15 ஜனவரி, 2022

இந்திய ராணுவ தினம்

     வீர வணக்கம்

கே.எம்.கரியப்பா

    1949 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 15ஆம் நாள், இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக திரு.கே.எம்.கரியப்பா பதவியேற்ற நாள். அதற்கு முன், சுதந்திரம் பெற்ற பின்னரும் பதவியிலிருந்த பிரிட்டிஷ் அரசின் சர் ஃப்ரான்சிஸ் புட்செரி வெளியேற, இந்திய ராணுவத்துக்கு ஓர் இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

    நாட்டுக்காகக் குருதி சிந்தி, சொந்த விருப்பு வெறுப்புகளைத் துச்சமென மதித்து,நாட்டின் பாதுகாப்பே முக்கியம் எனக்கருதி, எதிரிகளுடன் போரிட்டு, வீரமரணம் எய்தும் உயர்ந்த போக்கினை வெறும் ‘தியாகம்’ என்ற சொல்லில் அடக்கிவிடமுடியாது.

    தாய் மண்ணில் விதையாகிப் போன சரித்திர நாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


    உலகின் மூன்றாவது மிகப்பெரிய ராணுவ சக்தியாகத் திகழும் இந்திய ராணுவம் 13 லட்சம் வீர்ர்களைக் கொண்டது. நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துவருகின்றது.உலகில் அதிகமாக ராணுவத் தளவாடங்களுக்கு செலவு செய்யும் நாடு, உலகின் மிகப்பெரிய கடற்படை கொண்ட நாடு, என நாட்டின் அந்தஸ்த்தைக் காட்டவோ, எதிரிகளின் சிம்மசொப்பனம் இந்திய தேசம் எனப் பறைசாற்றுவதற்கோ இந்தப் பட்டியல் அல்ல. 


    இதையெல்லாம் தாண்டிய பலம், வேற்றுமை மறந்து நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே கருதி போர்களிலும், இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெறும் இந்திய அரசுப் பணியாளனாக அல்லாமல், ஒரு மாவீரனாக தன் தோள்களில் தன் தேசத்தை சுமப்பவனுக்கு, கொண்டாட்டங்களால் அல்ல ஒரு இந்தியக் குடிமகனாக அவனை மனதில் நிறுத்தி நினைவுகூறுவதே மிகப்பெரிய மரியாதை. 

    சகமனிதனுக்குக் கிடைக்கப்பெறும் சாதாரண அடிப்படை சந்தோஷங்களைக் கூட தனக்குள்ளே அழுத்திவைத்துக்கொண்டு  சுற்றம், சூழல் எதையும் பொருட்படுத்தாது, தன்னை மெலுகாக்கி, தேசப்பற்றைத் திரியாக்கி, தியாகச் சுடராக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக நிமிர்ந்து நின்று பெருமிதமாக செலுத்தலாம் வீரவணக்கம்.

                           கூடுதல் தகவல்கள்                      

*இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த புது சீருடையை ஜனவரி 15ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.

*இந்திய ராணுவத்தினருக்கான புதிய சீருடையை தேசிய ஆயத்த ஆடை தொழில்நுட்ப நிறுவனத்துடன் (NIFT) இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. 

*இந்த புது வடிவ சீருடை அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் டிஜிட்டல் அச்சு வடிவிலான அம்சத்தைக் கொண்டது.

*பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, இந்த புதிய டிஜிட்டல் சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. 

*மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும், காடு, மலை, பனிக்காலங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு உகந்ததாகவும் இந்த ஆடை இருக்கும்.

*இந்தச் சீருடையில் மேல்சட்டையை ராணுவத்தினர் கால்சட்டைக்குள் சொருகிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியே தொங்க விட்டிருக்க வேண்டும்.

*புதிய உருமறைப்பு வண்ணக்கலவைச் சீருடை, மஞ்சள் மண் நிறம், பச்சை மற்றும் ஆலிவ் நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

*இந்திய ராணுவ தின கொண்டாட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக, வெவ்வேறு காலகட்டத்தில், குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில் இருந்தது முதல் தற்காலம் வரை இந்திய ராணுவ பயன்படுத்தி வந்த சீருடைகளில் வீரர்கள் அணிவகுத்துச் செல்வர்.

*அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் அணிவகுப்பில் ஏந்திச் செல்வர்.

*இந்த சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கும் வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

*குடியரசு தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையிலேயே ராணுவ வீரர்கள் அணிவகுத்து செல்வர்.

*இந்த ராணுவச் சீருடைகள் வெளி சந்தையில் விற்பனைக்கு வராது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இதை பெற முடியும். போலிகளைக் கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*இந்தப் புதிய சீருடை தேசிய அளவில் முழுமையாக அமல்படுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை ராணுவப் பிராந்தியத் தலைமையகங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine