11 நவம்பர், 2021

தேசிய கல்வி தினம் (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்) - நவம்பர் 11

 



    கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 

   ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க குறையாத ஒரே செல்வம் கல்வி தான்.

   அத்தகு கல்வியை நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு,வடிவமைத்த,அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், கடந்த 2008 ஆம் செப்டம்பர் 11 ஆம் தேதி, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவித்தது.

   இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்து - முஸ்லிம் ஒற்றுமையுடன் இந்தியாவை மேம்படுத்தவேண்டும் என்று நாளும் உழைத்த நல்ல உள்ளம் கொண்ட பேரறிவாளர்.

   இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய உறுதிபூண்ட இவர், அதற்கான அடித்தளத்தை அமைத்தார். 

  இந்திய தொழில்நுட்ப கழகத்தை( IIT ) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும், அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி மையம் (Centre for Scientific and Indusrial Research CSIR)   உருவாக்கியதும் இவரது பெரும் சாதனைகளில் சில. சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954)உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் தோற்றுவித்தார். 

   உலக நாடுகளுக்குச் சவால் விடும் வகையில், இந்திய கல்வியில் பெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வந்தார்.

   உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தாம் பாரத ரத்னா விருது தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் மறுத்துவிட்டார். அவர் மறைந்த பிறகு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

  இவருடைய அறிவாற்றலையும் செயல்திறத்தையும் உணர்ந்த காந்தியடிகள் இவரைப் ‘பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை உடையவர்’ எனப்  புகழாரம்  சூட்டிப் பாராட்டினார்.பேரறிவாளர் எனக் காந்தியடிகளால் போற்றப்பட்ட அபுல்கலாம் ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.

* எல்லா மாணவர்களுக்கும் சாதி,மத,இன பாகுபாடின்றி தரமான கல்வி வழங்க வேண்டும்.

* அனைத்துக் கல்வித் திட்டங்களும் மதசார்பற்ற அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

* 14 வயது வரை இலவசக் கல்வி யாவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

* பள்ளிக்கூடக்கல்வி தாய்மொழியில்தான் அமைதல் வேண்டும்.

   இவையெல்லாம் ஆசாத் அவர்களால் விடுதலை பெற்ற இந்தியாவின் மேன்மைக்காக முன்மொழியப்பட்ட கல்விச் சிந்தனைகள் 

உலக நிமோனியா தினம் - நவம்பர் 11


       


  ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையான நிமோனியாவின் தீவிரத் தன்மையை எடுத்துரைக்கவும், அந்நோயை எதிர்த்துப் போராட மேலும் அமைப்புகள்/நாடுகளை ஊக்கப்படுத்தவும் உலக நிமோனியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

       குழந்தை நிமோனியாப் பிரச்சினையை எதிர்த்துப் பொது மற்றும் அரசியல் ஆதரவைத் திரட்ட உருவாக்கப்பட்ட,  குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலக அமைப்பால் (Global Coalition against Child Pneumonia - GCCP) முதன் முறையாக 2009-ல் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டது. 

நிமோனியா என்றால் என்ன?

    நிமோனியா ஒரு கடும் மூச்சு மண்டலத் தொற்று நோய். இது நுரையீரலைப் பாதிக்கிறது. பொதுவாக நுரையீரல் நுண் அறைகளில், சுவாசிக்கும் போது காற்று நிரம்பி இருக்கும். ஆனால் நிமோனியாவில் இந்த நுண்ணறைகளில் சளியும், சீழும் நிரம்பி சுவாசிக்கும் போது வலியைக் கொடுத்து, உயிர்வளி உள்ளெடுப்பைத் தடை செய்யும். வைரஸ், நுண்ணுயிரி, காளான் போன்ற பலவற்றால் நிமோனியா உண்டாகிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிமோனியா:

     காய்ச்சலோடு இல்லாமலும் இருமல் மற்றும்/அல்லது மூச்சு விடுவதில் சிரமம், வேகமான சுவாசம் மற்றும் நெஞ்சுச் சுவர்(விரிவதற்குப் பதில்) உள்ளொடுங்குதல் .

    கடுமையான பாதிக்கப்பட்ட குழந்தைகளால் உண்ண, குடிக்க இயலாமை, மயக்கம், குறைவெப்பம் அல்லது வலிப்பு ஏற்படலாம்.

     5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும்

நாளின் முக்கியத்துவம்:

      நிமோனியாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிமோனியாவில் இருந்து காக்கவும் அதைத் தடுக்கவும் சிகிச்சைகளை ஊக்குவிக்கவும்,

    நிமோனியாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை உருவாக்கவும்,ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12-ஆம் தேதி இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

   உலக சுகாதார நிறுவனமும் (WHO) ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கல்வி அமைப்பும் (UNICEF) நிமோனியாவையும் வயிற்றுப் போக்கையும் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை (GAPPD) உருவாக்கியுள்ளன. 

இலக்குகள்

       நிமோனியா கட்டுப்பாட்டை வேகப்படுத்துவதோடு, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காத்து, சிகிச்சை அளிப்பது இதன் நோக்கம் ஆகும். உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் நிமோனியாவால் ஏற்படும் மரணத்தை ஆயிரத்துக்கு மூன்றாகவும், வயிற்றுப் போக்கால் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தில் ஒன்றாகவும் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைப்பதே இதன் இலக்கு.


 “ நிமோனியாவைத் தடுப்பது அதிர்ஷ்டம் சார்ந்ததல்ல. நடவடிக்கை சார்ந்தது ”

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine