4 ஜனவரி, 2022

உலக பிரெய்லி நாள்

       ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம் நாள் அனுசரித்தது. பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4 ஆம் தேதியன்று அவர் நினைவாக சர்வதேச பிரெய்லி தினம் அனுசரிக்கப்படுகிறது.


      உடல் குறையின்றிப் பிறந்தவா்களை விடவும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருப்பவா்கள் மாற்றுத்திறனாளிகள். அதிலும் பாா்வைத் திறன் குறைபாடு, சாதனைகளுக்குத்த்டையல்ல என்று நிரூபிததவர் லூயிஸ் பிரெய்லி.

      பிரான்சு நாட்டவரான லூயிஸ் பிரெய்லி ஜனவரி 4 ஆம் நாள் பாரிஸ் அருகில் கூப்ரே என்ற இடத்தில் 1809 இல் எந்தக் குறையும் இன்றிப் பிறந்தவா்தான். அவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தந்தையின் பணியிடத்தில் கூா்முனை கொண்ட கம்பியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஒரு கண்ணில் அந்தக் கம்பி குத்தியதில் ஒரு கண்ணின் பாா்வையை இழக்க நேரிட்டது.


       சில ஆண்டுகளில்,பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால்,  இன்னொரு கண் பாா்வையையும் இழந்தாா். இந்த இழப்பு அவரின் கற்றலுக்கு எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. 1819-இல் படிப்பு உதவித்தொகை கிடைக்கப்பெற்று தனது சொந்த ஊரிலிருந்து பாரிஸ் நகருக்குச் சென்று அங்கு தேசிய பாா்வையற்ற குழந்தைகள் பள்ளியில் (Royal Institute For the Blind) பயின்றாா். 

   அங்கு, பாா்வைக் குறைபாடற்ற, மாவீரன் நெப்போலியனின் படையில் பணியாற்றிய பிரான்ஸ் ராணுவ அதிகாரியான சாா்லஸ் பாா்பியா் பாா்வையற்றோருக்கான கற்றலுக்கு முன்னோடியாக புடைப் புள்ளி (எம்போஸ்ட்) எழுத்து முறையைக் காட்சிப்படுத்தினாா்.

     இந்த முறை ராணுவத்தினா் இருட்டில் பயன்படுத்துவதற்காக சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், இம்முறை பிரான்ஸ் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதேயில்லை. எந்த ஒரு பாா்வையற்றோருக்கான பள்ளியிலும் அறிமுகப்படுத்தப் படவில்லை. 

     அதில் ஒலிப்பு முறைகளைக் குறிக்கும் புள்ளிகள் அட்டையின் மீது பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதன் மீது ஆா்வம் காட்டிய லூயிஸ் பிரெய்லி, இந்த முறையினைத் தழுவி தனது ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகள் மற்றும் ஓட்டைகள் கொண்ட முறையினை இசைக் குறியீடு முறையில், மாணவராக இருந்த போது 15-ஆவது வயதிலேயே கண்டுபிடித்தாா்.

     பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

      அந்த மொழியில் பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை,  கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம் என்பதை அவர் நிரூபித்தார்.

     எந்தக் கூா்முனைக் கருவியினால் தனது பாா்வையை இழந்தாரோ, அதே போன்ற கூா்முனை உளியினைக் கொண்டு இதை உருவாக்கினாா் லூயி பிரெயில். 1926-லிருந்து பயிற்றுனராக அந்தப் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினாா். 

     பாா்பியா் அறிமுகப்படுத்திய முறையினை லூயி பிரெயில் ஆறு புள்ளிகளாகக் குறைத்தது, பாா்வையற்றோா் வேகமாகப் படிக்க ஏதுவாக இருந்தது. புள்ளிகள் சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்திய ரோமானிய எழுத்துக்களைப் போல இல்லாமல் பாா்வையற்றவா்களுக்கு ஏற்றதாக இருந்தது.

      தற்போது தொழில் நுட்ப வளா்ச்சியால், இயந்திர பிரெய்லி எழுத்துக்கள், மின்னணு பிரெய்லி குறிப்புக்கள், மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 


      லூயிஸ் பிரெய்லி கண்டுபிடித்த, பிரெய்லி எழுத்துமுறை, அவர் பிறந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் இன்று ஒட்டுமொத்த உலகிலும் இருக்கும் பார்வையற்றோர் அனைவருக்கும் ஒரு வரமாக அமைந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது!

2 ஜனவரி, 2022

தேசிய அறிவியல் புனைகதை தினம் (National Science Fiction day)

 அறிவியல் புனைவுகதைகள், நம்மை ஆச்சரியப்படுத்தி, அறிவை விரிவாக்கி, நம் கற்பனைத்திறனின் எல்லையை விரிவாக்குபவை


         தேசிய அறிவியல் புனைகதை தினத்திற்காக, ஜனவரி 2 தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலானது அல்ல. 400 க்கும் மேற்பட்ட அறிவியல் புனைகதை படைப்புகளை எழுதிய பிரபல அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவின் பிறந்த தேதி என்பதால் தான். அவர்  ‘அறிவியல் புனைகதை’ ( Science Fiction) இலக்கியத்தின் பல்வேறு பகுதிகளைத் தொட்டவர். 

ஐசச் அசிமோவ்
      பெரும்பாலான மக்கள் அவர்கள் விரும்பும், ஏதேனும் ஒரு பகுதியை புனைகதைகளுக்குள் கண்டுபிடிக்க முடியும். அறிவியல் புனைகதைகளில், E.T. the Extra-Terrestrial போன்ற வேற்றுக்கிரக வாசிகளுடன், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட கதைகள் அடங்கும். 


E.T. the Extra-Terrestrial 

Starwars போன்ற விண்வெளிப் போர்கள். H. G. Wells போன்றோரின் புகழ்பெற்ற புத்தகங்கள், The Time Machine அல்லது The Doctor Who Franchise போன்ற காலப் பயணங்களும் இந்த வகையை உள்ளடக்கியிருக்கலாம். சூப்பர் ஹீரோத் திரைப்படங்கள் கூட, அறிவியல் புனைகதைகளை உள்ளடக்கியவை.

எச்.ஜி.வெல்ஸ்

      எனவே, அறியப்படாதவற்றாலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் எதைக் கொண்டு வர முடியும் என்பதற்கான சாத்தியக் கூறுகளாலும் நீங்கள் ஈர்க்கப்பட்டால், நீங்கள் அறிவியல் புனைகதைகளின் ரசிகராக இருக்கலாம் அல்லது ஏற்கனவே இருந்திருக்கலாம். 

The Doctor Who Franchise

       அதனால்தான் இந்த வித்தியாசமான புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் கொண்டாட தேசிய அறிவியல் புனைகதை நாள் சரியான நாளாகும். 


    ஒவ்வொரு நாளும் அதன் கதைகளை நுகரும் அளவுக்கு நீங்கள் அறிவியல் புனைகதையை விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இந்தச் சிறப்பு நாள் உங்கள் கற்பனையைத் தூண்டுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு! அறிவியல் புனைகதைகள் வெறும் கற்பனைகள் அல்ல. எதிர்காலத்தில் உண்மையாகவும் வாய்ப்புள்ளவை. 

     எனவே அறிவியல் புனைகதைகளைப் படித்தும் , அவற்றின் அடிப்படையில் உருவாகும் திரைப்படங்களைக் கண்டும், நம் அறிவை விசாலப்படுத்துவோம்.

1 ஜனவரி, 2022

DRDO அமைப்பு தினம்

 



      ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 1 அன்று, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation - DRDO) அதன் நிறுவன தினத்தை இன்று அனுசரிக்கிறது. 

     டிஆர்டிஓ -1958 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக வெறும் 10 ஆய்வகங்களுடன் நிறுவப்பட்டது மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கான அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. 

     இன்று, டிஆர்டிஓ பல அதிநவீன இராணுவ தொழில்நுட்பப் பகுதிகளில் பணிபுரிகிறது, இதில் ஏரோநாட்டிக்ஸ், பாதுகாப்பிற்கான ஆயுதங்கள், போர் வாகனங்கள், மின்னணுவியல், கருவிகள், பொறியியல் அமைப்புகள், ஏவுகணைகள், பொருட்கள், கடற்படை அமைப்புகள், மேம்பட்ட கணினி, உருவகப்படுத்துதல், சைபர், உயிர் அறிவியல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். 

    கோவிட் தொற்றுக்காலத்தின் போது டிஆர்டிஓவின் பங்களிப்பு மறக்க இயலாதவை. இந்தியாவில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, கிட்டத்தட்ட 40 டிஆர்டிஓ ஆய்வகங்கள் 50 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களையும், 100 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் உருவாக்கியுள்ளன. 

   PPE கருவிகள், சானிடைசர்கள், முகமூடிகள், UV-அடிப்படையிலான கிருமிநாசினி அமைப்புகள், ஜெர்மி க்ளீன் மற்றும் வென்டிலேட்டரின் முக்கியமான பாகங்கள் ஆகியவை மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் வென்டிலேட்டர் உற்பத்திக்கு வழிவகுத்தன. மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக டிஆர்டிஓ குறுகிய காலத்தில் டெல்லி, பாட்னா மற்றும் முசாபர்பூரில் மூன்று பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளை நிறுவியது. 


   மொபைல் வைராலஜி ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் (MVRDL) கோவிட்-19 ஸ்கிரீனிங் மற்றும் R&D நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக பல்வேறு இடங்களில் கோவிட் பரிசோதனை திறன்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

அர்ஜுன் டாங்க்

     அர்ஜுன் (Arjun MBT)) இந்தியாவின் டி. ஆர். டி. ஒ நிறுவனம் இந்திய தரைப்படைக்காக உருவாக்கிய ஒரு கவச வாகனமாகும் (டாங்கு). இது மகாபாரதத்தில் வரும் அர்சுனன் என்னும் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுகிறது. இதன் உச்ச வேகம் 70 கி.மி. ஆகும். இந்திய ராணுவம் 2000ஆவது ஆண்டில் 124 அர்ஜுன்களை டி. ஆர் டி ஒ விடம் கோரியது. இது சென்னையில் உள்ள ஆவடி கவச வண்டிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதன் உருவாக்கம் பல்வேறு தாமதங்களையும் பல தோல்விகளையும் தாண்டி வந்தது ஆகும். இது இந்திய ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள டி-90 என்னும் கவச வாகனத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று  எதிரிகளின் டாங்கிகளை அழிக்கும்  வகையில் அர்ஜூன் டாங்கியில் (எம்பிடி) லேசர் வழிகாட்டும் ஏவுகணையை (ஏடிஜிஎம்) பொருத்தி வெற்றிகரமாக சோதனை செய்தது. 

நாக் ஏவுகணை
     மக்களின் மனங்கவர்ந்த, அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார் என்பது நினைகூரத்தக்கது.


     இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்குப் பின்புலமாக இருந்து,நம் நாட்டை வலிமையாக்கும் இவ்வமைப்பின் பணிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளைச் சமர்ப்பிக்கிறோம்.


வி.எஸ்.ராகவன் பிறந்தநாள்

 

* காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கத்தில் (1925) பிறந்தவர். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு புனித கொலம்பஸ் பள்ளி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். 

*  சிறு வயது முதலே நாடகங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிய நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார். பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் கொண்டவர். துமிலன் நடத்திய ‘மாலதி’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

* ஓர் அச்சகத்தில் வேலை செய்தபோது, சக ஊழியர்கள் நடத்திய நாடகங்களில் நடித்தார். அப்போதுதான் மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் நாடக கம்பெனி தொடங்கினார். சென்னையில் பல இடங்களில் நாடகங்களை இந்த கம்பெனி நடத்தியது.

* கம்பெனி மூடப்பட்ட பிறகு கே.பாலசந்தரின் மேடை நாடகங்களில் நடித்தார். ‘நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற நாடகம் மிகவும் பிரபலம். சினிமாவில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்தார். இவர் நடித்த ‘வைரமாலை’ என்ற மேடை நாடகம் 1954-ல் திரைப்படமாகத் தயாரானது. நாடகத்தில் ஏற்ற அதே கதாபாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இவரது முதல் திரைப்படம்.

* தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக் குரல்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்த மாளிகை’, ‘சுமை தாங்கி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

* 30-35 வயது இருக்கும்போது, ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார். ‘உலக அளவில் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன்’ என்று அடிக்கடி கூறுவார்.

* நாகேஷ் இவரது நெருங்கிய நண்பர். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, ‘எனக்கு ஒரு ஸ்ட்ராங் ஃபில்டர் காபி’ என்றவாறே நுழைவாராம். ‘‘அவரைப் போன்ற அபாரமான நடிகர், அற்புதமான மனிதரைக் காண்பது அரிது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார். நாடக மேடையில் இருந்து என்னை சினிமாவுக்கு கொண்டுவந்தது நாகேஷ்தான் என்றும் சொல்வார்.

* திரைத்துறையில் 60 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். எம்ஜிஆர், சிவாஜி, பின்னர் ரஜினி, கமல் மட்டுமல்லாது, அஜித், விஜய், விமல் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

* சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அவ்வாறே, கடைசிவரை நடித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

* அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர். நினைவாற்றல் மிக்கவர். 1000-க்கும் அதிகமான படங்கள், ஏராளமான நாடகங்கள் என வெற்றிகரமான நடிகராக வலம் வந்து நடிப்புத் துறையில் முத்திரை பதித்தவர் வி.எஸ்.ராகவன் 

31 டிசம்பர், 2021

இந்திய தேசியக்கொடி முதன்முதலில் ஏற்றப்பட்ட நாள்

 'முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற ஒன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில்
சிந்தனை ஒன்று டையாள்' 


    இன்றைய டிசம்பர் 31-ம் தேதிக்கு, இந்திய  விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும் அவர்கள் அதை அநேகமாக மறந்துபோயிருப்பார்கள்.
 

       இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு இருப்பது போன்ற முக்கியத்துவம் டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் உண்டு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்ந்த அந்த நாளை, வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை தினமாகவே கருதுவார்கள்.

         
1929 டிசம்பர் 31-ம் தேதி லாகூர் ராவி நதிக்கரையில் பெரும்திரளாகக்கூடிய தொண்டர் கூட்டத்துக்கு நடுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றிய நிகழ்வு மறந்து விடக்கூடியதா என்ன? அதற்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களின் நீட்சியாகத்தான் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாம் பார்க்க வேண்டும்.

      1927-இல் இந்திய அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் பிரிட்டிஷ் காலனிய அரசு ஜான் சைமன் குழுவை அமைத்தது. அந்த சைமன் குழுவுக்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் பெரும் திரளாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் போராட்டத்தின்போது லாலா லஜபதி ராய் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தது மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது. 

     இர்வின் பிரபு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தார். அதை இந்தியத் தலைவர்கள் பலர் வரவேற்றனர். ஆனால் பிரிட்டனில் அதற்கு எதிர்ப்பு அதிகரித்ததால் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 

       இதற்கிடையில்  'முழுமையான சுதந்திரம்' என்கிற அறைகூவலை பகத் சிங் விடுத்திருந்தார். பண்டித நேருவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸூம் அதை ஆதரித்தனர். லாகூரில் கூட இருந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திரம் கோரிக்கையை நிறைவேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது.  

      அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு லாகூர் நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது லாகூரிலுள்ள பார்ஸ்டல் சிறையில்  பகத் சிங், ராஜ குரு, சுக தேவ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். லாலா லஜபதி ராயை தாக்கியதற்கு பழிவாங்கும் நோக்கில் நடத்திய கொலைக்காக அவர்கள் மரண தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். 1929 டிசம்பர் மாதம் அதே பார்ஸ்டல் சிறையில் இன்னும் பல விடுதலைப் போராளிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். 

     சிறையில் இருந்த விடுதலைப் போராளிகள் லாகூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் பரிபூரண சுதந்திரம் தீர்மானத்தால் உற்சாகம் அடைந்திருந்தனர்.  கடுமையான தடையுத்தரவுகளையும் மீறி லாகூர் நகரம் காங்கிரஸ் மாநாட்டுக்காகவும், அதில் நிறைவேற்றப்பட இருக்கும் பூர்ண ஸ்வராஜ் தீர்மானத்தை ஆதரித்தும் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததாக பல வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 

       டிசம்பர் 30 நள்ளிரவில், ராவி நதிக்கரையில் ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றுவதாக இருக்கிறார் என்கிற செய்தியும், அங்கிருந்தபடி பூர்ண ஸ்சுவராஜ் கோஷத்தை அவர் முன்வைப்பார் என்கிற தகவலும் பார்ஸ்டல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட போராளிகளை எட்டியதும் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். தண்டனைக் கைதி ஒருவர் மூலம் பகத் சிங்கிடம் தொடர்பு கொண்டார் ஒரு போராளி. 

    அன்று நள்ளிரவில் ஜவாஹர்லால் நேரு ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடியை ஏற்றும்போது பார்ஸ்டல் சிறைச்சாலையில் உள்ள விடுதலைப் போராளிகள் அனைவரும் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும் என்கிற அந்தக் கோரிக்கையை பகத் சிங்கும் வரவேற்றார். சிறைச்சாலையில் இருந்த போராளிகள் அனைவருக்கும் தகவல் பரவியது. 

     நள்ளிரவு 12 மணி, ராவி நதிக்கரையில் பெருந்திரளான மக்கள் கூட்டத்துக்கு நடுவே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதே நேரத்தில் பார்ஸ்டல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த அத்தனை விடுதலைப் போராளிகளும் ஒரே குரலில் "வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று முழங்கத் தொடங்கினர். அங்கிருந்த காவலர்கள் அவர்களை அமைதியாக இருக்கும்படி கெஞ்சிப் பார்த்தும் விண்ணைப் பிளக்கும் அந்த கோஷம் அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒலித்தது.

      ஆச்சரியம் அதுவல்ல. லாகூர் பார்ஸ்டல் சிறைச்சாலையைப் போலவே, மேற்கு வங்கத்து அலிப்பூர் சிறைச்சாலையிலும்,  இந்தியாவின் தென்கோடியிலுள்ள கண்ணனூர் சிறையிலும், ஏனைய பல சிறைகளிலும் 1929 டிசம்பர் 31 ஆம் தேதி அதேபோல வந்தேமாதரம் கோஷம் எழுப்பப்பட்டதே, எப்படி? யார் சொல்லி அவர்களுக்குத் தகவல் போனது?

      இப்போதுபோல தகவல் தொடர்புகள் இல்லாத, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அந்த காலத்தில் விடுதலை வேட்கையும் தேசிய உணர்வும் அவர்களை இணைத்திருக்க வேண்டும்.

நன்றி : தினமணி, 31.12.2021 தலையங்கம்

30 டிசம்பர், 2021

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள்

 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள்


* நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

* நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காக, தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.

* பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக் காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.

* பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்லர்.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.

* கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.

* ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!

* 1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.

* நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.

* நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு - தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.

* நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.

* விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

* பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கலைஞர்.மு.கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.

* தொடக்கத்தில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக இயங்கிவந்தன. ஆனால், நம்மாழ்வார் ஆசைப்பட்டதாலேயே பூவுலகின் நண்பர்கள், ரிஸ்டோர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம், பெண்கள் இணைப்புக் குழு, இந்திய நல்வாழ்வு நல்லறம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு 2008 இல் தொடங்கப்பட்டது.

* 1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தன. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!

* தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

* நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.

* நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.

* தன் வாழ்நாளின் இறுதிவரை, இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

* காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

* வாழ்நாளின் பெரும்பாலான நாள்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.

* அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.

ரமணமகரிஷி பிறந்த தினம்

  ‘நான் யார்?' விடைகண்ட ரமண மகரிஷி!

            ஸ்ரீ ரமணர் மதுரைக்குக் கிழக்கே முப்பது மைல் தொலைவிலுள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் பிறந்தார். பெற்றோர்கள் சுந்தரமய்யர் அழகம்மை ஆவர். ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வேங்கட ராமன். அவருக்கு நாகசாமி என்ற மூத்த சகோதரரும் நாகசுந்தரம் என்ற இளைய சகோதரரும் உண்டு. அலமேலு இளைய சகோதரி. 

          திருச்சுழி பஞ்சாயத்துத் தலைவராயிருந்த சுந்தரமய்யர் இறந்தபோது ரமணருக்கு வயது பதினொன்று. தந்தையின் மரணம் வாழ்வு, சாவு பற்றிய உண்மையை அவருக்கு உணர்த்தியது. ரமணருக்கு விளையாட்டில் இருந்த அளவு விருப்பம் படிப்பில் இல்லாமல் போனது. தந்தையின் மறைவுக்குப் பிறகு சுந்தரமய்யரின் சகோதரர்களான சுப்பையரும், நெல்லையப்பரும் அக்குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ரமணர் மதுரையில் இருந்த சித்தப்பா சுப்பையர் வீட்டில் தங்கிப் படித்தார்.

        1896 ஜூலை மாதத்தில் ஒருநாள் வீட்டு மாடியில் இருந்த போது அவரை மரண பயம் கவ்விக் கொண்டது அவர் முழு உணர்வோடு இருந்தாலும் உடல் பிணம் போல் விறைத்துப் போனது. அவருள் ‘நான் என்பது என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. உடம்பின் செய்கையில் இருந்து வேறுபட்டு இயங்கும் ஓர் ஆற்றல் அது என்று அவர் உணர்ந்தார். அந்த உணர்வு உறுதிப்பட அவருடைய மரணபயம் நீங்கியது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாதாரண வாழ்க்கை என்பது அவருக்கு இயலாது போயிற்று. அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் ஏற்பட்டது. 

       ஒருநாள் சுப்பையரைப் பார்க்க வந்த நண்பரொருவர் தாம் திருவண்ணாமலை சென்று வந்ததையும், அருணாசலேஸ்வரர் மகிமையையும் கூறக் கேட்டார் ரமணர்.ரமணர் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவருக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது. ஸ்ரீரமணருக்கு மனம் முழுவதும் அருணாசல நினைவாயிருந்தது. திருவண்ணாமலையிலிருந்து தமக்கு அழைப்பு வந்ததாய் அவருக்குத் தோன்றியது.

        வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றார். ‘நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவரது உத்தரவின் பேரில் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்து இருக்கிறது. யாரும் இது குறித்து வருந்த வேண்டாம் என்பதே அக்கடிதத்தில் இருந்த செய்தி. தடைகள் பல கடந்து 1896 செப்டம்பர் முதலாம் நாள் அவர் திருவண்ணாமலையை அடைந்தார்.நேராக கோவில் கருவறைக்குச் சென்று ‘அப்பா, நான் வந்து விட்டேன் என்று தன் வருகையை அறிவித்தார். 

        சில மாதங்கள் உடலை மறந்து இதயத்தில் மூழ்கி இதய ஆனந்தத்தில் திளைத்தார். முழு மவுனத்தில் இருந்தார். அவ்வப்போது யாரேனும் ஒரு கவளம் உணவை அவருடைய வாயில் திணிப்பார்கள்.அவர் உணவிட்டவரையும் அறியார், தாம் உண்டதையும் அறியார். ரமணரைத் தரிசிக்க பக்தர்கள் திரள் திரளாய் வந்தனர். அது அவருடைய தியானத்துக்கு இடையூறாக இருந்தது.

       அவர் பாதாள லிங்கேசுவரர் கோயிலுக்குள் இருந்த குகையில் தியானத்தைத் தொடர்ந்தார். சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவரது பெருமை மேலும் பரவலாயிற்று. மீனாட்சி அம்மாள் என்கிற பெண்மணி அவருக்குத் தொண்டு செய்து வந்தார். பிற்பாடு ‘குருமூர்த்தம்’, ‘மாந்தோப்பு’ என்று இடம் மாறி நிஷ்டையில் இருந்தார். பல குன்றுகளிலும், குகைகளிலும் தியானம் செய்தார். 

       ரமணரின் இருப்பிடம் தேடி அவரது தாயாரும், மூத்த சகோதரரும் அவரைக் காண வந்தனர். மகான் நிலையில் இருந்தவரைக் கண்டு வியந்தனர். தங்களுடன் ஊருக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், ரமணர் அவர்களுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார். 

        கணபதி முனிவர், சிவப்பிரகாசம் பிள்ளை போன்றோர் ரமணருக்கு நெருக்கமாயினர். அருணாச்சல பஞ்சரத்னம், உபதேசசாரம், அட்சரமணி மாலை போன்ற பல நூல்களை ரமணர் இயற்றினார்.அவர் மிகவும் எளிமையானவர். பின்னாளில் ஆசிரமம் அமைத்து வசித்தபோது அங்கே பக்தர்களுக்கு உணவு சமைக்கும் வேலையிலும் உதவுவார். அவர் சிக்கனமானவர். சிறு காகிதத் துண்டையும் தூக்கி எறியாமல் ஏதாவது குறிப்புகள் எழுதப் பயன்படுத்துவார். உணவளிப்பார். பறவைகளிடத்தும் விலங்குகளிடத்தும் அன்பு காட்டி, ரமணரின் புகழ் எங்கும் பரவியது.

       வெளிநாட்டவர் பலரும் அவரைத் தரிசிக்க வந்தார்கள். உள்நாட்டிலும் சிலர் அவருடனேயே சீடர்களாய் தங்கிவிட்டனர். எல்லாருடைய சவுகரித்துக்காகவும்தான் ஆசிரமம் அமைக்கப்பட்டது.தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தீட்சை அளித்தார் ரமணர் .ரமணருடைய மூத்த சகோதரர் இறந்த பின், அண்ணி யாரும் காலமானார். இளைய சகோதரி துறவறம் மேற்கொண்டார். இளையவர் நாகசுந்தரத்தின் மனைவியும் மரித்தார்.

        அதனால் ரமணரின் தாயாரும் இளைய சகோதரரும் திருவண்ணாமலைக்கே வந்து விட்டனர். இளையவர் ‘நிரஞ்சனானந்த சுவாமிகள்’ என்கிற தீட்சா நாமத்துடன் (ரமணரால் தீட்சையளிக்கப்பெற்று) ஆசி ஆசிரமப் பொறுப்பேற்றார்.1922 மே மாதம் உடல் நலக் குறைவுற்று தாயார் இறந்த போது ரமணர் அவருக்கு ஹஸ்த தீட்சை அளித்து பிறப்பற்ற முக்தி கிடைக்கச் செய்தார். ரமணர்  ஆசிரமம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. அவருடைய நூல்களை வெளியிட்டு விற்பனை செய்ய ஆசிரமத்தில் ஒரு தனிப் பிரிவே இயங்கி வந்தது. 

      ரமணருக்கு எழுபது வயதானபோது உடம்பில் கட்டிகள் தோன்றின. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் தொந்தரவு நீங்கிய பாடில்லை. அவருடைய எழுபதாவது வயதைக் குறித்து ரமண ஜயந்தி வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டது.

       சுவாமிகள் தங்களை விட்டுப் போவதை எண்ணி பக்தர்கள் பெருந்துயரத்துக்குள்ளாயினர்.அவர் சொன்னார், ‘நான் எங்கே போவேன், இங்குதான் இருப்பேன் என்று. அன்று 16.4.1950 வெள்ளிக்கிழமை இரவு மணி 8.47. பகவான் ரமணர் மகா சமாதி அடைந்தார். 

      அவர் மரணம் அடைந்த அன்று வானில் ஒளிமிக்க விண்மீனாய் அவர் ஆன்மா ஊர்ந்து சென்றது. அருணாசலத்தின் உச்சியை அடைந்து மறைந்தது. அன்று ஆயிரக்கணக்கானவர்கள் அந்த ஜோதியைக் கண்டனர். இன்று ஒவ்வோர் இதயத்திலும் ஒளிவிடும் விளக்காய் அவர் விளங்குகிறார்.

28 டிசம்பர், 2021

ரத்தன் டாட்டா பிறந்த நாள்

  “உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!" - ரத்தன் டாட்டா

       இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபாரக் குழுமத்தை, உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலகச் சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா அவர்களின் பிறந்த நாள் இன்று.

       உலக அரங்கில், இந்தியாவின் தொழில் முகமாகப் பார்க்கப்படுபவர் ரத்தன் டாட்டா.சம்பாதித்த பணத்தில் 60 சதவிகிதத்தை மக்களுக்கான சமூகப்பணிகளுக்கு செலவிட்டு வருபவர் இவர். மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா.   

     பிறப்பிலிருந்து தற்போது வரை தாய், தந்தையர் அன்பை தவிர அளவு கடந்த செல்வம், பெயர், புகழ் என அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. முறையாகப் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். இன்றளவும், பல இந்தியர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் IBM நிறுவனத்தில் அன்றே இவருக்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்கும் போது, தன்னிடம் 'ரெஸ்யூம்' என்ற ஒன்றே இல்லை என ஒரு நாள் மேடையில் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

   இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, தாய்நாட்டிற்கே திரும்பினார். தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான, சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார். 30 வருடங்கள், டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்குப் பங்காற்றிய ரத்தன் டாடா, 1991 இல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார். 

     “எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறுவார். அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம். 

     உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். 

     ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க, உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ்.

      உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க, உலகச் சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம். தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது.

      சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் எனப் பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். விலை முன்பு சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்) , உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்குத் தலை வணங்கின.

           "நீங்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? " எனக்கேட்டதற்கு “4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன” என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் டாடா. 

   உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும், ரத்தன் டாடாவின் பங்கு அளப்பரியது.

     நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்துள்ளது டாடா.  

   “என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்” என்பார் ரத்தன் டாடா.

 அவரது சிறகுகள் இன்னும் பல்லாண்டு காலம் பல இடங்களில் விரிந்து பறக்கட்டும்!

திருபாய் அம்பானி பிறந்தநாள்

  "உன் கனவுகளை, நீ நனவாக்கத் தவறினால், பிறர், அவர்களது கனவுகளை நிறைவேற்ற, உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” 
                                                                                       - திருபாய் அம்பானி 

         50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி பிறந்த தினம் டிசம்பர் 28.

         1932 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் பிறந்தார் அம்பானி. நடுத்தரக் குடும்பம். இவரது கையில் செல்வம் புரளவில்லை. ஆனால் மனதில் நம்பிக்கையும், திறமையும் வற்றாத ஜீவநதி போல் ஊற்றெடுத்தது. தனது 16 வயதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது.

         இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளைத் துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். ஏமன் சென்ற அம்பானி, அங்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். சிறிது காலம் கழித்து அப்பெட்ரோல் பங்கிலேயே நிர்வாகம் பார்க்கத் தொடங்கினார். பின்னர் இவர் 1958 இல் இந்தியா திரும்பி, சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்கினார்.


        1958 இல் தனது நண்பர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ‘மஜின்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார் அம்பானி. 50,000 ரூபாய் முதலீட்டில் 350 சதுரடியில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். 1966 இல் இவர் ரிலையன்ஸைத் தோற்றுவித்தார். டெக்ஸ்டைல் மூலம், சந்தையில் அடியெடுத்து வைத்த ரிலையன்ஸ் அதிபர், தனது அண்ணன் மகனான விமலின் நினைவாக ‘விமல்’ என்ற பெயரில் தங்களது பொருட்களைத் தயாரித்து வெளியிட்டார். கூடிய விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானது விமல். அதன்பிறகு பாலியஸ்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்.

       லாபத்தை அதிகரிக்க, பாலியஸ்டரை, தானே தயாரிக்க நினைத்தார் அம்பானி. அதற்கான கனரக இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து பாலியஸ்டர் தொழிற்சாலையை உருவாக்கினார். உலக வங்கியிலிருந்து அத்தொழிற்சாலையை பார்க்க வந்த வல்லுநர்கள், 'வெறும் 14 மாதங்களில் இவர்கள் இத்தொழிற்சாலையை அமைத்த விதம் அபாரமானது. உலகத்தரத்தில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது' என்று சான்றளித்தனர். இதுதான் அம்பானியின் தொலைநோக்குப் பார்வை.


        1986 இல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரமிக்க வைத்தனர். பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

      1990 களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

       கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய சக்தியாய் நிற்கிறது ரிலையன்ஸ். உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது அறிவு, திறமையால் செதுக்கிய திருபாய் அம்பானி, மூளை பாதிப்பால், மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69 ஆவது வயதில் 2002-ம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

      இன்று அவரது கனவுகளை நனவாக்கும் முயற்சியில், அவரது மகன்களான,முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ஈடுபட்டு, நம் நாட்டின் பெருமையை, உலக அளவில் நிலைநாட்டி வருகின்றனர்.

27 டிசம்பர், 2021

லூயி பாஸ்டியர் (Louis Pasteur) பிறந்த நாள்

 நுண்ணுயிரியியலின் தந்தை - லூயி பாஸ்டியர் பிறந்த நாள்  

* நேரடி மருத்துவராக இல்லாமல் மருத்துவத் துறைக்கும், நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முதன்மைப் பங்களித்தவர் பிரெஞ்சு அறிஞர் லூயி பாஸ்டியர்.

* இவர் வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டில் கால்நடைகளையும் மனித குலத்தையும் நோய்கள் பிடித்து அல்லல்படுத்தின. பாஸ்டியரே தன்னுடைய மூன்றுமகள்களை டைபாய்டு நோய்க்குப் பலிகொடுத்துள்ளார். இந்தப் பின்னணியில்தான் அவருடைய கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

* அவருடைய தாய்நாடான பிரான்சில் வேளாண்மைத் துறை சந்தித்த பெரும் சவால்களைப் பாஸ்டியர்தான் களைந்தார். ஒயினை நொதிக்க வைக்கும்போது சீர்கெட்டுப் போவதற்கான காரணம், பட்டுப் புழு வளர்ப்பைப் பாதித்த பெப்ரீன் நோயிலிருந்து மீட்பு மட்டுமில்லாமல் கோழிகளைத் தாக்கிய காலரா நோய், கால்நடைகளைத் தாக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்ததற்காக, பாஸ்டியர் கொண்டாடப்படுகிறார்.

* அறிவியல் ஆய்வுகளை, ஆய்வகங்களுக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்து அவர் கண்டறியவில்லை. ஒவ்வொரு புதிய அறிவியல் சவால் அவரை அழைத்தபோதும், நேரடியாகக் களத்துக்குச் சென்றார். உரிய புரிதலைப் பெறுவதற்காக, அது சார்ந்து அனுபவம் பெற்றவர்களை, நேரில் சந்தித்தார். நேரடிக்கள ஆய்வு அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படை அம்சமாக இருந்தது. 

* அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு வெறிநாய்க் கடிக்கான சிகிச்சை ஊசியைக் கண்டறிந்ததுதான். பாஸ்டியரின் ஆராய்ச்சிக் குழு இதைக் கண்டறிவதற்கு முன்னர்வரை, வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்கள், இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததன.

* வெறிநாய் கடித்தால், அந்த நாயைப் போலவே நடந்து கொண்டு, நீருக்குப் பயந்து ஒடுங்கி இருந்து, பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். 'நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையைக் கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன.ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

* பாஸ்டியர், பல நாய்களின் பின்னால், உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்தார். நாயின் உமிழ் நீரை, தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டுப் பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயதுச் சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனைக் குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. 

தீவிரமான ஆராய்ச்சி, தொடர் உழைப்பு, துணிச்சலான முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவரது ஆராய்ச்சிகளின் அடித்தளமாக அமைந்துள்ளன. மற்றவர்களால் அவிழ்க்க முடியாத அறிவியல் புதிர்களுக்கு, தன் சிந்தனைத் திறனால் பாஸ்டியர் விடை கண்டறிந்துள்ளார். 

* அறிவியல் ஆய்வு ஒன்றையே முதன்மையாகக்கொண்டு வாழ்நாளெல்லாம் இயங்கியுள்ளார். அதேநேரம் அவருடைய வெற்றி என்பது தனிநபரின் சாதனையல்ல. அவருக்குத் துணையாக, அக்கறையான மனைவி, செயலுறுதி வாய்ந்த உதவியாளர்கள் திறம்படச் செயலாற்றி இருக்கிறார்கள். 

மது தயாரிப்பில் சில நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் விளைவுகளைத் தடுக்க, தயாரிப்பு நடைமுறையின்போது மதுவை வெப்பப்படுத்துதல், பிறகு நுண்ணுயிரிகள் வளர்வதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் செய்தல் ஆகிய நடைமுறைகளை அறிவியல்பூர்வமாகப் பரிசோதித்து, பாஸ்டியர் கண்டறிந்தார். இந்த முறை பலனளித்தது. இதுவே, பிற்காலத்தில் பாஸ்டராக்கம் (Pasteurization) என்றழைக்கப்பட்டது.

* பால் போன்ற கால்நடை உற்பத்திப் பொருள்களிலும் நுண்ணுயிரிகள் எளிதில் பெருகுகின்றன. அவற்றைத் தடைசெய்வதற்கான பதப்படுத்தும் நடைமுறையே பாஸ்டராக்கம். மகத்தான அறிவியல் வெற்றிகளைப் பெற்ற பாஸ்டியர்.

* இளம் வயதில் பிரகாசமான மாணவராக இருந்ததில்லை. கல்லூரிப் படிப்புக்குப் பிறகே பரிமளிக்கத் தொடங்கியுள்ளார். இளம் வயதில் ஓவியத்தில் ஆர்வம்கொண்டிருந்த அவர், தோல் பதனிடும் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்.

அறிவியலின் செயல்முறைகள் மீது பெருமதிப்பும், தீவிரப் பிடிப்பும் கொண்டவராகவே இருந்திருக்கிறார். மேற்கத்திய நடைமுறைப்படி இருவர் சந்தித்துக் கொள்ளும்போதும் விடைபெறும்போதும் சம்பிரதாயமாகக் கைகுலுக்கிக்கொள்வது வழக்கம். நுண்ணுயிரிகளைப் பற்றி அதிகம் அறிந்திருந்த பாஸ்டியர், அக்காலத்திலேயே, மற்றவர்களிடம் கைகுலுக்குவதை விரும்பாதவர். 

* பாஸ்டியர் இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பல செயல்பாடுகள் நகர்வதில்லை. அதேநேரம், மனித குலத்துக்கு தன்னுடைய ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, பாஸ்டியர். உருவாக்கிய புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பாஸ்டியர். இன்ஸ்டிடியூட், இன்றைக்கு உலகெங்கும் கிளைகள் பரப்பி இருக்கிறது. 

* உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது வழிவந்தவர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் ஆராய்ச்சித் துறையிலும் இன்றைக்கும் பெரும் பங்களித்து வருகின்றனர். அவரது வழிவந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். 

* இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்குப் போனது என்றால் இவரைத் திருமண நாளன்று காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கிப் போனார்கள். அங்கே எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஆய்வு செய்து கொண்டிருந்தார். 

* “உனக்கு இன்றைக்குத் திருமணம்” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். தன்னலம் மறந்து, மற்றவர்களுக்காக உழைத்தவர் லூயி பாஸ்டியர்.

பிரபலமான இடுகைகள்