14 டிசம்பர், 2021

சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம்

 

       ஆண்டு தோறும் டிசம்பர் 14 ஆம் தேதி சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    நாம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும், நம் அன்றாடப் பணிகளுக்கு அவசியமான ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆற்றல்களை வீணாக்கி வருகிறோம். தற்போது, நம்மிடம் இருக்கும் இந்த ஆற்றல்கள் எல்லாம், 100 அல்லது 150 வருடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஆற்றல் பாதுகாப்புக் குறித்து கட்டுரைகள் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல்,போட்டிகள் நடத்துதல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கியக் குறிக்கோளாகும்.

      தற்போது நிலக்கரி, பெட்ரோல், அணு, மின்சாரம் ஆகியவை முக்கிய எரிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு அடுத்த 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி அடுத்த 200 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எரிசக்தியைச் சேமிக்கும் கட்டிடங்களைக் கட்டும்போது அவற்றின் எரிசக்திப் பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களைத் தொழிட்நுட்ப வல்லுநர்கள் கண்காணிப்பதற்கு வசதியான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

     தொடக்கத்தில் சற்று அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பது இத்தகைய கட்டிடங்களை அமைப்பதில் ஒரு பெரும் தடையாக இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் இதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருந்தாலும் அதனால் ஏற்படும் மின்சார சிக்கனம், அதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டை விட பெருமளவு லாபம் கிடைக்கும். 

      எனவே எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டுவதற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற தயக்கத்தை போக்குவதற்கான முயற்சியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

    மின்சாரத்தைப் போலவே நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் பயணமும் அதற்கான வாகனங்களும். இதற்காக வாகன எரிபொருளுக்கு நாம் பெருமளவு செலவு செய்கிறோம். அத்துடன் இந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.

   பெட்ரோலும் டீசலும் பெட்ரோலியம் எனும் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30-40 ஆண்டுகளில் தீர்ந்து போகக்கூடியது.

     இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலும் டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலைச் சார்ந்து நாம் இயங்க முடியாது.

    எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பெட்ரோல், டீசலைச் சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றையும் குறைத்துப் பணத்தையும் சேமிக்க முடியும்.

     பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். தனியாகக் காரில் செல்வதைத் தவிருங்கள். அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.

     சைக்கிள், மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளை அதிகம் பயன்படுத்த முயற்சியுங்கள்.
எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள். வெயில் நேரடியாகப் படும் இடத்தில் நிறுத்துவது எரிபொருளை அதிகம் ஆவியாக வைக்கலாம்.இந்த யோசனைகளைத் தொடர்ந்து நினைவில் வைத்துக் கடைப்பிடித்துவந்தால், எரிபொருள் செலவை நிச்சயம் குறைக்கலாம்.

     எனவே, நமது வருங்காலச் சந்ததியினருக்கு எரிபொருள் ஆற்றலை கொஞ்சமாவது விட்டு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine