30 ஜனவரி, 2022

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

     


    உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

தொழுநோய் ஹேன்சனின் நோய் என்றும் அழைக்கப்படும்.

    தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரேசில், இந்தோனேசியா, இந்தியா ஆகியவையே அதிக  நோய்பாதிப்புள்ள நாடுகள்.

தொழுநோய் என்றால் என்ன?

    மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (எம். லெப்ரே) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்று நோயே தொழுநோய். எம்.லெப்ரே மிக மெதுவாகப் பெருகுவதால் தொற்று ஏற்பட்டு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ஆகிய நீண்ட நாட்கள் கழித்தே  நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த நோய் பொதுவாகத் தோல், நரம்பு விளிம்புகள், மேல் மூச்சு மண்டலத்தின் சளிசவ்வுகள் மற்றும் கண்களையே பாதிக்கின்றன.

    தொழுநோய் பாசிபெசில்லரி (PB)  அல்லது மல்டி பெசிலரி (MB) என நீள்நுண்ணுயிரிகளின் தொகையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். பாசிபெசில்லரி வகையில் ஒரு சில (அதிகபட்சம் 5) தோல்புண்களே காணப்படும் (வெளிறிய மஞ்சள் அல்லது சிவப்பு). மல்டி பெசிலரி வகையில்  கூடுதல் (ஐந்துக்கும் மேல்) தோல் புண்கள், முடிச்சுகள், காறைகள், தோல் தடிப்புகள் அல்லது தோல் ஊடுருவிகள் காணப்படும்.

            நோய் எவ்வாறு பரவுகிறது?

    சிகிச்சை பெறாத தொழுநோயாளியே, இதுவரை அறிந்த  நோய் பரவலுக்கான,ஒரே காரணம். தொழுநோயாளியின் உடலில் இருந்து நோய்க்கிருமிகள் பரவும் முக்கிய வழி சுவாச மண்டலமே: குறிப்பாக மூக்கு மூலமே அதிகம் பரவுகிறது.

    சிகிச்சை பெறாதவர்களோடு தொடர்ந்து தொடர்பு வைக்கும் போது நோய்க்கிருமிகள் வாய் அல்லது மூக்குத் துளி வாயிலாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. உடலுக்குள் நுழைந்த நுண்ணுயிரிகள் நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.

    ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நரம்புகளுக்கு மேலும் சிதைவு ஏற்பட்டு நிரந்தர ஊனம் உண்டாகலாம்.

தொழுநோய் - அறிகுறிகள்    

கீழ்க்காணும் குறிகளும் அறிகுறிகளும் தென்பட்டால் தொழுநோயாக இருக்கக் கூடும்.

    அடர் நிறத் தோல் உடையவர்களுக்கு வெளிறிய தோல் திட்டுகளும், மங்கல் தோல் உடையவர்களுக்கு அடர் அல்லது சிவப்புத் திட்டுக்களும் இருக்கும்

தோல் திட்டுக்களில் உணர்வு குறைதல் அல்லது இழப்பு

கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது கூச்சம்

கை, கால் அல்லது இமை பலவீனம்

நரம்புகளில் வலி

முகம் அல்லது காது மடலில் வீக்கம்

கால் அல்லது கையில் வலியற்ற காயம் அல்லது தீப்புண்

    சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்குக் கண்கள், கைகள் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய், தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை, நன்கு கவனிக்க வேண்டும். எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

    உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி Multi Drug Therapy  எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

பன் மருந்து சிகிச்சை (MDT) என்றால் என்ன?

    தொழு நோயை எந்த ஒரு தனி மருந்தாலும் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சையே எம்டிடி.

தொழு நோயின் வகையைப் பொறுத்து ஒரு நன்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரிடம் இருந்து முழு வேளை எம்டிடியை உட்கொள்ள வேண்டும்.

எம்டிடி இலவசமாகப் பெரும்பான்மையான மருத்துவ நிலையங்களில், கிராமப்புறங்களில் கூட, கிடைக்கிறது.

முக்கியச் செய்திகள்

தொழுநோய் பன்மருந்துச் சிகிச்சையால் குணப்படுத்தக் கூடியது.

தொடர்ந்து பன்மருந்து சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாகக் குணப்படுத்தப்பட்டு, ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, பரவலும் தடுக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட நோயறிதல், தகுந்த சிகிச்சை மற்றும் முழுவேளை மருந்து தொழு நோயால் ஏற்படும் ஊனத்தைத் தடுக்கும்.

தொழுநோய் மரபுவழி நோயல்ல; இது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதில்லை.

கைகுலுக்குதல், சேர்ந்து விளையாடுதல் அல்லது சேர்ந்து பணிபுரிதல் ஆகிய வழக்கமான நடவடிக்கைகள் மூலம் தொழுநோய் பரவுவதில்லை. சிகிச்சை பெறாத நேர்வுகளோடு நெருங்கியத் தொடர்பு வைத்துக் கொள்ளுவதால் பரவக் கூடும்.

    தொழுநோய், பழைய பாவத்தாலோ கெட்ட நடத்தையாலோ ஏற்படுவதில்லை. மைக்கோபாக்டீரியம் என்ற ஒரு நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. 

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்ணியத்தோடு வாழ உரிமை உண்டு. மனிதாபிமானத்தோடு அவர்களை நடத்துவதே நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமை.


மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் - கண்ணம்பாளையம்

 தியாகிகள் தினம்
------------------------------------------------------------------

    மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் கண்ணம்பாளையம்

    கோவை மாவட்டத்தில், கண்ணம்பாளையம் என்றொரு கிராமம். இது தியாகத்தின் விளைநிலம். ஓர் ஊரே விடுதலைக்காகக் கிளர்ந்தெழுந்தது. நாட்டு விடுதலைக்காக, சுமார் 20 பேர், தீவிரப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    
    ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அணிதிரண்டு, போராடிய வரலாறு இவ்வூருக்குண்டு.சூலூர் விமானப்படைத் தளத்தைத் தீக்கிரையாக்கியதற்காக, அலிப்பூர் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கண்ணம்பாளையத்தின் போற்றுதலுக்கும்,
வணக்குதலுக்கும் உரிய தியாகிகள்

    இன்னும் சில விடுதலைப்போராட்ட வீரர்கள், போராட்டம் தொடர்ந்து நடைபெறவேண்டி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் சிறைசெய்யப்பட்டனர். இன்றளவும் அவ்வூரில், தியாகிகளை மறவாது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், பள்ளி மாணவர்களது ஊர்வலம் - நாட்டுபற்றுடன் கூடிய கோஷங்கள், பதாகைகள் என நடைபெற்று, இறுதியில் தியாகிகள் மேடையில் முடிவடையும். 

    அங்கு, அலங்கரிக்கப்பட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்ச்சான்றோர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் மரியாதை செலுத்துவர்.நாட்டு விடுதலைக்காகப் போராடிய இவர்கள் போன்றோரது ம(றை)றக்கப் பட்ட வரலாறுகளை வெளிக்கொணர்ந்து நாடறியச் செய்யவேண்டியது நாட்டுபற்றுடைய ஒவ்வோர் இந்தியக் குடிமகனுடைய கடமையும் ஆகும்.

------------------------------------------------------------------------------------

                    இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவிப்பதே இந்நாளின் நோக்கம்.

    “அவர்கள் முதலில் வாள்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் துப்பாக்கிகள் கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “அவர்கள் துப்பாக்கி பயிற்சி பெற்று வந்தார்கள். நாங்கள் வெடிகுண்டுகளால் தாக்கினோம்”
 “அவர்கள் வெடிகுண்டுகள் வீசினார்கள். நாங்கள் பீரங்கி கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “இறுதியாக அவர்கள் அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தினார்கள். இதுவரை உலகிலே அகிம்சையை வெல்ல எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாங்கள் வெளியேற வேண்டியதாகிவிட்டது'' 
என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நமது சுதந்திரப் போர் குறித்து பேசியதாகச் செய்தி உண்டு.

    அந்த அகிம்சைதான் மகாத்மாவை உலகின் தலைவராக மாற்றியது. எல்லோரிடமும் எளிதாகக் கொண்டு சேர்த்தது. இந்தியாவின் தேசத் தந்தை என்று   போற்றப்படும் அளவுக்கு அவரை உயர்த்தியது. 

    இருப்பினும்,அயல் நாட்டில் இருந்து படை திரட்டி பரங்கியரைப் பதறவைத்த சுபாஷ்சந்திர போஸ், ஆவேசம் கொண்ட இளைய பட்டாளமாக நின்ற மாவீரன் பகத்சிங் , வீரவாஞ்சிநாதன், கொடியினைத் தன் இறுதிமூச்சு இருக்கும்வரை கீழேவிழாமல் தடுத்து, தனது இன்னுயிர் ஈந்த கொடிகாத்த குமரன், இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்ட ஜெர்மனி அதிபர் ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்து, ஜெய்ஹிந்த் என்ற சொல்லை இந்திய திருநாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த ஜெய்ஹிந்த் செண்பகராமன், ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் கம்பெனி நிறுவி, அதை இயக்க முயற்சித்த,மாவீரர் வ.உ.சிதம்பரனார், மாவீரன் உத்தம்சிங் போன்றோர்களது தியாக வரலாறுகளை எளிதாக மறந்து விட இயலாது.

    விடுதலைக்குப் போராடிய யாவரும், தனக்கான ஜாதி, மத, இன அடையாளங்களை துாக்கி எறிந்து இந்தியராகவே நின்றனர். அவர்களின் விருப்பமான  ஒரு தேசத்தைப் படைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

'இமயச் சாரலில் ஒருவன் இருமினால்,குமரியில் வாழ்பவன் மருந்துகொண்டு ஓடுவான்'

    என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். இங்கே நமக்கான அடையாளம் நமது தேசம் மட்டுமே. தேசத்தில் இருப்பவர்கள் அனைவருமே நமது உறவுகள்தான்.தேசத்தையும் தாண்டி மனிதம் வளர்த்த நாடு நமது நாடு. 

    அத்தகு தியாக தீபங்களை இந்நாளில் நினைவுகூர்வுகூர்ந்து நன்றிகளைக் காணிக்கையாக்குவோம்.

ஜெய்ஹிந்த்

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...