31 அக்டோபர், 2021

இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி நினைவு நாள்

   


   செல்வச்செழிப்பும் மேற்கத்திய நாகரிகமும் நிறைந்த மோதிலால் நேருவின் இல்லமான 42 அறைகள் கொண்ட ஆனந்தபவன் மாடியில் விலை உயர்ந்த, மேற்கத்திய உடைகள், இறக்குமதி செய்யப்பட்ட மரச்சாமானங்கள், இன்னபிற ஆடம்பரப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்க காந்தி நாட்டுமக்களுக்கு விடுத்த அறை கூவலையொட்டி ஆனந்தபவனில் அரங்கேறிய இந்தக் காட்சியே சிறு குழந்தையான இந்திரா (இந்து) அறிந்துகொண்ட முதல் அரசியல் நிகழ்வு.

    1921-ல் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் அமர்ந்துகொண்டு, அலகாபாத் நீதிமன்ற நடவடவடிக்கைகளைக் கவனிக்க முயன்றுகொண்டிருந்தார் நான்கு வயது இந்திரா. அதன் இறுதியில் தாத்தாவுக்கும் தந்தைக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அதுவே அவருக்குப் பழகிவிட்டது. ஒருகட்டத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் இந்திரா, “வீட்டில் எல்லோரும் ஜெயிலுக்குப் போயிட்டாங்க” என்று பெருமிதத்தோடு சொல்லும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.

    நாட்டுக்காக ஒரு குடும்பமே சிறைச்சாலைக்குச் செல்வது பெருமைதான். ஆனால் சிறுமி இந்திராவின் வாழ்வில் நேரு குடும்பத்தின் சிறைவாசம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். அன்புசெலுத்த, அருகிலிருந்து கவனித்துக்கொள்ள, குடும்பத்தினர் யாரும் இல்லாத சூழல் அந்தச் சிறுமியின் வாழ்வில் தீராத தனிமையையும் மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்தியது. அதுவே அவரை இறுக்கமானவராகவும் மாற்றிவிட்டது. இதன் தாக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

    ஐந்து வயது முதல் பதினேழு வயதுவரையுள்ள சிறார்களைக் கொண்டு தானே உருவாக்கிய ‘வானர சேனை’யோடு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் இந்திரா. அப்பொழுது அவருக்கு 12 வயது! கடிதங்கள், ரகசிய ஆவணங்களைக் காவல்துறையின் அடக்குமுறையை மீறி தலைவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, தடியடியில் காயம்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகளின் காயங்களுக்கு மருந்திடுவது என்று நீண்டது ‘வானர சேனை’யின் பணி.

    இந்தியா விடுதலை அடைந்ததும் பிரதமர் நேருவின் வீட்டு நிர்வாகம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை மற்றும் உள்நாட்டு மதக் கலவரத்தில் அகதிகளானவர்களுக்கு காந்தியோடு சேர்ந்து பணியாற்றுதல், தனது தந்தையோடு வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்திரா ஏற்கவேண்டியிருந்தது. இது அவருக்கு அரசியல், வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திரம் தொடர்பான பயிற்சியாக அமைந்தது. அதீத கடமையுணர்ச்சியோடும் அர்ப்பணிப்போடும் இந்திரா அவற்றில் ஈடுபட்டார்.

    நேரு மரணமடைந்தபோது, ஆனந்த பவனம் தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. குடியிருக்க வீடுகூட இல்லாத நிலையில்தான் நேரு, இந்திராவை விட்டுச் சென்றிருந்தார். நேருவின் மரணத்துக்குப் பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த இந்திரா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவர்களின் வற்புறுத்தலால் சாஸ்திரி அமைச்சரவையில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரானார்.

    மூன்றாண்டுகளில் சீனா, பாகிஸ்தான் என இரண்டு போர்கள், நேரு, சாஸ்திரி இருபெரும் தலைவர்களின் மரணம், மழையின்மை, வறட்சி, உணவுப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி கையிருப்பின்மை, உலக சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாத சூழல், தானியங்களுக்கு அமெரிக்க பொதுச்சட்டம் என்று மிகவும் நெருக்கடியான, சவால்கள் மிகுந்த சூழ்நிலையிலேயே இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

    வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் சாதனைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. 

    இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு உண்டு.

    இந்தியாவின் இரும்புப் பெண்மணி, வலிமையான பிரதமர் நாட்டிற்காக 66 வயதில் தனது உயிரையே அர்ப்பணித்தார். உயிரைவிட கொள்கை முக்கியம் என்பதை நிரூபித்தார். ஆக்ஸ்போர்டில் நவீன வரலாறு படிக்கச் சென்று, முடிக்காமல் தந்தையை கவனித்துக்கொள்ள பாதியில் திரும்பிவந்த இந்திரா, தானே ஒரு வரலாறானார்!

    இந்திரா மறையும் முன்னர் கலந்து கொண்ட கூட்டத்தில், 

“I am alive today, I may not be there tomorrow. I shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen India and keep a united India alive.” என்றார்.

     இந்திராவின் மரணம், அவரின் ரத்தத்தை மட்டுமல்ல, எளியவர்களின் ரத்தத்தையும் சேர்த்தே சிந்தச்செய்தது !


தேசிய ஒற்றுமை தினம் - வல்லபபாய் படேல் பிறந்த தினம்



• ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் போன்று, இந்தியாவை ஒன்றுபடுத்தி, ஒரே நாடாகக் கட்டமைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல்.அதனால் இவரை இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கிறோம்.

• இவர், குஜராத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.

• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி, சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் இலண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டு, வக்கீல் தொழிலை உதறி, சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.

• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கரப் பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்குக் கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால், காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!

• பர்தோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாகிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அவரது பங்களிப்பால் கவரப்பட்ட காந்தியடிகளால் ‘சர்தார்’ என்று அழைக்கப் பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போயின.

• வட்டமேஜை மாநாட்டுத் தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.

"சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய்" என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

• நாடு முழுவதும், ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த போது, அத்தகைய 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான், உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.

• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக 'சகல' வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும், இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.

• இத்தகு மனவுறுதி படைத்த வல்லபபாய் படேல் தனது 75 ஆம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இவருக்காக 597 அடியில் (182 மீ) உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.

•  “இந்தியாவின் பிஸ்மார்க்”,   “இந்தியாவின் இரும்பு மனிதர்” ,  “சர்தார்” வல்லபபாய் படேலின் 146 ஆவது பிறந்தநாள் - தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒன்றுபட்ட இந்தியாவே, உலகிலுள்ள ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கும்.


30 அக்டோபர், 2021

லா.ச.ரா(மாமிர்தம்) பிறந்த & நினைவு நாள் இன்று

 லா.ச.ரா எனும் மந்திரவாதி





        திருச்சி மாவட்டம் லால்குடியில் 1916 அக்டோபர்30 ஆம் தேதி பிறந்தவர், ராமாமிர்தம். எழுத்துலகில் லா.ச.ரா., என்றழைக்கப்பட்டார். இவர், காஞ்சிபுரம் அருகேயுள்ள அய்யம்பேட்டையில் வளர்ந்தார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றினார்.

       தன் 16ஆவது வயதிலேயே கதை எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கதைகள், 'மணிக்கொடி' இதழில் பிரசுரமாயின. ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

     பச்சைக்கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கச்சிதமான யதார்த்தக் கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர், படைப்பின் கட்டற்ற போக்குக்கு வழி விட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை.
 
     ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர் லா.ச.ரா. அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின் தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம். 

     ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர், ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சத்தின் எல்லைகளைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளியின் பயணத்துக்கு இணை யான பயணமாகி, படைப்பின் தரிசனத்தை விரிவு படுத்துகிறது.

   ‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்’ என்று ஒருமுறை எழுதிய லா.ச.ரா.
 ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும். 

   ‘வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா.ச.ரா.’ என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.

   இவரது படைப்புகள், இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவரது,
'சிந்தாநதி' எனும் வரலாற்று நூல் 1989ல், 'சாகித்ய அகாடமி' விருதைப் பெற்றது.

   சென்னையில் 2007 இல், தான் பிறந்த அதே அக்டோபர் 30ஆம் தேதி, தன் 92ஆவது வயதில் காலமானார். 

    எழுத்தாளர் லா.ச.ரா.பிறந்த மற்றும் காலமான தினம் இன்று!

29 அக்டோபர், 2021

சர்வதேச இணைய நாள்

 

சர்வதேச இணைய நாள் (அக்டோபர் 29)


இணையத்திற்கு வயது 52 ஆகிறது.

1969 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், கலிபோர்னியா பல்கலைக் கழகத்திற்கும் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திற்கும் இடையே முதல் டேட்டா மெசேஜ், இணையத்தின் முன்னோடியான ஆர்பாநெட் (ARPANET) வழியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கற்பனையிலும் எண்ண முடியாத வேகத்தில், திட்டமிடாத திசைகளில், இணையத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் வளர்கிறது. 

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச இணைய தினமாகக் கொண்டாடப்படுகிறது.2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச இணைய தினம் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் நினைவுகொள்ளும் வகையில் முக்கியமான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.


இன்றியமையாத் தகவல்கள்:

1. 2014 ஆம் ஆண்டில், பன்னாட்டளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் 280 கோடி. இவர்களில், 210 கோடி (75%) பேர் முதல் 20 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மீதம் உள்ள 70 கோடி பேர் மற்ற 178 நாடுகளைச் சேர்ந்தவர்கள். மொத்த இணையப் பயனாளர்களில், இந்த நாடு ஒவ்வொன்றிலும் 1% பேரே உள்ளனர்.

2. மொத்த இணையப் பயனாளர்களில், சீனாவில் 22% பேர் உள்ளனர். 2014ல் இவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 20 லட்சம். இதனை அடுத்து வரும் மூன்று நாடுகளான, அமெரிக்க, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த இணையப் பயனாளர்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில், சீனாவில் உள்ளோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

3. முதல் 20 நாடுகளில், இந்தியாவில், அதன் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்கள் 19% பேர் மட்டுமே. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வரும் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, மிக வேகமாக வளர்ந்து வருவதும் இங்கே தான்.

4. ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் அடிப்படையில், மிக அதிக இணையப் பயனாளர்களைக் கொண்டிருப்பது, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகும். இந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையில், 80% பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளனர்.இது 1969-ல், முதல் மின்னணு செய்தியை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பிய நிகழ்வாகும்.

        இன்றைய நவீன  உலகில் இணையம் என்பது மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. இணையப் பயன்பாடு என்பது தொழில் சார்ந்ததாகவும், மருத்துவம், பொழுது போக்கு என எல்லாவற்றிலும்  பரவியுள்ளது.இதன் காரணமாக கிராமங்கள் முதல் நகரம் வரை ஒன்றிணைந்ததுடன் இதன் பயன்பாட்டினால் உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட செய்தியாகவோ, வேறு வகையிலோ நம்மால் உடனுக்குடன்  அறிய முடிகின்றது.

      தற்போதைக்கு, மொபைல் வழி இணைய இணைப்புதான், இணைய வர்த்தகச் சந்தையில் மிகத்துடிப்போடு இயங்குகிறது. இணையம் மிகச் சிறந்த நண்பன்.

      நம் ஐயங்களைப் போக்கவும், நம் எண்ணக்கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், அறிவைப் பெருக்கவும்,பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம்.

28 அக்டோபர், 2021

உலக பக்கவாத நாள் (அக்டோபர் 29)

 உலக பக்கவாத நாள் (அக்டோபர் 29) 

   


 இன்று உலக பக்கவாத நாள். உலகில் பக்கவாதத்தால் (ஸ்ட்ரோக்)ஆண்டுக்கு ஒன்றரை கோடிப் பேர் பாதிப்படைகிறார்கள். அதில், இந்தியாவில் மட்டுமே ஆறு லட்சம் பேர் என்று எச்சரிக்கை செய்கிறது மருத்துவத்துறை. பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஆண்டுதோறும் அக்டோபர் 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

     பக்கவாதமானது திடீரென ஏற்படக் கூடிய ஒரு நோயாகும். அதாவது மூளைக்கான இரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு, மூளைக்கான இரத்தவோட்டம் தடைபடும் போது இந்நோய் வெளிப்படும். இல்லாவிட்டால் மூளைக்கான இரத்தக்குழாயில் திடீரென ஏற்படும் வெடிப்புக் காரணமாக இந்நோய் வெளிப்படும். இவற்றின் விளைவாக மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காது போகும். இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்நோய் வெளிப்படுகின்றது. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் தான் பக்கவாதம் ஏற்படுகின்றது.

    மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நரம்புகளுக்கு பத்து நிமிடம் சரியாகச் செல்லவில்லை என்றாலே, உடல் செயலிழக்க ஆரம்பித்துவிடும். இந்நோய் ஏற்படும் முன் 48 மணி நேரத்துக்குள் வழக்கத்திற்கு மாறான சில அறிகுறிகள் திடீரென உடலில் தோன்றி, சில நிமிடங்களில் தானாகவே பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

    தீவிரத் தலைவலி, பார்வைக் குறைபாடு அல்லது பார்வை மங்குதல், விழுங்க முடியாத நிலைமை, நா குழறுதல், கை, கால் செயலிழந்த உணர்வு, முகம், கை மற்றும் காலின் ஒரு பகுதி விறைப்பு என்பன குறிப்பிடத்தக்க அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், தாமதியாது உடனடியாகச் செயற்பட வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது. 

    இந்த அறிகுறிகள் பேராபத்திற்கான முன் அறிவிப்புகளாக அமையும். அதனால் இவ்வறிகுறிகள் தென்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அறிகுறிகளை விவரமாக எடுத்துக் கூறி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பக்கவாதத்தின் பேராபத்தைப் பெரிதும் தவிர்க்கலாம். 

     உயர் ரத்த அழுத்தம், உடம்பில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, இரத்தக் குழாயில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் முதியவர்களுக்கு இப்பாதிப்பு வருகிறது. அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கும் சில காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. 

     1. உங்கள் குடும்பத்தில் யாருக்கவாது பக்கவாதநோய் இருந்திருந்தால், உடனே பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். 

     2. இரத்தக் கொதிப்பு தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு முதற் காரணம், உடனே உங்கள் மருத்துவரை அணுகி, உங்களுக்கு இரத்தக் கொதிப்பு உள்ளதா என்பதை உறுதிச் செய்து கொள்ளுங்கள். அதைக் கட்டுப்படுத்தத் தேவையான உணவு வகைகளையும், உடற்பயிற்சிகளையும் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகளை மருத்துவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். 

     3. அடுத்தது, இருதய நோய் & முழுவதுமான இருதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இருதயத்தில் ஏற்படும் சில நோயாலும், அடைப்புகளாலும் கூட, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சையின் தேவை குறித்தும், இரத்தக் கட்டுகளைக் கரைக்கும் மருந்துகள் குறித்தும் ஆலோசனை செய்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

     4. உயர் கொழுப்புச் சத்து, உங்கள் இரத்த நாளங்களில் படிந்து, இரத்த நாளத்தின் விட்டத்தை குறுகச் செய்கிறது. இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொழுப்பு இல்லாத உணவுகளை உண்ணப் பழகுங்கள், உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள். மருத்துவரிடம் கேட்டு, கொழுப்பைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுங்கள்.


இனிய வளமான வாழ்விற்கு, மனமார்ந்த வாழ்த்துகள்

சர்வதேச இயங்குரு பட தினம் ( International Animation Day) அக்டோபர் 28

      International Animation Day

    இயங்குரு படங்களின் (Animation) முக்கியத்துவம், அழகை ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, திரைப்படங்களில் காண்கிறோம். அசையும் படங்களைக் கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்கள் தற்போது குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

     இயங்குரு படம், தொலைக்காட்சி, இசை, ஊடகம், இணையம், விளையாட்டுத் துறைகளில் பயன்படுகிறது. 28.10.1892 அன்று, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தைத் திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது .

     யுனெஸ்கோவின் ஒரு அங்கமாகத் திகழும் சர்வதேச அனிமேஷன் திரைப்படச் சங்கம் , 2002 - ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தியது . இந்நாளன்று உலகின் பல பகுதிகளில், இயங்குரு திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக , புதிய இயங்குரு குறும்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன .




27 அக்டோபர், 2021

இந்திய காலாட்படை தினம் இன்று (27.10.1947)

 


    இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய போர்ப் படையான காலாட்படையின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அக்டோபர் 27-ஆம் தேதி காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. 

      1947 ஆம் ஆண்டு இதே நாளில், சீக்கியப் படைப்பிரிவின் 1ஆவது பட்டாலியன் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கி, விடாமுயற்சியையும், அசாதாரணமான துணிச்சலையும் வெளிப்படுத்தி, பழங்குடியினரின் உதவியுடன் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தான் இராணுவத்தின் தீய எண்ணங்களை முறியடிக்கும் 'சுவராக' மாறியது. இதனால், ஜம்மு  காஷ்மீர் மாநிலம் காப்பாற்றப்பட்டது.

      நாட்டுக்காக பல்வேறு போர்களில் உயிர் நீத்த காலாட்படை வீரர்களை வணங்கும் வகையில் தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் காலாட்படை தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறுகிறது. 


24 அக்டோபர், 2021

ஐ.நா சபை தினம்

 ஐக்கிய நாடுகள் அவை (ஐ.நா சபை) தினம்

         ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம்தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

          ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

         


2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

         1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.

          ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.ஐ.நா.வின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது



மருதுபாண்டியர் நினைவுதினம்

 


மருது சகோதரர்கள் வளரிகுச்சியை எறியும் கலையில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையப்போர்களில் மருது சகோதரர்கள் வளரி ஆயுதத்தைப் பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது. 12,000 ஆயுதம் தாங்கிய வீர்களுடன் மருது சகோதரர்கள் சிவகங்கையைச்சூழ்ந்தனர் மற்றும் நவாபின் பிரதேசங்களைச் சூறையாடினர். 1789 மார்ச் 10 ஆம் தேதி நவாப் சென்னை கவுன்சிலுக்கு உதவிக்காக முறையிட்டார். ஏப்ரல் 29, 1789 அன்று பிரிட்டிஷ் படைகள் கொல்லங்குடியில் மருது படைகளை தாக்கின. இங்கு நடைப்பெற்ற பெரியசண்டையில் பிரிட்டிஷ்படைகள் மருதுபடைகளினால் தோற்கடிக்கப்பட்டன.

பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டியகட்டபொம்மனுடன் மருதுசகோதரர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தினார். கயத்தாறில் 1799 அக்டோபர் 17 இல் கட்டபொம்மனுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய பின்பு சின்னமருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் தஞ்சம் அளித்தார். அவர் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப்போராட தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு ஜம்பு தீவுப்பிரகடனத்தை அறிவித்தார். கடைசியில், ஆங்கில மேலாதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்கப் போராடிய காரணத்திற்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர்.

1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது போராளிகளான மருதுபாண்டியனுக்கும், அவரது சகோதரன் வெள்ளைமருதுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

20 அக்டோபர், 2021

      எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு நாள் 




     எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 


    1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் காலத்தைய வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால், தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் சூழல் அமைய, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில், மனைவியின் தனிமையை விரட்டும் வகையில் எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். 


      சார்லஸ் டிக்கென்ஸ், ஜேன் ஆஸ்டென் என ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து உள்வாங்கத் தொடங்கினார். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து, 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை இந்திய சிவிக் கார்ப்ஸ் நூலில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20.


       முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம், உலகமே போற்றும் எழுத்தாளராக வளர, அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம்.


     200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20-க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத் தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ராஜம்.


     1946-ம் ஆண்டு முதல் ராஜம் கிருஷ்ணனின் தமிழ் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகத் தொடங்கின. அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்.


      முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் பெற்றார்.


     'நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன், சோவியத்லாண்ட் நேரு உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். கடந்த 2014 அக்., 20ம் தேதி தன் 89 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.




19 அக்டோபர், 2021

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் (அக்டோபர் 19)

நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று



நாமக்கல் மாவட்டம் 1888 மாவட்டம் மோகனூரில் அக்டோபர் 19 அன்று பிறந்தவர், வெ.ராமலிங்கம் பிள்ளை. 

‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தனிப்பெரும் கவிஞராக விளங்கினார். இதற்குக் காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும். 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.

 நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும், அதன் பின், தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். காங்கிரசில் இணைந்து, திருச்சி மாவட்டச் செயலர், கரூர் மற்றும் நாமக்கல் வட்டாரத் தலைவராகச் செயலாற்றினார்.

காந்தியப் பாதையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1932 இல் நடந்த உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார்.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரானார். சாகித்ய அகாதமியில், தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார். கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என, பல தளங்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் மிகச் சிறந்த ஓவியரும் கூட.

இவர் எழுதிய, மலைக்கள்ளன் என்ற புதினம்,எம்.ஜி.ஆர்.,நடித்து, அதே பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

”கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, 

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”, 

”தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”, 

”கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” 


போன்ற பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் !

 'பத்ம பூஷண்' உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். 1972 ஆகஸ்ட் 24 அன்று, தன் 83வது வயதில் காலமானார்.


Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...