28 டிசம்பர், 2021

திருபாய் அம்பானி பிறந்தநாள்

  "உன் கனவுகளை, நீ நனவாக்கத் தவறினால், பிறர், அவர்களது கனவுகளை நிறைவேற்ற, உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” 
                                                                                       - திருபாய் அம்பானி 

         50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி பிறந்த தினம் டிசம்பர் 28.

         1932 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் பிறந்தார் அம்பானி. நடுத்தரக் குடும்பம். இவரது கையில் செல்வம் புரளவில்லை. ஆனால் மனதில் நம்பிக்கையும், திறமையும் வற்றாத ஜீவநதி போல் ஊற்றெடுத்தது. தனது 16 வயதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது.

         இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளைத் துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். ஏமன் சென்ற அம்பானி, அங்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். சிறிது காலம் கழித்து அப்பெட்ரோல் பங்கிலேயே நிர்வாகம் பார்க்கத் தொடங்கினார். பின்னர் இவர் 1958 இல் இந்தியா திரும்பி, சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்கினார்.


        1958 இல் தனது நண்பர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ‘மஜின்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார் அம்பானி. 50,000 ரூபாய் முதலீட்டில் 350 சதுரடியில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். 1966 இல் இவர் ரிலையன்ஸைத் தோற்றுவித்தார். டெக்ஸ்டைல் மூலம், சந்தையில் அடியெடுத்து வைத்த ரிலையன்ஸ் அதிபர், தனது அண்ணன் மகனான விமலின் நினைவாக ‘விமல்’ என்ற பெயரில் தங்களது பொருட்களைத் தயாரித்து வெளியிட்டார். கூடிய விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானது விமல். அதன்பிறகு பாலியஸ்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்.

       லாபத்தை அதிகரிக்க, பாலியஸ்டரை, தானே தயாரிக்க நினைத்தார் அம்பானி. அதற்கான கனரக இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து பாலியஸ்டர் தொழிற்சாலையை உருவாக்கினார். உலக வங்கியிலிருந்து அத்தொழிற்சாலையை பார்க்க வந்த வல்லுநர்கள், 'வெறும் 14 மாதங்களில் இவர்கள் இத்தொழிற்சாலையை அமைத்த விதம் அபாரமானது. உலகத்தரத்தில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது' என்று சான்றளித்தனர். இதுதான் அம்பானியின் தொலைநோக்குப் பார்வை.


        1986 இல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரமிக்க வைத்தனர். பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

      1990 களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

       கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய சக்தியாய் நிற்கிறது ரிலையன்ஸ். உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது அறிவு, திறமையால் செதுக்கிய திருபாய் அம்பானி, மூளை பாதிப்பால், மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69 ஆவது வயதில் 2002-ம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

      இன்று அவரது கனவுகளை நனவாக்கும் முயற்சியில், அவரது மகன்களான,முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ஈடுபட்டு, நம் நாட்டின் பெருமையை, உலக அளவில் நிலைநாட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...