30 நவம்பர், 2021

ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

 


        நமது இந்திய தேசத்தின் விஞ்ஞானியுமான, அறிவியல் ஆராய்ச்சியாளருமான சர். ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று 163 ஆவது பிறந்தநாள். தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மையைக் கண்டறிந்து சொன்ன, அந்த அதிசய விஞ்ஞானியின் பிறந்த நாள் இன்று

      1858 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தற்போதைய பங்களாதேஷ் நாட்டின் பகுதி, ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார்.

    இங்கிலாந்தில் இருந்தபோது லார் ரிலே (Lore Rele) என்ற விஞ்ஞானியின் நட்பு போஸுக்குக் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் போஸ். கேம்பிரிட்ஜில் கல்வியை முடித்து இந்தியா திரும்பிய பிறகு கல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

      அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பில் இருந்ததால் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்திய மண்ணில் ஒரு வேலையைச் செய்வதற்காக ஓர் ஆங்கிலேயருக்குக் கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் அதே வேலையைச் செய்யும் இந்தியருக்குக் கொடுக்கப்பட்டது. அந்தப்பழக்கம் அந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்பதால் முழு ஊதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்பதுதான் அதற்குக்கூறப்பட்ட காரணம். 

    ஜெகதீஸ் சந்திரபோஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி நன்கு கற்பித்ததோடு மட்டுமன்றி, பல ஆராய்ச்சிகளையும் செய்தார். அவரது பணியில் முழு திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கு முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க உத்தரவிட்டது.

       அவ்வாறு கிடைத்த தொகையைக் கொண்டு, ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார் போஸ். அந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 

    அடிப்படையில் அவர் ஓர் இயற்பியல் வல்லுநராக இருந்தாலும் ரேடியோ வேவ்ஸ் (Radio waves) எனப்படும் வானொலி அலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். உண்மையில் வானொலியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிப்பரப்பு அமைப்பு முறையை போஸ் உருவாக்கிவிட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்தக்கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் அப்போது கண்டுகொள்ளவில்லை என்கிறது அந்தக்குறிப்பு.

      தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று நம்பிய போஸ் அசைவுகளையும், சலசலப்புகளையும் அளக்கும் பல்வேறு நுண்ணிய உணர் கருவிகளைச் சொந்தமாக உருவாக்கி அவற்றைக்கொண்டு தாவரங்களின்மீது பல்வேறு சோதனைகளைச் செய்தார். அந்த சோதனைகளின் மூலம் வெப்பம்,குளிர், ஒளி, ஒலி போன்ற stimuli அதாவது புறத்தூண்டுதல்கள் எப்படி மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கின்றனவோ, அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். 

     போஸ் ஒரு புகழ்பெற்ற பரிசோதனையையும் செய்து காட்டினார் புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை ஊசி மூலம் ஒரு எலிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் அதே தனிமத்தை ஓர் தாவரத்திலும் செலுத்தினார். எலி, தாவரம் இரண்டுமே மரணத்தின் விளிம்பில் போராடியதைக் கண்டு வியந்த அறிவியல் உலகம் போஸின் ஆய்வுகளைப் பாராட்டியது.

      தனது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இரண்டு புகழ்பெற்ற நூல்களை வெளியிட்டார் போஸ். (Response in the Living and Non-Living), (The Nervous Mechanism of Plants) என்ற அந்த இரண்டு நூல்களும் சொன்ன கருத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. 

    தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன், இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும்கூட பிறப்பும், இறப்பும் உண்டு, நம்மைப்போலவே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளும் உண்டு. இவைதான் அந்த நூல்கள் சொன்ன கருத்துகளாகும். 

    தாவரங்களை நேசிப்பவர்கள் ஒன்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அவற்றுடன் தினசரி அன்பாக பேசினால் அவை நன்றாக வளருமாம். ஜகதீஸ் சந்திரபோஸின் ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது அந்தக்கூற்றும் உண்மை என்றே தோன்றுகிறது.

      அறிவியல் ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ஜகதீஷ் சந்திர போஸ்க்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது அப்போது இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம். 1920 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

   "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரைத் தந்த நமது இந்திய தேசம்தான் அந்தப்பயிர்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டு சொன்னவரையும் தந்திருக்கிறது. 



29 நவம்பர், 2021

குணசித்திர நடிகர்.எஸ்.வி.சகஸ்ரநாமம் பிறந்த தினம்

 


* பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29)

* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 13 வயதில், உள்ளூர் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் பிறந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

* அப்பா எழுதியதைப்போல கடிதம் எழுதி அவருடைய கையெழுத்தையும் தானே போட்டு தயாரித்த சம்மதக் கடிதத்தை டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளரிடம் கொடுத்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். நடிப்பு மட்டுமின்றி, பல தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

* நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார். வாலிபால், பேட்மின்டன் ஆட்டத்திலும் கைதேர்ந்தவர். கார் மெக்கானிக் வேலையும் தெரியும். சிலகாலம் பஸ் கண்டக்டராகவும் பணியாற்றினார். பல நாடகக் குழுக்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

* 1935இல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார். ஆழமான உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தியும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். வித்தியாசமான வில்லன் பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார். வெள்ளையர் ஆட்சியின்போது சுதந்திரப் போராட்டத் தாகத்தைப் பிரதிபலிக்கும் நாடகங்களில் துணிச்சலுடன் முக்கிய வேடங்களில் நடித்தார்.

* இவரே நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் வந்தார். வ.ரா., ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் இவரது நாடகங்களை விரும்பிப் பார்த்தனர். நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார். ‘மேனகா’, ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’, ‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தபோது அவருடைய நாடகக் கம்பெனியின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும் செயல்பட்டுள்ளார். 1950களில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும், ‘சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாடகத் துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.

* பல பிரபலங்கள், இலக்கியவாதிகளின் தொடர்பால் வாசிப்பு ஆர்வமும் கொண்டிருந்தார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை வாசித்தார்.

* நாடகங்களில் பின்னணி பாடும் உத்தியை அறிமுகப்படுத்தியது இவர்தான். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார். ஆர்.முத்துராமன், என்.எஸ்.லட்சுமி, வி.சகுந்தலா, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இவரது கம்பெனியில் நடித்து புகழ் பெற்றனர்.

* மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்தவர். நாடகக் கலையில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. பாரதியின் கவிதைகளை மிகச் சிறப்பாக நாடகமாக அரங்கேற்றியவர்.

* சீனப் போர் சமயத்தில் தேசிய எல்லைப் பாதுகாப்பு நிதி திரட்ட பல நாடகங்களை நடத்தினார். சினிமாவிலும், நாடகங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அனைத்தையும் யுத்த நிதிக்காக காமராஜரிடம் வழங்கினார். 

* குணச்சித்திர நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராகப் போற்றப்பட்ட எஸ்.வி.சகஸ்ரநாமம் 75 ஆவது வயதில் (1988) மறைந்தார்.

கலைவாணர். என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தநாள் & நினைவுநாள்


     

திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது பிறந்தநாளும், நினைவு நாளும் இன்று. 

     இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது. திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

    என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார்.

       சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.

    முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கோமாளித்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. 



      நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். 

     நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் நாடகக் குழுவைத் தொடங்கி அதில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர்.

      'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு. தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன. 

     பழம்பெருமை பேசித் தமிழர்கள் வீணாகி விடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து, கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.

    'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார் கிருஷ்ணன். தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். 

    பிறர் மனதைப் புண்படுத்தாமல், பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. 

      1957 ஆம் ஆண்டு, இதே தேதியில் தனது 49 ஆவது வயதில் கலைவாணர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

28 நவம்பர், 2021

தேசிய மாணவர்படை அமைப்பு தினம் (NCC RAISING DAY)

 


       தேசிய மாணவர் படை, (National Cadet Corps) இந்தியாவில் ஏப்ரல் 16, 1948-ஆம் வருடம் தொடங்கப் பெற்றது. Unity and Discipline என்பதே இதன் குறிக்கோளுரையாகும்.இந்தியாவில் 30 இலட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர். 

      தமிழ‌த்‌தி‌ல் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.மேலும் இந்த எண்ணிக்கையை வருடாவருடம் அதிகரிக்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌டுகிறது.

      1965ஆண்டிலும், 1971ஆண்டிலும் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில், இரண்டாம் வரிசை அணியினராக தேசியப்படை மாணவர் நின்றது, வரலாற்று புகழ் வாய்ந்த நிகழ்வாகும்.

      பள்‌ளி‌ப் பருவ‌த்‌திலும், கல்லூரிப் பருவத்திலும் சமூக‌த்‌தி‌ன் ‌மீது அ‌க்கறை செலு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல், இளவயதினரை வ‌ழிநட‌த்த, எ‌ன்‌சி‌சி எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப் பட்டுள்ளது. இராணுவ‌த்‌திலும், காவ‌ல் துறையிலும் சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு படிப்பு காலத்திலேயே அதற்கேற்ற பயிற்சியை என்சிசி அளிக்கிறது.

        தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். அவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல், தீயணைப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.வேலைவாய்ப்பு பற்றித் தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும், வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

        தேசிய மாணவர் படையின் கீழ் மூன்று பெரும்பிரிவுகள் அமைந்துள்ளன. இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருமே, தேசிய மாணவர் படையினர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆடவர்களுக்கு மட்டுமே அமைந்திருந்த இந்தப் பிாிவில் தற்பாேது பெண்களும் சேர்க்கப்படுகின்றனர்.

1.தரைப்படை அணி 2. விமானப்படை அணி 3. கடற்படை அணி

     தேசிய மாணவர் படையை எல்லையோர மற்றும் கடலோரப் பகுதிகளில் விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 15 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது.




முகாம்கள் 

1. தேசிய மாணவர் படை (இந்தியா)

2. இளைஞர் பரிமாற்ற நிரல் (Youth Exchange Programme)

3. தலைமைப் பண்பிற்கான முகாம்கள் (Leadership Camp)

4. வாயு சைனிக் முகாம் (Vayu Sainik Camp)

5. நவ் சைனிக் முகாம் (Nau Sainik Camp)

6. பாறையேற்ற முகாம்கள் (Trekking Camp)

7. மலையேற்ற முகாம்கள் (Mountaineering Camp)

8. தேசிய ஒற்றுமைக்கான முகாம்கள் (National Integration Camp)

9. தள் சைனிக் முகாம் (Tal Sainik Camp)

10. படை ஒருங்கிணைவு முகாம் (Army Attachment Camp)

11. கடற்படை ஒருங்கிணைவு முகாம் (Naval Attachment Camp)

12. வான்படை ஒருங்கிணைவு முகாம் (Airforce Attachment Camp)

13. குடியரசு நாளுக்கான முகாம் (Republic Day Camp)

14. வருடாந்திர பயிற்சி முகாம் (Annual Training Camp)

15. கூட்டு வருடாந்திர பயிற்சி முகாம் (Combained Annual Training Camp)


உறுதிமொழி

    தேசிய மாணவர் படை மாணவர்களான நாங்கள், இந்தியாவின் ஒருமைப்பாட்டை எப்பொழுதும் நிலைநிறுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.

      எங்கள் தேசத்தின் ஒழுக்கமான மற்றும் பொறுப்பான குடிமகனாக இருக்க நாங்கள் தீர்மானிக்கிறோம்.

     சுயநலமின்மை மற்றும் நமது சக உயிரினங்களின் மீது அக்கறை கொண்ட நேர்மறையான சமூக சேவையை நாங்கள் மேற்கொள்வோம்.

இப்டையின் 73ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாமும் அவர்களை வாழ்த்தி நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவோம்


27 நவம்பர், 2021

வி.பி. சிங் நினைவுநாள்

     


    வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று. 

      இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம். 

     உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக் கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞானப் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். 

    அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்குத் தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.

    எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969 இல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். 

   எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில்,   1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார். 

      நெருக்கடிகாலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். 

    குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது. 1980 இல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திரா காந்தி, வி.பி.சிங்கை உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார்.ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர்,பாதுகாப்புத்துறை போன்ற பதவிகளை அலங்கரித்தார். 

    'ஜனமோர்ச்சா' என்ற கட்சியைத் தொடங்கினார். 1988 இல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

     1989 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துப் பிரதமராகிக் காட்டினார், வி.பி.சிங். 

      பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.

     இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்தச் செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. 

     அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது.

   பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம், கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும்போதே "காவிரி நடுவர் மன்றம்" அமைக்க உத்தரவிட்டார். 

     வி.பி.சிங் நல்ல ஓவியரும் கூட. அவரது ஓவியங்கள் கவித்துவமானவை. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது

   "ஒரு துளி வானம் ஒரு துளி கடல்" என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு. வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.

   பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது, தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். 

     ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

வி.பி.சிங் அரசியலின் அதிசயம். தமிழர்களாகிய நாம் நன்றியுடன் அவரை நினைவில் கொள்வோம்.

26 நவம்பர், 2021

இந்திய அரசியல் சாசன தினம் (சம்விதான் திவாஸ்)

 இந்திய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் (சம்விதான் திவாஸ்) ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


     *நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. மக்களாட்சி சிறப்பாக நடைபெறவும், அதன் மாண்பு காப்பாற்றப்படவும் இந்நான்கு தூண்களும் வலுவாக இருப்பது அவசியம். 

     *ஜனநாயகத் தூண்களை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது தான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 

     * இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர்.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன (சட்ட) தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

     * அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. 

     * பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 

     * இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்புச் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

     * அரசியலமைப்பு வரைவுக் குழுவின் (Drafting committee) தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

     * இந்திய அரசியலமைப்பு சாசனம் கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன. 

     * கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. 

     * அசல் கையெழுத்து ஆவணத்தில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 

 * இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு, இந்திய அரசு சட்டம் 1935-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது.

    * இந்திய அரசியலமைப்பின் முன்னுரை இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. 

    * லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1950, ஜனவரி 26-ஆம் தேதி, இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 

 இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் எழுத்து வடிவம் இல்லை. நம்முடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் வெளிபடுத்துகின்ற பிரகடனமாகும் .

25 நவம்பர், 2021

பிடல் காஸ்ட்ரோ நினைவுதினம்

 


     ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை! எதற்காக வாழ்ந்தான் என்பதில் தான் அவனது வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கிறது. அப்படி ஒரு சிலர் மட்டும் தான் தங்களது மறைவிற்குப் பின்னும் மற்றவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறார்கள்.

        அப்படியொருவர் தான் "மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ". தன் வாழ்நாள் முழுவதுமே புரட்சியின் மூலம் அமெரிக்காவின் சர்வாதிகாரத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

     பாட்டாளி வர்க்கத் தோழனாக வாழ்ந்து மறைந்த கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி ஒரு வசதியான குடும்பத்தில்  பிறந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும்,அவரது சிந்தனை முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் மீதே இருந்தது.

        கியூபாவில் 1953 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இளைஞர்களைத் திரட்டி, கிழக்கு நகரான சாண்டியாகோவில் பாடிஸ்டாவின் சர்வாதிகார அரசுக்கு எதிராகப் போராடினார். ஆனால் அவருக்கு இப்போராட்டம் தோல்வியையே கொடுத்தது. இதன் விளைவாக பிடல் காஸ்ட்ரோவும், அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

     காஸ்ட்ரோ புரட்சிக்குத் திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாகச் சாடினார். நீதி மன்றத்தில் பிடெல் நிகழ்த்திய இந்த உரையே.

நீதிபதி அவர்களே,
         தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

      ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.

       என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

      நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது உடன்பிறந்தவனின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல.

              நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால்,                 வரலாறு என்னை விடுவிக்கும்.

பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும்.

    கியூபா விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்குத் தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிசக் குடியரசை நிறுவினார். தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

    கியூபா பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் அந்நாட்டை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 

     49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அன்னாரின் நினைவுதினம் இன்று.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

 

         பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.

         உலகளவில், பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, வெளி உலகிற்குக் காட்டி அதற்கான நியாயமான, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

        ஐ.நா. சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.

      இந்த நாளில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்டு, விழிப்புணர்வை உருவாக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றவும் மக்களுக்குக் கல்வியூட்டுகின்றன.

     டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர், ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் குரல் கொடுத்தவர்கள்.  “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 

     1980 ஆம் ஆண்டு முதல், அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வுசெய்யப்பட்டது.   

     இத்தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயல்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.

   இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் நடைபெறுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவ மனைகளில், பள்ளிகளிலென பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

     பொதுவாக துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை, பெண் சிசுக் கொலை, பாலியல் வல்லுறவு, தரக் குறைவாக நடத்துதல், அடிமைத்தனம் மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகக் கருதப்படுகின்றன.  

   இவ்வுலகில் அனைத்து உயிர்களும் வாழ, உரிமை உண்டு என்னும் அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதே இவற்றிற்கெல்லாம் காரணம். 

    அன்பின் காரணமாகத்தோன்றும் அக்கறை, கண்டிப்பு இவைகளுக்கும், அதீதக் கண்டிப்பு, வன்முறை,அடக்குமுறைக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு உண்டு.இதை உணர்ந்து, ஆண்,பெண் இருபாலரும் ஒன்றே என்றறிந்து வாழ்வோமாக!


24 நவம்பர், 2021

கோவை தினம் - நவம்பர் 24

      

      


    1804 ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் உருவானதுதான் கோவை மாவட்டம். இந்தக் காலகட்டத்தை வைத்துத்தான் கோவை தினமாகக் கோவை மக்களால் கொண்டாடப்படுகிறது. 

    கோயம்புத்தூரின் பூர்வகுடிகள் இருளர்கள். இவர்களின் தலைவன் கோவன் என்பவன் இந்த அடர்ந்த காட்டுப்பகுதியை பரிபாலனம் செய்து வந்தான். அவன் கும்பிட்டு வந்த தெய்வம் கோனியம்மன். கோவனின் வழி வந்த கோசர் குலத்தவர்கள் சங்க காலத்தில் இங்கே ஆட்சி புரிந்ததால் கோவன், கோனியம்மன், கோசர் பெயராலேயே கோவன்புத்தூர், கோசர்புத்தூர், கோயம்புத்தூராகி, கோவையாகி மருவியது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று.   

   இன்றைக்கும் இவனுக்காக, அவனுக்காக, அவளுக்காக, இவளுக்காக, இவருக்காக, அவருக்காக என்பதை அவனுக்கோசரம், இவனுக்கோசரம், இவளுக்கோசரம், அவளுக்கோசரம், இவருக்கோசரம், அவருக்கோசரம் என கொங்கு மொழியில் சொற்கள் உருளுவதைக் காணலாம். 

   அநேகமாக கோசரம் என்ற சொல், இப்படி கோவை மண்ணில் விடாப்பிடியாக உருண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

 கொங்கு நாடு என எப்படி பெயர் வந்தது? 

       மலைகளும், மலைசார்ந்த பகுதிகளான கோவையில் சோலைகளும், தேனடைகளும் அதிகம். அதைச் சுவைத்துப் பருகிய ஆதிகுடிகள் மத்தியில் சேரர் மரபைச் சேர்ந்த கொங்கன் என்ற அரசன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அதனால் இது கொங்குநாடு என்றும் பெயர் பெற்றதாக பேரூர்ப் புராணம் குறிப்பிடுகிறது. 

     இதில் ஆதி முதலான நகராகப் பேரூர் சொல்லப்படுகிறது. பேரூர் புறநகரில் பொய்கைகளும், அதில் தாமரை மலர்களும், அவற்றில் அன்னப்பறவைகளும், மயில், கிளி, நாகண வாய்ப்பறவை, சக்கரவாகப்பறவை என காட்சிப்படுத்தப் படுகின்றன. வன்னி, வில்வம், கொன்றை, பாதிரி முதலிய மரங்களும் சாதி முல்லை, மல்லி முதலிய கொடிகளும் படர்ந்து நிற்கின்றன. 

      இதில் இடைநகர், உள்நகர், பரத்தையர் வீதி, கடை வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி என வகைப்படுத்தப் பட்டு, நட்ட நடுவே பட்டிப்பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோயில் இருக்கிறது. 

      கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் ஒன்று ஆறை நாடு. இன்றைக்கும் கோவைக்கு மேற்கே ஆனைகட்டி மலைப்பகுதிகளில் ஆறைநாட்டுக்காடு என ஒரு பழங்குடி கிராமம் பெயர் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த ஆறைநாட்டுக்காடு மேற்கில் வெள்ளிமலை தொடங்கி கிழக்கில் அவிநாசி வரை நீள்கிறது. இதில் கிழக்குப் பாகத்தை வடபரிசார நாடு என்றும் மேற்குப் பாகத்தை பேரூர் நாடு என்றும் பெயர் வழங்கியிருக்கிறார்கள். 



     கி.மு. 44 முதல் கி.பி. 54 வரை உரோமபுரி நாட்டுடன் பேரூர் நாட்டிற்கு, வாணிகத்தொடர்பு இருந்தது. அக்கால ரோமானியக் காசுகள் பேரூர் நொய்யல் கரைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 3 முதல் 7-ம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழகம் முழுக்க ஆண்டுள்ளனர். கி.பி. 650-ல் அப்பர் சுவாமிகள் பேரூருக்கு வந்து சென்றுள்ளார் என பேரூர் புராணம் குறிப்பிடுகிறது. கி.பி. 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் சேரர்களும், பாண்டியர்களும், அதன் பின் கங்கர்களும் பேரூர் நாட்டை ஆண்டுள்ளனர். கங்கர்கள் ஆட்சியில் சுந்தரர் கி.பி. 850 இல் பேரூர் வந்துள்ளார். கி.பி. 9 முதல் 12 வரை பேரூர் நாடு சோழர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பேரூர் திருக்கோயிலின் அரத்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை சோழர்களால் கட்டப்பட்டன. 

      அதன் பின்னர் கொங்குச் சோழர்களும், கொங்குப் பாண்டியர்களும். ஹொய்சாளர்களுமே, மாறி மாறி இதனை ஆண்டனர். கி.பி. 1295 இல் அல்லாவுதீன் என்ற அரசன் தென்னாட்டு அரசர்களைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றியதில் பழைய அரசியல் முறைகள் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டது. பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது.

   விஜயநகர அரசர்கள் ஆட்சியின் போது அருணகிரிநாதர் கி.பி. 1450-ல் பேரூர் வந்துள்ளார். 

   1565 இல் விஜயநகர அரசு முடிவுக்கு வந்தது. 1600 இல் கொங்குநாடு மைசூர் வசம் சென்றது. சில ஆண்டுகளில் நாயக்கர்கள் இதை வசப்படுத்தினர். இந்தக் காலத்தில் வீரசைவர் ஆச்சார்ய சாந்தலிங்கர் என்பவர் இங்கே வந்து திருமடம் அமைத்து மாணவர்களுக்கு பாடம், சாஸ்திர நூல்கள் கற்றுத் தந்திருக்கிறார். 

     கி.பி. 1672இல் மீண்டும் பேரூர் நாடு மைசூர் வசம் சென்றது. 1873 வரை சர்வமான்யமாக இருந்த பேரூரை, திப்பு சுல்தான் ஜப்தி செய்து, அதில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மட்டும் கோயிலுக்குக் கொடுத்து வந்திருக்கிறார். 1790-91ல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கைப்பற்றி இதன் முழு வருவாயை கோயிலுக்கே கொடுத்துள்ளனர். 

     1799-ல் ஆங்கிலேயர் பேரூர் கிராமம் முழுவதும் கைப்பற்றி கோயிலுக்கு பட்டாச் செய்து கொடுத்து விட்டனர். 1847-ல் இந்த கிராமம் தர்மகர்த்தாக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பேரூர் 1607.50 ஏக்கர், மாவுத்தம்பதி 3005.77 ஏக்கர் என இரண்டு கிராமங்கள், ஒரு வாய்க்கால், இரண்டு குளங்கள், இன்னொரு குளத்தில் பாதி என இதன் பரப்பளவு நீண்டது. 

பேரூர்,பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நகரமாக திகழ்ந்துள்ளது.



      தற்போதைய தெக்கலூர் அருகே நடந்த அகழாய்வில் வண்ணத்தாங்கரை என்ற இடத்தில் கால்நடைகளின் செமி ஃபாசில்கள் கிடைத்துள்ளன. அவை மேற்கே உள்ள குருடிமலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாளமடல் ஓடை, தன்னாசிப் பள்ளத்தில் கரைபுரண்ட காட்டாற்றில் அடித்துவரப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என்கிறார்கள். அப்போதே அங்கு கால்நடைகளை வளர்த்த நாகரிக மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. 

    சோழ நாட்டையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் ராஜகேசரிப் பெருவழி, பாலக்காட்டுக் கணவாய்க்கு அருகில் செல்கிறது. கி.மு 4ஆம் நூற்றாண்டிலேயே ரோமானிய கிரேக்க நாடுகளுடன் சோழநாடு வணிகத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு ஆதாரமாக இப்பெருவழியையொட்டி ஓடும் நொய்யலில் பல இடங்களில் அகழாய்வின்போது ரோமானியக் காசுகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன. இதில் பழைமையான நகரங்களாக திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடுமணல், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர், பேரூர் இருந்துள்ளது. 

     கி.பி. 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை 32 அணைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் கட்டி நீர்ப் பரிபாலனம் செய்துள்ளனர், அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட சோழர்கள். இதனால், ஆண்டு முழுக்க செழிப்பான பகுதியாக இருந்தது கோவை. 1804 இல் பிரிட்டீஷார் கோவை மாவட்டத்தை உருவாக்கியபோது, கேரளத்தின் பாலக்காடு தொடங்கி, கர்நாடகாவின் கொள்ளேகால் வரையிலும் கோயமுத்தூரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது. அதிலிருந்து 1868 இல் நீலகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

    கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு, உடுமலைப்பேட்டை ஆகியவை கோயமுத்தூர் மாவட்டத்தின் தாலுகாக்களாக இருந்தன. 

    1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிறந்தபோது, பாலக்காடு கேரளத்துடனும், கொள்ளேகால் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன. மாவட்டப் பிரிவினையின்போது, கரூர் தாலுகா திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பின்னர், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உதயமானது. 

    இதேபோல், பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979 இல் உருவான ஈரோடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009 இல் திருப்பூர், உடுமலை பகுதிகளைப் பிரித்து, திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.  

   கோயில் சார்ந்த, கிராமம் சார்ந்த, விளைச்சல் சார்ந்த மக்கள் வாழ்க்கை இக் காலகட்டத்தில் தொய்வு பெற்று, அதைத்தாண்டி கிழபுறமுள்ள பிரதேசம் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், பவுண்டரிஸ், இண்டஸ்ட்ரீஸ், இயந்திரப் பணிமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என பெருக தற்போதுள்ள கோவை நகரமும், கோவை மாவட்ட கிராமங்களும் வளம்பெற்றன. 


       பேரூர் என்ற ஆதி கோவை நகரம் இதில் ஒரு சிறு கிராமமாக மாறி நிற்கிறது.இத்தகு  பெருமைகள் கொண்ட கோவையில் பிறந்து வாழ்வதைப் பெருமையாகக் கொள்வோம்.

23 நவம்பர், 2021

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்



 

 “கவிதை எழுதுவது எளிய செயலில்லை. அதற்கு ஆழ்ந்த படிப்பும் கடின உழைப்பும் வேண்டும். கவிதை எழுதுவதற்குப் பதிலாக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.” - சுரதா 


       இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை பாரதியாரால் மறுமலர்ச்சி பெற்றது. பாரதியார்பால் கொண்ட பற்றின் காரணமாகவே புதுவைக்காரரான சுப்புரத்தினம் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். 

    தாசன் என்பதற்கு அடியவர், தொண்டர் என்று பொருள். தாசன் என்று முடியுமாறு புனைப்பெயர் வைத்துக்கொள்வது அன்றைய போக்காக இருந்தது. அதனால்தான் முத்தையா என்பவர் கண்ணதாசன் ஆனார். கம்பதாசன், வாணிதாசன் என மேலும் சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

    செய்யுள் மரபு மாறாமல் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர் சுரதா (இராசகோபாலன்). இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 

    “ஓடப்பராய் இருக்கும், ஏழையப்பர்,உதையப்பராகி விட்டால் ஓர்நொடிக்குள், ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” 

என்பவை பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகள். 

நாகப்பட்டினத்தை அடுத்த பழையனூரில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாளில் பிறந்த இராசகோபாலன் அவ்வரிகளைக் கேட்கிறார். அந்நொடியில் இளைஞர் இராசகோபாலன் அதனை இயற்றிய பாரதிதாசன்மேல் பற்றுக்கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ ஆனார். 

 பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா.

அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார். தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

கவிஞர் திருலோக சீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. 1944ம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார் 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். 

 கப்பல் கவியரங்கம், படகுக் கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம் என்று பலவாறு முயன்றவர். 'கவிஞர் காலண்டர்' ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்கூட இருந்தார்.   

சுரதா எழுதிய திரைப்பாடல்கள் எண்ணிக்கையில் முப்பது. எம்ஜிஆரின் 'என் 'தங்கை திரைப்படத்திற்கு எழுதிய 

 “ஆடும் ஊஞ்சலைப் போலவே அலை ஆடுதே” என்பதுதான் சுரதாவின் முதற்பாட்டு. முதல் பாடலின் முதல்வரியே உவமைதான். 

“அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு, ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே, 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா, கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே” 

போன்ற பாடல்கள் சுரதாவினுடையவை. 

 “கவிதை என்பது வரப்பிரசாதமில்லை. கற்றுக்கொண்டு உழைத்தால் வருவது” என்பதில் உறுதியான கருத்துடையவர்.

 தம்மை ’மொழிப்பற்றாளர்’ என்று கூறுவதையும் அவர் ஏற்கவில்லை. “இது மொழிப்பொறுப்பு. பற்று வைத்தல் இன்னொன்றைச் சிறப்பாகக் கண்டவுடன் மாறிவிடக்கூடியது” என்றார். 

எதனைப் பற்றியும் அஞ்சாமல் தடாலடிக் கருத்துகளைக் கூறுபவர் சுரதா. அவற்றில் உண்மையும் இருந்ததால் மறுப்பதும் கடினம்.

“புதுக்கவிதைக்கு வடிவம் இல்லையே, வடிவம் இல்லாதது எப்படி நிலைக்கும்?” என்றார். “மரபு வடிவம் இல்லாமல் இருப்பதால் இப்போதைக்குப் புதிதாகத் தெரிகிறது” என்பது அவரது கணிப்பு.

அது உண்மையும்கூட. தற்போது தம் புதுமையை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்ற இக்கட்டில் புதுக்கவிதையுலகம் இருக்கிறது. மரபுக்கவிதை என்பது தமிழின் தோற்ற வடிவம். அதன் வடிவம் மாறாமல் காப்போம்.

22 நவம்பர், 2021

உலக தொலைக்காட்சி தினம்

     


     1996ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் பரிந்துரையின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ஆம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. 
ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 17, 1996 இல் நடந்த 99ஆவது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தின்படி இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

     முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது.தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைக்கூறுவதும், தொலைக்காட்சியினூடாக, உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு,சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதும்,மற்றும் தங்களது கலை, கலாச்சார, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்வதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருள்களாகக் கொள்ளப்படுகின்றன. 

     இத்தினத்தில் தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு பற்றி சற்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். 1926ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியலறிஞர்தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஆனால் தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

     'பில்லோ பான்ஸ்வர்த்' என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் 'விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின்" என்பவர் கண்டுபிடித்தார். இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் அறிமுகம் செய்தவர் என்பதனால் 'ஜான் லூகி ஃபெர்டு" 'தொலைக்காட்சிக் கண்டுபிடித்தவர்" என்று இனங்காட்டப்படுகின்றார்.

      தொலைக்காட்சி மிகச் சிறந்த ஊடகம். அதன் மூலம் மக்களுக்கு அரிய பல செய்திகளைக் குறித்த நேரத்தில் கொண்டுசேர்க்க இயலும்.ஒருதலைப்பட்சமின்றி நடுநிலையான செய்திகளைத் தருவதன் மூலமே மக்கள் மனங்களில் தொலைக்காட்சி ஊடகம் இடம்பெற இயலும்.

20 நவம்பர், 2021

சர்வதேசக் குழந்தைகள் தினம் - நவம்பர் 20

       


      ஐ.நா-வின் யுனிசெஃப் ( UNICEF) எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20 ஐ, உலகக் குழந்தைகள் தினம் என அறிவித்துள்ளது. 

குழந்தைகள் நலனுக்காக, கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. 

     உலக மக்களிடையே, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டப்பூர்வமாகத் தரப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து GoBlue என்ற பிரசாரத்தை நடத்தப்பட்டுவருகிறது. நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு.

     இதைத் தாண்டி உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்யேகமாகக் கொண்டாடப் படுகின்றது. 

     ஐக்கிய நாடுகள் அவை, இனம், நிறம், பால், மொழி, மதம், கருத்து, செல்வம், திறன் ஆகியவற்றைக் கடந்து  18 வயதிற்கு உட்பட்டோர்க்கு குறைந்த பட்சம் உரிமைகள் மற்றும் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும் என்று வரையறுக்கின்றது.


குழந்தைகளின் உரிமைகள்

               ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமே  “குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள் அளிக்கப்படல் வேண்டும் “ என்பது தான். மேலும், குழந்தைகளின் உரிமைகள் நான்கு பரந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரிவுகளும் சமூக, பொருளாதார, கலாச்சார , குடிமை உரிமைகளை அளிக்கக்கூடியதாகும். அந்த உரிமைகள் என்னென்ன ?

1.வாழும்உரிமை

               வாழும் உரிமையானது குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும் பொழுதே துவங்கி விடுகின்றது.  நம்  இந்திய  அரசாங்கத்தின்  கொள்கையின் படி குழந்தையின் வாழ்க்கையானது தாயின் கருவில் 20 வாரங்களிலேயே துவங்கி விடுகின்றது. வாழும் உரிமையில் குழந்தையின் பிறக்கும் உரிமை, குறைந்தபட்ச தர அளவிலான உணவு, உறைவிடம், உடை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியனவும் அடங்கி விடுகின்றன.

2.பாதுகாக்கப்படும்உரிமை

               பாதுகாக்கப்படும் உரிமையானது குழந்தைகள் புறக்கணிக்கப்படுதலிலிருந்து காத்தல் , வீடு மற்றும் பிற இடங்களில் சுரண்டல் மற்றும் தவறாக நடத்தப்படுதலிலிருந்து காத்தல் ஆகியன ஆகும். ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேசக் குழந்தைகள் நிதியமான யுனிசெஃபும் இதனையே  வலியுறுத்துகின்றது.

3.பங்கேற்கும்உரிமை

               குழந்தைகளின் பங்கேற்கும் உரிமையானது, குழந்தைகள் சார்ந்து முடிவெடுக்கும் விஷயங்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகள் பங்கேற்கும் உரிமையினைப் பெற்றுள்ளமை ஆகும். மேலும், வயதிற்கேற்றாற் போலவும் முதிர்ச்சிக்கேற்றாற் போலவும் பங்கேற்கும் நிலையானது வேறுபடுகின்றது.

4.முன்னேற்ற உரிமை

               குழந்தைகள் அனைத்து விதமான முன்னேற்ற உரிமைகளைக் கொண்டுள்ளார்கள். அவை குறிப்பாக உணர்வு, உடல் மற்றும் மன ரீதியான முன்னேற்ற உரிமைகளை உள்ளடக்கியது. உணர்வுசார் முன்னேற்ற உரிமையானது முறையான வளர்ப்பு மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. மன ரீதியான முன்னேற்ற உரிமையானது கல்வி மற்றும் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியது.  அனைத்து உரிமைகளையும் குழந்தைகளுக்கு அளித்திடல் வேண்டும்.


 குழந்தைகளின் உரிமைகளை,அவர்களுக்கு முழுமையாக அளிப்போம். அவர்கள், உரிய முறையில் வளர்வதை உறுதி செய்வோம்.

19 நவம்பர், 2021

சர்வதேச ஆண்கள் தினம் - நவம்பர் 19

 

       உலக ஆண்கள் தினம் (International Men's Day),ஆண்களைப் பெருமைப் படுத்தும் வகையிலும் அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

       1999 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளிலுள்ள ட்ரினிடாட் & டொபாகோவில் இது தொடங்கப்பட்டது. ஐக்கியநாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட நாளாகவும் இதுவிளங்குகிறது.  இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஹங்கேரி போன்றவற்றை உள்ளடக்கிய உலகின் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

   ஆண்கள் -  பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டும். வீரம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கு அதிகம். 

      மேலும் அலுவலகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதைவிட அதிகம் என எண்ணும் போது அவர்களுடைய மனம் மற்றும் உடல் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. 

     அலுவலகம், குடும்பம் என பல்வேறு இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் . ஆண்களுக்கான பிரச்சினைகளைக் களைவதற்கும், அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தை பேண ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஆண்கள் தங்களுக்காகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அனைத்து கவலைகளையும் மறந்து கொண்டாட ஏற்படுத்தப்பட்டது.

 “அன்பு காட்டத் தெரியாதவன் ஆண் அல்ல. அன்பைக் காட்ட நேரமில்லாமல் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு ஜீவன்".

      ஆண்கள் என்பவர்கள் இயந்திரம் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே. தன் குடும்பத்தின் தேவைக்காக தன்னையே அழித்துக்கொள்பவர் ஆண்கள்.பதற்றம், கவலை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. உணர்ச்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஆண்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

     எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்கள் மீது இந்த சமூகம் வைக்கும் எல்லா எதிர்பார்ப்புகளையும், எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியா விட்டாலும்,  சமாளிக்க முயல்வார்கள்.

   அன்பை வெளிப்படுத்துவது சிறப்பு என்றால், அந்த அன்பை ஒரு சிறப்பு நாளில் வெளிப்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். நம் வாழ்க்கையில் தொடர்புடைய எல்லா ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்.


18 நவம்பர், 2021

வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்

 


         வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டம், எங்கும் தங்கு தடையின்றி நடைபெற்ற காலம். கதர் சட்டையைக் கண்டால் அடி. கதர் குல்லாயைக் கொண்டால் அடி. வந்தேமாதரம் என்றால் உதை என்று ஆங்கியேர்களின் வெறியாட்டம் நடந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் தமிழக மக்களிடம் மறைந்திருந்த புரட்சிக் கனலைத் தட்டியெழுப்பி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர்முனைக்குத் தமிழ்ப்படைகளை அழைத்துச் சென்ற தமிழன் வ.உ.சிதம்பரனார்.

     தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர்கள் பன்னிரெண்டு மணிநேரம் ஓய்வில்லாமல் வேலை செய்வதையும், விடுமுறையே இல்லாமல் சிரமப்படுவதையும் கண்டு மனம் நொந்தார். அதை ஒன்பது நாள்கள் தொடர்ந்து நடத்திய  போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை, வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்தது.

     பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள்

     சுதேசியின் மீது சிந்தனையைச் செலுத்திய வ.உ.சி. பல்வேறு சுதேசி உணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளையர்களின் கொள்ளைகளை உணர்ந்தார். அதை ஒழித்துக் கட்ட   “தரும சங்க நெசவுச்சாலை”, ”சுதேசிய நாவாய்ச் சங்கம்”, ”சுதேசிய பண்டகசாலை”களை ஆரம்பித்தார். அவர் மேடையிலேறி மக்களைத் திரட்டினார். அந்நிய ஆடைகளைக் கொளுத்தினார். அந்நியப் பொருள்களை கையால் கூட தொடுவதில்லை என்று உறுதியெடுத்தார்.

      ஆங்கிலேயர்களின் கொள்ளை லாபத்துக்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தத் திட்டமிட்டார். பாண்டியர்கள், சோழர்கள் காலம் முதல் கடலாதிக்கம் பெற்றிருந்த தமிழர்கள், ஆங்கிலேயர்களின் கப்பல் வர்த்தகத்தால் தடைபட்டுவிட்டது என்று கருதினார்.இதனால் 1906-ம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கினார். 

      வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

     தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே, “ சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதி நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். பின்னர் அந்த தண்டனை மேல்முறையீட்டுக்கப்  பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.  வ.உ.சி சிறை சென்றதும், கப்பல் கம்பெனி நொடிந்து விட்டது.

      சிறைச்சாலையில் மாட்டிற்குப் பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்கச் செய்து ஆங்கிலேயர்கள் அவருக்கு சித்ரவதை கொடுத்தனர். கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின; சணல் நூற்று, கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப் புரட்டி போட்டது.  

    ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தொடர்ந்து சேவை செய்தார். 1936-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக வ.உ.சி இயற்கை எய்தினார்.

உலக தத்துவ தினம்


   உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.

       2002ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலில் 2005ஆம் ஆண்டில், உலக தத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

     இந்தத் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூர முடியும்;  நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தைத் தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது.

     ஐநா சபையின் வரையறையின்படி, உலக அமைதிக்கு அடிப்படையான ஜனநாயகம், மனித உரிமைகள், நீதி, சமத்துவம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான கருத்தியல் தளத்தை அமைப்பது தத்துவம்.

       தத்துவம் என்பது அறிவு, அனுபவம், இருப்பு மற்றும் எதார்த்தத்தைப் பற்றிய படிப்பைக் குறிக்கிறது. தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயலும்.

     மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்வதற்கும், புதிய கருத்துகளை வெளிப்படையாக ஆராய்ந்து விவாதிப்பதற்கும், சமூகச் சவால்கள் மீது விவாதத்தை மேற்கொள்ளவும், தத்துவங்கள் பயன்படுகின்றன.

     மாறி வரும் காலங்கள் நம் முன்வைக்கும் சிக்கல்களை சமாளிப்பதற்கும் தேவையான புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் வளர்ப்பதற்குத் தேவையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் ஏற்படுத்தப்பட்டது.

   இன்றைய தினத்தில், தற்போது நமக்கு என்ன மாதிரியான தத்துவங்கள் தேவை, அதை எப்படி உருவாக்குவது, எப்படி கற்பது கற்பிப்பது என்பது சம்பந்தமான கலந்துரையாடல்கள், விவாதங்கள் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெறும்.

   தத்துவம் அனுபவத்தின் உடனடியான வெளிப்பாடு, நிதர்சனங்களின் நேரடியான குரல்கள். சுருங்கச் சொல்வது என்றால் தத்துவம் வாழ்க்கையின் அற்புதமான தரிசனம்.

17 நவம்பர், 2021

பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் - “உள்ளேன் ஐயா”


“தமிழ் மொழியின் உயர்விற்கும் உழைப்பதே எனது உறுகடன் என்றும், தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப் போர் என்ற குறிக்கோளையும் வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன்” 

என்று முழங்கிய சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் இன்று (நவம்பர் 17).

   யாருக்கும் அடிபணியாத தன்மான உணர்வு, அஞ்சா நெஞ்சம், தமிழ் உணர்வு மிக்கவர். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார், ‘மாணவர் ஆற்றுப்படை’, ‘துரத்தப்பட்டேன்’, ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘என் வாழ்க்கைப் போர்’, ‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ போன்ற தமிழ் நூல்கள், ‘தமிழ் லாங்வேஜ்’, ‘மீனிங் ஆஃப் தமிழ் கிராமர்’ என்பது போன்ற ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.

உள்ளேன் ஐயா

     தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை’Yes Sir’ என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர். இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.

     தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக போப்பைச் சந்தித்த போது, இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.

    "எழிலரசி" உள்ளிட்ட கவிதை நூல்கள், "தமிழ்க் கற்பிக்கும் முறை" , "அமைச்சர் யார்", "தொல்காப்பிய ஆராய்ச்சிகள்", "இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்", "வள்ளுவர் வகுத்த அரசியல்" உள்ளிட்ட ஆய்வு நூல்கள், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்.

     திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம் - தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களை எழுதியுள்ளார்.

    சங்க இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.தமிழாசிரியராக, விரிவுரையா ளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர்.

    திருவாரூரில் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் கலைஞர் மு.கருணாநிதி . "தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் " என்று 'நெஞ்சுக்கு நீதி' நூலில் கலைஞர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

     கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர்க்குழுச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர். இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெருநடைப் பயணத்தாலும் சிறைவாசத்தை அனுபவித்தவர்.

    தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொதுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.

    செந்தமிழ் மாமணி', 'இலக்கணச் செம்மல்', 'முத்தமிழ்க் காவலர்', 'செம்மொழி ஆசான்', 'தமிழர் தளபதி' என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். "தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும், தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை.

    தமிழகத்தின் உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை. தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட  ஐயா இலக்குவனாரின் அடியொற்றி தமிழ்ப்பணியாற்றுவோமாக!


உலகக் குறைப்பிரசவ (விழிப்புணர்வு) தினம் (World Prematurity Day)

        


     2008 ஆம் ஆண்டு ,நவம்பர் 17 அன்று, ஐரோப்பியப் பெற்றோர் அமைப்புகள் ஒன்றுகூடி, குறைப்பிரசவ தினத்திற்கான முதல் சர்வதேச விழிப்புணர்வு நாளை உருவாக்கின. இந்நாள், 2011 ஆம் ஆண்டு முதல் உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது.

      தற்போது உலகளாவிய  தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக குறைப்பிரசவ தினம் கொண்டாடப்பட்டது.

UNICEF மற்றும் WHO இவற்றிற்குத் தலைமையேற்றன.

     குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும்.

      எனவே, அந்நோய்கள் பற்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெற்றோர் குழுக்கள், குடும்பங்கள், சுகாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், மருத்துவமனைகள்  போன்றவை செயல்படுகின்றன. 

யாருக்கெல்லாம் குறைப்பிரசவம் நேரலாம்..?

* கர்ப்பக்காலத்தில் உடல்நலனில் எந்தப் பிரச்னையோ, வேறுபாடுகளோ இல்லாத பட்சத்திலும், இரண்டு முதல் ஐந்து  சதவிகிதம், நல்ல உடல்நலம் கொண்ட பெண்களுக்கும் குறைப்பிரசவம் நேரலாம்.

* மிகக் குறைந்த அல்லது அதிக வயதுடைய பெண்களுக்கு...

* குறைந்த எடையுடைய அல்லது உடல் பருமன் அதிகமான பெண்களுக்கு...

* புரதச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட ஊட்டச் சத்துக் குறைபாடுடைய பெண்களுக்கு...

* இதயம், சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...

* வலிப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...

* கர்ப்பக்காலத்தில் ஏற்படும் சில உடல் மாறுபாடுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு... 

* இரட்டைக் குழந்தைகள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கருவுற்ற பெண்களுக்கு...

* கர்ப்பவாயில் தொற்று (Bacterial vaginal infection) ஏற்பட்ட பெண்கள் மற்றும் குடல் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...

* கர்ப்பப்பையில் கட்டி, சதை வளர்ச்சி, பலவீனமான கர்ப்பவாய் போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்களுக்கு...

* நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் பெண்களுக்குக் கர்ப்பப்பை அதிகமாக விரிந்து கொடுக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு ...

* நஞ்சுக்கொடியில் (Placenta) தொற்று இருந்தால், நஞ்சுக்கொடி கீழிறங்கியோ, சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கும் சூழலில்...

* சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்தச்சோகை.

* வேலைப்பளு, மன அழுத்தம், தேவைக்கு அதிகமான ஓய்வு, காயம்படுவது, அதிர்ச்சி யடைவது.

* குடும்பத்தில் வேறு யாருக்கேனும் குறைப்பிரசவம் நிகழ்ந்திருந்து, அதே கர்ப்பப்பை குறைபாடு கர்ப்பிணிக்கும் இருக்கும் மரபுக் காரணம்,

* கர்ப்பிணியின்/ கணவரின் மது, புகைப் பழக்கம்.


       இதுபோன்ற காரணங்களால் பெண்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படலாம்.

வாராது வந்த மாமணி போல் கிடைக்கும் குழந்தை வரத்தை முன்னெச்சரிக்கையுடன் இருந்து, பெற்று வளர்ப்போம்

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece