலும், நெல்லை சிஎம்எஸ் கல்லூரி பள்ளியிலும் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பையும் முடித்தார். 

 * வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே, முதுநிலை சட்டம் படித்து பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞர் என்று புகழ்பெற்றார். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் அவரது சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 

 *வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர் . அவற்றுக்கு சோமசுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக, ஆங்கிலேயர் வ.உ.சி. , சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்குகளை எதிர் கொண்டு வாதாடினார். 

 * ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். நெல்லை, மதுரையில் காங்கிரஸ் கட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார். 

 * ‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். 

 * காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக, குழந்தைகளின் நகைகளைக் கழற்றி காந்தியிடம் அளிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

 * அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கி யங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். 

 * தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். ‘நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.

 * இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் ‘கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது. 

 * சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவர். சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80ஆவது வயதில் (1959) மறைந்தார்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...