11 பிப்ரவரி, 2022

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள்

     தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று சாமுவேல், நான்சி தம்பதியரின் மகனாக அமெரிக்காவில் மிலன் என்ற ஊரில் பிறந்தார். ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே ‘முட்டாள் பையன்’ என முத்திரை குத்தி எடிசனை வெளியேற்றிவிட்டது பள்ளி. எடிசனின் அன்னையே ஆசிரியர் என்பதால் வீட்டிலேயே செல்ல மகனுக்கு கல்வி புகட்டினார். 

    எடிசனும் ஆர்வத்துடன் அம்மாவிடம் பயின்றார். பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் நிறைய நூல்களை படிக்கத் தொடங்கினார். அவரது தந்தை, மகனின் அறிவு தாகத்தை மெச்சி உள்ளுர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். எடிசன், பெறும் உற்சாகத்தோடு அறிவியல், தொழில்நுட்பம், அகரமுதலி, இலக்கியம் என தேடித்தேடிப் படித்தார். அறிவியல் நூல்களை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் உள்ள கருத்துக்களைச் சோதித்து அறிய விழைந்தார். 

    தனது வீட்டின் கீழ்த்தளத்தில் தட்டுமுட்டுப் பொருட்களுக்கு இடையில் சிறிய ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். ஆராய்ச்சி செய்வதற்குத் தேவைப்படும் வேதிப்பொருட்கள், கருவிகளை வாங்க பணம்? எடிசன் செயலில் இறங்கினார்.

     ரயிலில் பத்திரிக்கைகள், இனிப்புப் பண்டங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்றார். ரயிலில் பத்திரிக்கை விற்ற எடிசனுக்கு தானும் ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ‘வீக்லி ஹெரால்டு’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். இளம் வயதில் எடிசனிடம் உருவான இந்த தொழில் முனைப்பு பிற்காலத்தில் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபராக அவரை உயர்த்தியது. 14 நிறுவனங்களுக்கு முதலாளியாக உயர்ந்தார். 

     இரயில் பெட்டியில் இன்னொரு புறத்தில் ரசாயனப் பரிசோதனைகள் செய்வதற்காக ஆராய்ச்சி கூடம் ஒன்றை நிறுவினார். பத்திரிகை வேலைகள் இல்லாத சமயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரு முறை வேதிப்பொருளொன்று சிந்தியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த ரெயில் பெட்டி தீப்பிடித்தது. ரெயிலின் நடத்துனர் கோபப்பட்டு எடிசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் அவருக்கு காது கேட்கும் திறன் குறைந்தது. 

     ஒரு முறை ரெயிலில் அடிபட இருந்த மூன்று வயது குழந்தை ஒன்றை, தாவிக் குதித்து மயிரிழையில் காப்பாற்றினார். அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு வாய் வார்த்தைகளால் மட்டும் நன்றி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பொழுது புழக்கத்திலிருந்த தந்தி எந்திரத்தை, மோர்ஸ் குறியீடு மூலம் இயக்குவது எப்படி என்று விளக்கி சொல்லிக்கொடுத்தார். 

     பங்குச்சந்தை குறியீட்டு எண்ணை அறிய உதவும் ‘ஸ்டாக் டிக்கர்' என்ற கருவியைக் கண்டு பிடித்தார். எடிசனின் முதல் கண்டுபிடிப்பு இதுதான். அதன் பிறகுஅமெரிக்காவில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் எடிசன் அமைத்திருந்த மென்லோ பார்க் ஆராய்ச்சிக்கூடம் படுசுறுசுறுப்பானது. 11 நாட்களுக்கு ஒரு சிறு கண்டுபிடிப்பு, ஆறு மாதத்திற்கு ஒரு பெரிய கண்டுபிடிப்பு என இலக்கு நிர்ணயித்து ஆராய்ச்சியில் ஓயாது ஈடுபட்ட எடிசன் ஏராளமான புதுக்கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்தார். 

     தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது இருபத்தி இரண்டாம் அகவையில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. இது வாக்குகளைத் துல்லியமாய் பிரித்துக் காட்டியதால் அன்றைய அரசியல்வாதிகள் அந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்தார். 

     இன்றைய தலைமுறையினரின் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அடிப்படையாக எடிசனின் கண்டுபிடிப்புகள் உள்ளன. மின்விளக்கு, மின்சாரம், நான்மடித்தந்தி, போனோகிராப் எனும் கிராமபோன் இசைத்தட்டு கருவி, மின்சார ரயில், திரைப்படம், சிமெண்ட் கான்கிரீட் என எடிசன் 1368 கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். இது ஓர் உலக சாதனை. எடிசனும் ஆயிரக்கணக்கான தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், தோல்விகளை அவர் அணுகிய விதம் அசாத்தியமானது. 

    சேம மின்கலம் தயாரிப்பு ஆராய்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்து எதுவும் சரியாக வராமல், இறுதியாக கார்பன்தான் பொருத்தமானது என்று கண்டுபிடித்தார். இந்த தொடர் தோல்விகள் பற்றிக் கேட்டபோது, "நான் சேம மின்கலம் தயாரிக்கப் பயன்படாத 1000 பொருள்களைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். இதுதான் எடிசனின் வெற்றி ரகசியம். 

     "ஓர் அஞ்சல் அட்டையில் அவருடைய உருவப்படத்தை மட்டும் வரைந்து அஞ்சல் பெட்டியில் போட்டால் அது நியூஜெர்சியில் மென்லோ பார்க்கில் உள்ள அவருக்கு சென்று சேர்ந்துவிடும்"- இப்படி ஒரு வேடிக்கைப் பேச்சு அந்த காலத்தில் அமெரிக்காவில் இருந்ததாம். அந்த அளவுக்கு தான் வாழ்ந்தகாலத்திலேயே மக்களால் கொண்டாடப்பட்ட மகத்தான விஞ்ஞானியாக விளங்கியவர் எடிசன்.

    தன்னுடைய 84-வது வயதில் 1931 அக்டோபர் 18-ந் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 21-ந் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார். அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளையும் அமைதியாய் நினைவு கூர்ந்தனர்.

    தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...