31 ஜனவரி, 2022

நாகேஷ் நினைவு நாள்

     நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ், தாராபுரம் பகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.

    தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார்.

    சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

    வசன உச்சரிப்பு ஒரு நடிகருக்கு மிக அவசியம். முக பாவனைகள் மிக மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனும் உடல்மொழி ரொம்பவே அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள் - கலைஞர்கள். மகா கலைஞர்கள். அப்படியான உன்னதக் கலைஞன் - நாகேஷ்.

    ஒல்லியான தேகம்தான். வேலை பார்த்துக்கொண்டே நாடகம், நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடுதல் என தொடர்ந்த முயற்சிகளும், முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் நாடகத்தில், அங்கே ஒன்று, இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன.

    கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பாராம் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. வாலியிடம் இருந்தால் அது நாகேஷின் பணம்.

    சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தில் இவரை இயக்கினார். நாடகங்களில் வாய்ப்பு தந்த பாலசந்தர், திரைத்துறையிலும் பயன்படுத்தினார். தன் முதல்படமான ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷை நடிக்கவைத்தார். நாகேஷ் தான் நாயகன். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் நடிப்பைக் கண்டு திரையுலகமே வியந்து மிரண்டது.

    இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ, ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.

    எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.

    அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி, ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி, முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.

    ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் முழுக்க, ஒவ்வொரு முறை பேசும்போதும், வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி காமெடி பண்ணுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தி எனும் கேரக்டரும் ‘திருவிளையாடல்’ படத்தின் தருமி கதாபாத்திரமும் சாதாரணன் மிகப்பெரிய நடிகனாகிற ‘சர்வர் சுந்தரம்’ படமும் சினிமாப் படமெடுக்கிற ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பாவும் கற்பனையில் இருந்து நிஜமாகவே உருவெடுத்து உலவவிட்டதில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது. 'பாமா விஜயம்’ ‘அனுபவி ராஜா அனுபவி’ என நாகேஷ் முத்திரை பதிக்காத படங்களே இல்லை.

    மாடிப்படி மாது (எதிர்நீச்சல்)வை எவராலும் மறக்கவே முடியாது. ‘வேட்டைக்காரன்’, ’பாமா விஜயம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ஊட்டி வரை உறவு’ என நடித்த படங்களைப் பட்டியலிடுவது அசாதாரணம்.

    ஒருகட்டத்துக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியானார் நாகேஷ். நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்தவர் இந்த முறை வில்லனாக நடித்தார். அதிலும் வில்லன்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இவர்தான். அதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’. இதைத் தொடர்ந்து, ‘இந்திரன் சந்திரன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ என அடுத்த ரவுண்டிலும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து வெளுத்து வாங்கினார் நாகேஷ். அதிலும் ‘நம்மவர்’ படத்தில் இவர் நடித்ததெல்லாம் வேற லெவல். மகளைப் பறிகொடுத்து அவர் புலம்புகிற அந்தப் பத்துநிமிடங்களும் நம்மை உலுக்கிப் போட்டுவிடுவார்.

    ‘பீம்பாய் பீம்பாய்’ அதுவொரு ரகம் காமெடி. ‘மேகின்னா ஸ்டெப்னியா?’ என்று கேட்கும் ‘பஞ்ச தந்திரம்’ காமெடி வேறு வகை சரவெடி. ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்ததைப் பார்த்து, பிணமே எழுந்து வாய்விட்டுச் சிரிக்கும்.

    எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுகிற, தனி முத்திரை பதித்துவிடுகிற மகா கலைஞன், நகைச்சுவை நாயகன் நாகேஷ். சாகாவரம் பெற்ற கலைஞன். பூமியும் வானமும் உள்ளவரை, பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றிருப்பார் நாகேஷ். மக்கள் மனங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

    அடைமொழி கூடிய சினிமா உலகம். இரண்டு படங்கள் நடித்தாலே பெயருக்கு முன்னே பட்டம் வைத்துக் கொள்கிற உலகில், நாகேஷுக்கு எந்த அடைமொழியும் இல்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் என்ன ? நகைச்சுவையின் இன்னொரு பெயர் -  நாகேஷ் என்கிறது சினிமா அகராதி.

நன்றி : இந்து தமிழ் திசை

எழுத்தாளர் அகிலன் நினைவுநாள்

     நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும் தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் அவர்களது நினைவுநாள் இன்று.

    நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக்  கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே.

     ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்'' என்று கூறியுள்ளார் அகிலன்.

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் (1922) பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மாதான் கஷ்டப்பட்டு இவரைப் படிக்கவைத்தார்.

    பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.

    இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார்.மாணவப்பருவத்தில் - 1938  முதலே அகிலன் எழுதத் தொடங்கினார். பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய  "அவன் ஏழை' எனும் அவரது முதல் சிறுகதை, அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது. இதை அவரே தனது "எழுத்தும் வாழ்க்கையும்' என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.

    முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ 1944 இல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய, எளிய நடை இவரது படைப்புகளின் சிறப்பம்சங்கள்.

    அகிலனின் சிறுகதைகள், வாழ்வின் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை. எளிய நடையில், வலிமையான கருத்துகளை சுவாரசியமான தனது எழுத்து நடையால் வாசகரின் மனதில் பதிய வைப்பதே காலத்தை வென்ற படைப்பாளியான அகிலனின் தனித்துவம்.

    ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ அதே உணர்வை, படிக்கும்போது வாசகரும் பெறுவதே அந்தப்  படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி அகிலன்.

    இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன.


    இவரது ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், தினமணி ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 2 பாகங்களாக வெளிவந்தன.

    ‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள், ‘சத்ய ஆவேசம்’, ‘ஊர்வலம்’, ‘எரிமலை’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

    ‘வேங்கையின் மைந்தன்’ நாவல் 1963 இல் சாகித்ய அகாடமி விருதையும் ‘சித்திரப்பாவை’ 1975 இல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார்.

    அகிலனின் "பாவை விளக்கு' அவரது சுய வாழ்வின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஓர் இலக்கிய வாதியின் போராட்ட  வாழ்வை மிக இயல்பாகக்  கூறிச் செல்லும் இந் நாவல், திரைப்படமாக்கப்பட்டு சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டது. கலப்புமணப் பிரச்னையை "வாழ்வு எங்கே?' நாவல் அலசுகிறது. இது "குலமகள் ராதை' - என்ற பெயரில் திரைப்படமானது.

    காந்தியத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அகிலன், மூன்று முறை அரசு அழைப்பை ஏற்று ரஷ்யா சென்றார். தமது பயண அனுபவங்களை "நான் கண்ட ரஷ்யா', "சோவியத்  நாட்டில்' என்ற புத்தகங்களில்  பதிவு செய்தார்.

    மு.வரதராசனார், கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம் என பல துறைகளின் ஜாம்பவான்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.காமராஜர், சி.எஸ்., ஜீவா, மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, கே.முத்தையா ஆகிய தலைவர்களுடனான அகிலனின் நட்பு குறிப்பிடத்தக்கது.

    எளிமை, உண்மை, மனித நேயம், கலைத்தன்மை, நேர்மை, அஞ்சாமை, என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து, கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி - தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த படைப்பாளி அகிலன், தனது 66 ஆவது வயதில் (1988) மறைந்தார்.

30 ஜனவரி, 2022

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

     


    உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

தொழுநோய் ஹேன்சனின் நோய் என்றும் அழைக்கப்படும்.

    தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரேசில், இந்தோனேசியா, இந்தியா ஆகியவையே அதிக  நோய்பாதிப்புள்ள நாடுகள்.

தொழுநோய் என்றால் என்ன?

    மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (எம். லெப்ரே) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்று நோயே தொழுநோய். எம்.லெப்ரே மிக மெதுவாகப் பெருகுவதால் தொற்று ஏற்பட்டு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ஆகிய நீண்ட நாட்கள் கழித்தே  நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த நோய் பொதுவாகத் தோல், நரம்பு விளிம்புகள், மேல் மூச்சு மண்டலத்தின் சளிசவ்வுகள் மற்றும் கண்களையே பாதிக்கின்றன.

    தொழுநோய் பாசிபெசில்லரி (PB)  அல்லது மல்டி பெசிலரி (MB) என நீள்நுண்ணுயிரிகளின் தொகையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். பாசிபெசில்லரி வகையில் ஒரு சில (அதிகபட்சம் 5) தோல்புண்களே காணப்படும் (வெளிறிய மஞ்சள் அல்லது சிவப்பு). மல்டி பெசிலரி வகையில்  கூடுதல் (ஐந்துக்கும் மேல்) தோல் புண்கள், முடிச்சுகள், காறைகள், தோல் தடிப்புகள் அல்லது தோல் ஊடுருவிகள் காணப்படும்.

            நோய் எவ்வாறு பரவுகிறது?

    சிகிச்சை பெறாத தொழுநோயாளியே, இதுவரை அறிந்த  நோய் பரவலுக்கான,ஒரே காரணம். தொழுநோயாளியின் உடலில் இருந்து நோய்க்கிருமிகள் பரவும் முக்கிய வழி சுவாச மண்டலமே: குறிப்பாக மூக்கு மூலமே அதிகம் பரவுகிறது.

    சிகிச்சை பெறாதவர்களோடு தொடர்ந்து தொடர்பு வைக்கும் போது நோய்க்கிருமிகள் வாய் அல்லது மூக்குத் துளி வாயிலாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. உடலுக்குள் நுழைந்த நுண்ணுயிரிகள் நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.

    ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நரம்புகளுக்கு மேலும் சிதைவு ஏற்பட்டு நிரந்தர ஊனம் உண்டாகலாம்.

தொழுநோய் - அறிகுறிகள்    

கீழ்க்காணும் குறிகளும் அறிகுறிகளும் தென்பட்டால் தொழுநோயாக இருக்கக் கூடும்.

    அடர் நிறத் தோல் உடையவர்களுக்கு வெளிறிய தோல் திட்டுகளும், மங்கல் தோல் உடையவர்களுக்கு அடர் அல்லது சிவப்புத் திட்டுக்களும் இருக்கும்

தோல் திட்டுக்களில் உணர்வு குறைதல் அல்லது இழப்பு

கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது கூச்சம்

கை, கால் அல்லது இமை பலவீனம்

நரம்புகளில் வலி

முகம் அல்லது காது மடலில் வீக்கம்

கால் அல்லது கையில் வலியற்ற காயம் அல்லது தீப்புண்

    சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்குக் கண்கள், கைகள் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய், தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை, நன்கு கவனிக்க வேண்டும். எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

    உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி Multi Drug Therapy  எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

பன் மருந்து சிகிச்சை (MDT) என்றால் என்ன?

    தொழு நோயை எந்த ஒரு தனி மருந்தாலும் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சையே எம்டிடி.

தொழு நோயின் வகையைப் பொறுத்து ஒரு நன்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரிடம் இருந்து முழு வேளை எம்டிடியை உட்கொள்ள வேண்டும்.

எம்டிடி இலவசமாகப் பெரும்பான்மையான மருத்துவ நிலையங்களில், கிராமப்புறங்களில் கூட, கிடைக்கிறது.

முக்கியச் செய்திகள்

தொழுநோய் பன்மருந்துச் சிகிச்சையால் குணப்படுத்தக் கூடியது.

தொடர்ந்து பன்மருந்து சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாகக் குணப்படுத்தப்பட்டு, ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, பரவலும் தடுக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட நோயறிதல், தகுந்த சிகிச்சை மற்றும் முழுவேளை மருந்து தொழு நோயால் ஏற்படும் ஊனத்தைத் தடுக்கும்.

தொழுநோய் மரபுவழி நோயல்ல; இது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதில்லை.

கைகுலுக்குதல், சேர்ந்து விளையாடுதல் அல்லது சேர்ந்து பணிபுரிதல் ஆகிய வழக்கமான நடவடிக்கைகள் மூலம் தொழுநோய் பரவுவதில்லை. சிகிச்சை பெறாத நேர்வுகளோடு நெருங்கியத் தொடர்பு வைத்துக் கொள்ளுவதால் பரவக் கூடும்.

    தொழுநோய், பழைய பாவத்தாலோ கெட்ட நடத்தையாலோ ஏற்படுவதில்லை. மைக்கோபாக்டீரியம் என்ற ஒரு நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. 

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்ணியத்தோடு வாழ உரிமை உண்டு. மனிதாபிமானத்தோடு அவர்களை நடத்துவதே நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமை.


மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் - கண்ணம்பாளையம்

 தியாகிகள் தினம்
------------------------------------------------------------------

    மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் கண்ணம்பாளையம்

    கோவை மாவட்டத்தில், கண்ணம்பாளையம் என்றொரு கிராமம். இது தியாகத்தின் விளைநிலம். ஓர் ஊரே விடுதலைக்காகக் கிளர்ந்தெழுந்தது. நாட்டு விடுதலைக்காக, சுமார் 20 பேர், தீவிரப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    
    ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அணிதிரண்டு, போராடிய வரலாறு இவ்வூருக்குண்டு.சூலூர் விமானப்படைத் தளத்தைத் தீக்கிரையாக்கியதற்காக, அலிப்பூர் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கண்ணம்பாளையத்தின் போற்றுதலுக்கும்,
வணக்குதலுக்கும் உரிய தியாகிகள்

    இன்னும் சில விடுதலைப்போராட்ட வீரர்கள், போராட்டம் தொடர்ந்து நடைபெறவேண்டி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் சிறைசெய்யப்பட்டனர். இன்றளவும் அவ்வூரில், தியாகிகளை மறவாது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், பள்ளி மாணவர்களது ஊர்வலம் - நாட்டுபற்றுடன் கூடிய கோஷங்கள், பதாகைகள் என நடைபெற்று, இறுதியில் தியாகிகள் மேடையில் முடிவடையும். 

    அங்கு, அலங்கரிக்கப்பட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்ச்சான்றோர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் மரியாதை செலுத்துவர்.நாட்டு விடுதலைக்காகப் போராடிய இவர்கள் போன்றோரது ம(றை)றக்கப் பட்ட வரலாறுகளை வெளிக்கொணர்ந்து நாடறியச் செய்யவேண்டியது நாட்டுபற்றுடைய ஒவ்வோர் இந்தியக் குடிமகனுடைய கடமையும் ஆகும்.

------------------------------------------------------------------------------------

                    இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவிப்பதே இந்நாளின் நோக்கம்.

    “அவர்கள் முதலில் வாள்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் துப்பாக்கிகள் கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “அவர்கள் துப்பாக்கி பயிற்சி பெற்று வந்தார்கள். நாங்கள் வெடிகுண்டுகளால் தாக்கினோம்”
 “அவர்கள் வெடிகுண்டுகள் வீசினார்கள். நாங்கள் பீரங்கி கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “இறுதியாக அவர்கள் அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தினார்கள். இதுவரை உலகிலே அகிம்சையை வெல்ல எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாங்கள் வெளியேற வேண்டியதாகிவிட்டது'' 
என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நமது சுதந்திரப் போர் குறித்து பேசியதாகச் செய்தி உண்டு.

    அந்த அகிம்சைதான் மகாத்மாவை உலகின் தலைவராக மாற்றியது. எல்லோரிடமும் எளிதாகக் கொண்டு சேர்த்தது. இந்தியாவின் தேசத் தந்தை என்று   போற்றப்படும் அளவுக்கு அவரை உயர்த்தியது. 

    இருப்பினும்,அயல் நாட்டில் இருந்து படை திரட்டி பரங்கியரைப் பதறவைத்த சுபாஷ்சந்திர போஸ், ஆவேசம் கொண்ட இளைய பட்டாளமாக நின்ற மாவீரன் பகத்சிங் , வீரவாஞ்சிநாதன், கொடியினைத் தன் இறுதிமூச்சு இருக்கும்வரை கீழேவிழாமல் தடுத்து, தனது இன்னுயிர் ஈந்த கொடிகாத்த குமரன், இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்ட ஜெர்மனி அதிபர் ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்து, ஜெய்ஹிந்த் என்ற சொல்லை இந்திய திருநாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த ஜெய்ஹிந்த் செண்பகராமன், ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் கம்பெனி நிறுவி, அதை இயக்க முயற்சித்த,மாவீரர் வ.உ.சிதம்பரனார், மாவீரன் உத்தம்சிங் போன்றோர்களது தியாக வரலாறுகளை எளிதாக மறந்து விட இயலாது.

    விடுதலைக்குப் போராடிய யாவரும், தனக்கான ஜாதி, மத, இன அடையாளங்களை துாக்கி எறிந்து இந்தியராகவே நின்றனர். அவர்களின் விருப்பமான  ஒரு தேசத்தைப் படைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

'இமயச் சாரலில் ஒருவன் இருமினால்,குமரியில் வாழ்பவன் மருந்துகொண்டு ஓடுவான்'

    என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். இங்கே நமக்கான அடையாளம் நமது தேசம் மட்டுமே. தேசத்தில் இருப்பவர்கள் அனைவருமே நமது உறவுகள்தான்.தேசத்தையும் தாண்டி மனிதம் வளர்த்த நாடு நமது நாடு. 

    அத்தகு தியாக தீபங்களை இந்நாளில் நினைவுகூர்வுகூர்ந்து நன்றிகளைக் காணிக்கையாக்குவோம்.

ஜெய்ஹிந்த்

29 ஜனவரி, 2022

பழம்பெரும் நடிகை பண்டரிபாய் நினைவு நாள்

     பண்டரிபாய் தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். 

    பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது தணியாத பற்றுக் கொண்டவர் எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார். நாடகம் பற்றிச் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தார்.

    நாடகத்துக்குப் பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய், சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார். அவர் முயற்சியால் “வாணி” என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்குக் கிடைத்தது.

    எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது. தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். இந்தப்படத்தில்  பண்டரிபாய் நடித்தபோது அவருக்கு வயது 14 தான்.

    பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது.என்றாலும் பண்டரிபாயிடம் இருந்து தமிழ் வார்த்தை தெலுங்கில் தான் வந்தது .பி டி சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கைக் கற்றுக்கொண்டது தான் மிச்சம்.


    பின்னர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றார். விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச, பண்டரிபாய் கற்றுக் கொண்டார். ஏ வி. எம். கூட்டுறவுடன் நேஷனல் பிக்சர்ஸ் 1952 இல் தயாரித்த பராசக்தி படத்தில், சிவாஜியின் ஜோடியாக பண்டரிபாய் நடித்தார்.

    சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி, தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார்.

    தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி….. இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.சிவாஜிகணேசனின் தாயாக தெய்வ மகன், கௌரவம் போன்ற படங்களில் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

     கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 7 மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துச் சாதனை படைத்தார்.மன்னன் படத்தில் ரஜினி காந்தின் தாயாராக நடித்தபோது, ”அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாடலில் இக்காலத் தலைமுறையினருக்கும் அறிமுகமானார்.

    ஒரு முறைப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னையிலிருந்து பெங்களூருவிற்குப் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்தபின், திரைப் படங்களில் நடிக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு மறைந்தார்.

28 ஜனவரி, 2022

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்

     இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியும், பஞ்சாப் சிங்கம் (பஞ்சாப் கேசரி)  என்றழைக்கப்படுவருமான, லாலா லஜபதி ராய் பிறந்த தினம் இன்று (ஜனவரி 28)

    லாலா லஜபதி ராய் ஓர் எழுத்தாளரும், அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். 

லால் - பால் -பால்

    லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

    இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். ராய், சட்டம் பயின்றவரான லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். 1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. 

    ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும்,ஆங்கிலேயர்களிடமிருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

    பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக, பிரிட்டிஷ் அரசு இவரைப் பர்மாவுக்கு நாடு கடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால், தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 

    1920 இல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று, சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, எதிர்த்து, அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார். எனினும் பிரிட்டிஷ் அரசு கடுமையாகத் தாக்கியதை அடுத்து, சில தினங்களிலேயே உயிரிழந்தார்.

இராஜா ராமண்ணா பிறந்தநாள்

    இராஜா இராமண்ணா, இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞர். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்.

    இராஜா ராமண்ணா,ஓர் எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். இசைக்கலைஞர், சமஸ்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதையாக விளங்கிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு முழுமையான மனிதர் எனப்போற்றப்படுபவர். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற மறைமுகச் சொல்லைப் பயன்படுத்தி முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

    1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி. ராமண்ணா.இவர் நீதியரசராகப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார். இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர், இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் அறிவு வளர்ச்சிக்கும் வழிகோலினார். இராமண்ணாவின் பெயரிலுள்ள இராஜா என்பது இராஜம்மா என்ற பெயரின் பகுதியாகும்.

    இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. 

TIFR-Tata Institute of Fundamental Research

    மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.1949, டிசம்பர் 1 இல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார்.

    இங்கு அணுக்கருப் பிளவு மற்றும்ம் சிதறல் பற்றிய ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் சேரும்போது இந்நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. அப்பொழுது பாபாவின் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பாபாவின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட அணுக்கரு ஆய்வுக்குழு குறிப்பிடதக்க வகையில் பணியாற்றிய பெருமையுடையதாகும். தொழில்நுட்ப நடவடிக்கைகளும், அணுஆற்றல் திட்டங்களும் இந்தியாவில் தழைத்தோங்கி வளர இக்குழு மிகவும் கடுமையாக உழைத்தது. 

இந்தியாவின் முதல் அணுக்கரு உலை - அப்சரா
    நியூட்ரான், அணுக்கரு, அணுக்கரு உலை இயற்பியல் ஆகிய துறைகளில் இராமண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாபா அணு ஆய்வு மையத்தில் ஹோமி பாபாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இராமண்ணா ஓரு இளைய ஆய்வாளராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான 'அப்சரா' இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே. எஸ். சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ. எஸ். ராவும் பங்களித்தனர். அணுக்கரு உலையில் அமைக்கப்படும் எரிபொருளுக்கான துளைகள் அமைப்பு உருவாக்கத்திற்கு எந்திரப் பொறியாளர் வி. டி. கிருஷ்ணன் என்பர் பொறுப்பேற்றார்.

    இராமண்ணா துடிப்புமிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தைப் மட்டுப்படுத்தி நியூட்ரான் விரலைத் திர்மானித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை, அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது. யுரேனியம்-235 இல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், இக்கதிர்கள். நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்றம்,பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின.



    அணுக்கரு ஆய்வுகளில் ஈடுபட்ட இராமண்ணா, இந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட பல இளம் அறிவியலறிஞர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக 1975 இல் இவர் தலைமையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது, இவர் எடுத்த முதல் முக்கியமான முயற்சியாகும். இங்கு பல அறிவியல் அறிஞர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் அணு ஆற்றல் மற்றும் விண்வெளி ஆய்வு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர், பல்வேறு ஆய்வகங்களின் இயக்குநர்கள், இந்திய அரசாங்கத்தின் அறிவியல் துறைச் செயலர்கள் என்று இந்திய நாட்டிற்குள் பல்வேறு வகைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.

    1972 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், 1977-78 களில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணுஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும், 1986 இல் அதன் முப்பதாவது பொது மாநாட்டின் தலைவராகவும் செயல்பட்டார். 1977-79 இல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்சி ஆய்வு மையத்தின் இயக்குநராக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.

    முதல் ஆறாண்டுகளை இராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட 'சிரிக்கும் புத்தர்’ என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது. 1974 மே மாதம் 18 ஆம் தேதி இராஜஸ்தானிலுள்ள பொக்ரான் பாலைவனத்தில் நிலத்தடி குண்டு வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது. டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு அதிபராக, அணுசக்திப் பேரவைக்கு, (Atomic Energy Commission) டாக்டர் ராஜா ராமண்ணா 1983 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காண்டுகள் பணியாற்றினார்.

    1990 இல் வி. பி. சிங் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.1997-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிபுரிந்தார். பெங்களூருவில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் [Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research], இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை [Indian Academy of Sciences ], மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் [Indian Institute of Technology, Bombay] ஆகியவற்றின் தலைவராகவும் இராமண்ணா பணியாற்றினார்.

    இவருடைய பணிகளைப் பாராட்டி

1963இல் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது

1968 இல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது

1973இல் பத்ம விபூஷண் விருது

1984 இல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் மேக்நாத் சாகா பதக்கம்

1985 இல் ஓம்பிரகாஷ் பாசின் விருது

1985-86 இல் ஆர். டி. பிர்லா நினைவு விருது

1996 இல் அசுதோஷ் முகர்ஜி தங்கப்பதக்கம்

ஆகியவை வழங்கப்பட்டன. பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கின.

    இராமண்ணா 2004 செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் மும்பையில்  காலமானார்.


27 ஜனவரி, 2022

ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள்

      திரு.ஆர்.வெங்கட்ராமன் ஒரு விடுதலைப்போராட்ட வீரர்,தொழிற்சங்கத் தலைவர், நிதித்துறை மேதாவி,, சட்ட வல்லுனர், சிறந்த சிந்தனைவாதி. தஞ்சாவூர் மாவட்டம் ராஜா மடம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பட்டுக்கோட்டை யில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.


    லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1935ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 1949 இல் ‘லேபர் லா ஜர்னல்’ என்னும் இதழைத் தொடங்கினார். தமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

  தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்குச் சங்கம் அமைத்தவர் சென்னை மாகாண வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார்.தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.1951 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளராகப் பணியாற்றினார். 

     சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடியதால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிரப் பங்காற்றினார். 

     இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக, சிறப்பாகப் பணியாற்றினார். சர்வதேச நிதித்துறையில் ஆளுநராகவும், சர்வதேசப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியிலும் பணியாற்றினார்.

     நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இவரது சேவை தமிழகத்துக்குத் தேவை என்பதை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர், இவரை, தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வைத்தார். தொழிலாளர் நலத்துறை, மின் துறை, தொழில் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வணிகத்துறை என பல துறைகளை இவர் நிர்வகித்தார். 

     அரசியல் விவகாரக் குழு, பொருளாதார விவகாரங்களுக்கான குழு உறுப்பினராகவும் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராகவும் 1975 முதல் 1977 வரை ‘சுயராஜ்ய’ பத்திரிகையின் ஆசிரியராவும் பணியாற்றினார்.1946 ஆம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று, அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். 

     1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை. 

     1980 இல் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் இந்திய ராணுவத்துக்கான ஏவுகணை திட்டப்பணிகள் தொடங்கின. 

     1984 இல் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.1987இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரை அப்பதவியில் நீடித்தார். 4 பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

    பாகிஸ்தானுக்குப் பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவரே. இவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதுதான் மத்தியில் கூட்டணி அரசு தொடங்கியது. பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.

     காமராஜருடன் இவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தின் அனுபவங்களை ‘சோவியத் நாடுகளில் காமராஜரின் பயணம்’ என்ற புத்தகமாக எழுதினார். இதற்காக இவருக்கு ‘சோவியத் லேன்ட்’ பரிசு வழங்கப்பட்டது. 

    சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்த ஆர்.வெங்கட்ராமன், தனது 98 ஆவது வயதில் காலமானார்.

26 ஜனவரி, 2022

73 ஆவது குடியரசு தினம்

     73


       ஆங்கிலேயர்கள், தங்களுக்கு எதிரான, தொடர் போராட்டங்களை எதிர்கொள்ள இயலாமல், இந்தியாவை விட்டு வெளியேற  முடிவு செய்தனர்.1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தது.அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி ஆங்கிலேயர் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். 

    சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டன. 



     1949 நவம்பர் 26 ஆம் தேதி முழுமையாக வடிவமைக்கப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. நாடு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை முடிவு செய்தது. 

    308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.அம்பேத்கர் கொண்டு வந்த இந்த அரசியலமைப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த நாளை நாம் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.

    அனைவருக்கும், இனிய குடியரசுதின வாழ்த்துகள். வலிமையான பாரதமே, நமது நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். நாம், நமது பொறுப்புகளை உணர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.


25 ஜனவரி, 2022

தேசிய வாக்காளர் தினம்

     இந்தியத் தேர்தல் ஆணையமானது கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதனைக் குறிக்கும் விதமாக ஒவ்வோராண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் (National Voters’ Day) கொண்டாடப்படுகிறது. இது ராஷ்டிரிய மட்டதா திவாஸ் (Rashtriya Matdata Diwas) என்றும் அழைக்கப்படுகிறது. 


    இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) அமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையிலும்,  வாக்காளர்கள் சேர்க்கையை ஊக்குவித்தல், குறிப்பாக புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்த தினம் கொண்டாப்படுகிறது. அரசியலமைப்பின் 324 ஆவது பிரிவு, இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் 1950-ல் நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்தத் தினத்தை, முறையாகக்  கொண்டாடத் தொடங்கியது 2011 இல் தான்.

தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோள்
(Objective of the National Voters’ Day) 

    இந்தியாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான் தேசிய வாக்காளர் தினத்தை மத்திய அரசு கொண்டாடத் தூண்டியது எனலாம். வாக்களிக்கும் பணியில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு  `Proud to be a voter, ready to vote’ என்று எழுதப்பட்ட பேட்ஜ்கள் வழங்கப்படும். வாக்காளர்களாகச் சேருவதில் பலருக்கும் ஆர்வமின்மை ஏற்பட்டதால், இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு, தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள்,    "தேர்தல்களை, உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்கதாக மாற்றுதல்” (Making Elections Inclusive, Accessible and Participative) என்பதே.

    தேர்தல்களின் போது வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்பதை எளிதாக்குவதற்கும், முழுமையான செயல்முறையை சிரமமின்றி மற்றும் அனைத்து வகை வாக்காளர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுவதற்கும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது.

    நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி நாடு முழுவதும் 8.5 முதல் 10 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18 வயதை எட்டும் அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அரசு அடையாளம் காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை ஜனவரி 25ஆம் தேதி பெறுவார்கள்.

    நாட்டை ஆளுகின்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும், அதிகாரமளிக்கும் முயற்சியை மேலும் வலுப்படுத்த, இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் பெருமை உணர்வைத் தூண்டுவதற்காக,  `No voter to be left behind’ என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது.

    மக்கள், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தவும், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருக்க குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அரசாங்கம் இருகரம்கூப்பி  வரவேற்கிறது. 


    வினாடி வினாக்கள், விவாதங்கள், மாதிரி வாக்கெடுப்புகளை (quizzes, debates, mock polls) நடத்துவதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாளை அனுசரிக்க ஊக்குவிக்கப்படுகின்றன.

    இதனால் தகுதியுடைய மாணவர்கள்/மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களிக்க ஒரு புரிதல் ஏற்படும். இந்த முயற்சியை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு, இந்திய அரசு புதுமைகளுக்கான தேசிய விருது (National Award for innovation), என்ற ஒன்றை தேர்தல் எந்திரங்களால் தேர்தல் நடைமுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கிறது.

    சமூக ஊடகங்களில் தேசிய வாக்காளர் 
விழிப்புணர்வுப் 
போட்டிகள்

    'எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் சக்தி' 2022


     சட்டமன்றத் தேர்தல்களில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் தொடங்கப்படும். பாடல், ஸ்லோகன், வினாடி வினா, வீடியோ மேக்கிங் மற்றும் போஸ்டர் டிசைன், போட்டிகள் அனைவருக்குமானவை. வெற்றியாளர்களுக்கு உற்சாகமூட்டும் பணப் பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படும்.

உறுதிமொழி



Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...