21 ஜனவரி, 2022

எம்.எஸ்.உதயமூர்த்தி நினைவுநாள்

     "உன்னால் முடியும் தம்பி" என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி. மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.உதயமூர்த்தி. 

    முன்னேற்ற உளவியலைப் பற்றி, தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக, இதழ்களில் கட்டுரைகள் எழுதியதோடு ஏறத்தாழ 40 நூல்களாகவும் வடித்திருக்கிறார். சிறந்த ஆசிரியருக்கான விருதும், Fulbright Scholar என்ற கெளரவமும் பெற்றவர். 

    இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால்  ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தை எடுத்ததுடன், படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றே பெயரிட்டார். இளைஞர்கள், தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த, எழுத்து மூலமும், பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம் .

    எம்ஜிஆரால், அழைத்துப் பாராட்டப்பெற்றவர், தமிழக அரசால் விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டவர். அன்பானவர், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர். ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் பற்றிக் கேள்விப்படாத அந்த நாள்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன. 




    'பிரச்சனைகளுக்குத் தீர்வு  காண்பது எப்படி?, 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்', 'எண்ணங்கள்', 'நீதான் தம்பி முதலமைச்சர்' உட்படப் பல நூல்களை எழுதியவர். “எண்ணங்கள்” புத்தகம் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    தமிழ்ச் சமூகம் தலை நிமிர, வாழ்வின் இறுதி மூச்சுவரை சிந்தித்தவர், உழைத்தவர். இன்று தன்னம்பிகையாய் நடைபோட்டு சமூக அக்கறையுடன் களப்பணி செய்யும் இளைஞர்கள் பெரும்பாலும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் தாக்கம் இல்லாமல் இருக்க முடியாது.நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்கச் செய்யலாம் என்று விரும்பியவர். 

    பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களுக்கு,  இவரே முன்னோடியாவார். "ஐயாவின் நூல்கள்தான் என்னை வழிநடத்தியவை" என்று இன்றைக்கும் பலர் நெஞ்சாரக் கூறுவதை கேட்கமுடியும். கிராமத்தில் பிறந்த முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் இவரின் நூல்களைப் படித்து, தொழில் துறையிலும், வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளை ஈட்டி, இன்று வெற்றியாளர்களாக இருப்பதே இதற்குச் சான்று. 

    தமிழர்களின் காவிரிப் பிரச்சினை,  மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் மிகவும் தெளிவான சிந்தனையுடன் களப்பணி செய்தவர். சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் இவரது நூல்களை ஒருமுறை படித்தால் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் அதற்கான தெளிவான தீர்வையும் பற்றிய தெளிவு கிடைக்கும். 

    விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து அமெரிக்கா சென்றவர், 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றினார். 'சிறந்த தொழிலதிபர்' என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாராட்டப் பெற்றவர். 


    தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை 1988 இல் தொடங்கியவர். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புண‌ர்வை ஏற்படுத்தி வந்தது. இளைஞன் ஒருவன் முரசறைவது ‌போன்ற படம் இந்த இயக்கத்தின் சின்னம் ஆகும்.

    செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில், தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர். இதன் மூலம் சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர், சாலைகளைச் சீரமைத்துக் கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------

    அவர், அடிக்கடி கீழ்க்காணும் மூன்று கருத்துக்களை, தொடர்ந்து வலியுறுத்தினார்:

1.நாம் இந்த மண்ணிலே பிறந்ததிற்கு இந்த மண்ணிற்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும்.

2.நாம் இந்த மண்ணை விட்டுச் செல்லும்போது, சில நல்ல அடையாளங்களை இந்த மண்ணில் விட்டு விட்டுச் செல்ல வேண்டும்.

3.நமக்கும்,பிறருக்கும்,இந்த சமுதாயத்திற்க்கும் ஆன வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை.உனக்காக மட்டும் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------- 

    தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர், அரசியலில் சூது, தந்திரம் அறியாதவர். தனது அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற ஒரு புதிய சமுதாயத்தை தமிழகம் பெறவேண்டும் என்று விரும்பி 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டார். 

    நேர்மையான அரசு அமைய வேண்டுமென்றால் அரசியலில் ஆர்வம கொண்ட இளைஞர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், சமுதாய ஈடுபாடு என்ற மூன்று நிலைகளில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் இவர். இதற்காகப் பல நிகழ்ச்சிகளை இளைஞர்களிடையே அவர் நடத்தினார்.

    அவரது எண்ணங்கள் இன்று வரை தமிழகத்திற்கு வழி காட்டுகிறது. எம்.எஸ்.உதயமூர்த்தி 80வது வயதில்  ஜனவரி 21- 2013 அன்று காலமானார்.

    தானும் நிமிர்ந்து நின்று, தமிழர்களையும் தலை நிமிர்த்த முயன்ற, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு நமது அஞ்சலியைக் காணிக்கையாக்குவோம்.

20 ஜனவரி, 2022

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

     தென்னிந்தியாவின் ஜான்சிராணி என காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, சுதந்திரப் போராட்டப் பெண் தியாகி அஞ்சலை அம்மாள். 

    கடலூர் முதுநகரில்,  ஓர் எளிய குடும்பத்தில் 1890 ஆம் ஆண்டில் பிறந்தவர் சுதந்திர போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாள். ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, அஞ்சலையம்மாள் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

    1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்பச் சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தைச் செலவிட்டார். 

    1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தில் இந்திய விடுதலைக்காக போராடிய பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொலை செய்யக் காரணமாயிருந்த நீலன் என்பவனுக்குச் சென்னையில்,சிலை இருந்தது. இதை அகற்றுவதற்காக, சோமயாஜீலு தலைமையில் நடந்த போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார் அஞ்சலையம்மாள்.

    தான் மட்டுமல்லாமல் தனது ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும் போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தார். வெள்ளையர் அரசு, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    தனது ஒன்பது வயதுக் குழந்தையைச் சிறையிலேயே வளர்த்தார். சிறையில் இருந்த அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாள் இருவரையும் காந்தியடிகள் சிறைக்குச் சென்று  பார்வையிட்டுள்ளார். அம்மாக்கண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மறுபெயரிட்டு தன்னுடன் வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார்.

    1931 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு, அஞ்சலையம்மாள் தலைமை தாங்கினார். 1932 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து, கைதாகி, சிறைச் செல்லத் தயாரானார் அஞ்சலையம்மாள். வேலூர் சிறைக்குள் அவர் நுழைந்தபோது நிறைமாத கர்ப்பிணி. பலரும் அவரைத் தடுத்தும் இந்திய விடுதலைக்காக சிறைச் செல்ல தயக்கம் காட்டவே இல்லை. 

    சிறைக்குள், கடும் வேதனையை அனுபவித்தார். ஒரு மாதம் அவகாசம் கேட்டு வெளியே சென்று வீர மகனைப் பெற்றெடுத்தார்.பிறந்து இரு வாரங்களே ஆகியிருந்த பச்சிளம் குழந்தையோடு மீண்டும் சிறை சென்றார். கைக் குழந்தையோடு சிறை வாசத்தை ஏற்ற அவரின் உறுதி, அவருக்குத் தண்டனை கொடுத்தவர்களையே கண்டிப்பாக அசைத்திருக்கும். எந்தச் சூழலிலும் தாயக விடுதலைக்கான தன் பயணத்தில் பின் வாங்கத் தயாராக இல்லை அஞ்சலையம்மாள்.

    ஒருமுறை காந்தியடிகள், கடலூருக்கு வந்தபோது, அவரை அஞ்சலையம்மாள் சந்திக்க முயன்றார். ஆங்கிலேய அரசாங்கம்,  அஞ்சலையம்மாள், காந்தியடிகளைப் பார்க்கத் தடை விதித்தது. ஆனால் அஞ்சலையம்மாள், பர்தா அணிந்து, ஒரு குதிரை வண்டியில் வந்து, காந்தியடிகளைச் சந்தித்தார். இத்துணிவைக் கண்டு, காந்தியடிகள் இவரைத்  “தென்னிந்தியாவின் ஜான்சி ராணி” என்று அழைத்தார்.

    1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், அஞ்சலையம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டுக்காகப் பாடுபட்ட தனக்கு தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தவர் அஞ்சலை அம்மாள்.மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தார். 

    அவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சிகளுள் ஒன்றுதான் தீர்த்தாம்பாளையத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்தது. கடுமையான குடிநீர்ப் பஞ்சத்துக்குள்ளான அக்கிராமத்து மக்கள், நீண்ட தொலைவு சென்று நீர் பிடித்து வர வேண்டியதாயிற்று. 

    அந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளியாகத்தான் புவனகிரிச் செல்லும் வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்கு கொண்டு வந்தார். குடிநீர்ப் பிரச்னையும் தீர்ந்தது. அதற்கான நன்றிக் கடனாகவே அஞ்சலை வாய்க்கால் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

    1961 ஆம் ஆண்டு, சீ-மூட்லூர் பகுதியில்,தமது 71 -வது வயதில் 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி திங்கள் கிழமை அஞ்சலை அம்மாள் காலமானார்.

19 ஜனவரி, 2022

சீர்காழி கோவிந்தராஜன் பிறந்தநாள்

 இசை வளம் நிரம்பிய சீர்காழியில் பிறந்து இசை உலகில் தன்னிகரற்று விளங்கித் தமிழிசை வளர்ச்சியில் தனியாக அடையாளப்படுத்தக் கூடியவராக இருந்தவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன்.

    ஜனவரி 19, 1933-ல் பிறந்த சீர்காழிக்குச் சிறுவயதிலேயே இசை ஆர்வமும் கலைப்பற்றும் அதிகம். கோயில் சார்ந்த இசையனுபவத்தில் லயித்து நிற்பார். இறைபக்தியும் அவரிடம் இயல்பாக இருந்தது. மகனின் இசை ஆர்வத்தைக் கண்ட தந்தை மகனுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். இவரே தான் கற்ற இசையைப் பலவிதமாகப் பாடிக் கூடியிருப்போரை மகிழ்விப்பார். பாடும்பொழுது அதில் தனது சொந்த ஆலாபனையையும் சேர்த்துக் கொள்வார். 

    கல்வியிலும் மிகுந்த அக்கறை காட்டினார். ஆசிரியர்களின் பாராட்டுக்கும் உரித்தானவராக இருந்தார். பள்ளியில் கற்ற கல்வியும் வீட்டில் பெற்ற இசைப் பயிற்சியும் இவருடைய எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிட்டன. அந்தக் காலத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட எம். கே. தியாகராஜபாகவதர், டி. ஆர். மகாலிங்கம் போன்றோரின் பாட்டுகளை சீர்காழி அற்புதமாகக் பாடிவந்தார்.

    1949-ல் சென்னை தமிழிசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 'இசைமணி' என்னும் பட்டத்தையும் பெற்றார். சங்கீதத்தில் மேலும் பயிற்சிபெற விரும்பி சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் (இப்போது தமிழ்நாடு அரசு இசைச் கல்லூரி) மேற்படிப்பு படித்தார். 1951-ல் 'சங்கீத வித்துவான்' எனும் பட்டத்தைப் பெற்றார்.

    இவர் எல்லா மொழிக் கீர்த்தனத்திலும் மரபுமுறை வழுவாமல் பொருளுணர்ந்து உச்சரித்துப் பாடும் பயிற்சியை முறையாக வளர்த்துக் கொண்டார். தமிழ்க்கீர்த்தனங்கள் சீர்காழியின் குரலில் புதிய கோலங்கள் பூண்டன. எடுப்பான குரல், சுருதி சுத்தம், தெளிவான உச்சரிப்பு-இது தான் 'சீர்காழி' என்று அடையாளம் காட்டுமளவிற்குத் தனித்தன்மை மிக்கவராக இருந்தார். 

    இசைக் கச்சேரிகளுக்கான வாய்ப்புகள் பெருகின. தமிழிசை இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்று இருப்பதற்கு சீர்காழியில் இசைக்கோலங்களும் தக்க பின்புலமாகவே இருந்தன.

    சாதாரணமாக மூன்றுமணி நேரம் நடத்தும் கச்சேரியை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வார். அதாவது முதல் ஒருமணி நேரம் சாஸ்திரிய சங்கீதம். இரண்டாவது ஒருமணி நேரம் பக்திப் பாடல்கள். கடைசி ஒரு மணி நேரம் திரைப்பட இசை. இந்தப் பகுப்பு சாதாரண இசை ஆர்வலர்கள்வரை அனைவரையும் இசை அனுபவத்தில் மூழ்க வைக்கும் சிறப்புக் கொண்டது.

    பக்திப்பாடல் இசைத் தொகுப்பில் சீர்காழியின் குரல் தனித்தொலிக்கும். சீர்காழி பாடிய கந்தர் அலங்காரம், கந்தர் சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, திருப்புகழ், திருமந்திரம், சகலகலாவல்லி மாலை போன்றவற்றுக்கு டி. ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். "ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு தனிமுத்திரை உண்டு.

    சீர்காழி திரையிசை, இறையிசை, நிறையிசை (பண்ணிசை) ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்தவர். 1953-ல் 'பொன்வயல்' எனும் திரைப்படத்தில் 'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். அன்று முதல் திரை இசையில் சீர்காழியின் பாடல்கள் தனித்துவம் மிக்கவையாகவே விளங்கின. 

    தொடர்ந்து அவர் பாடிய பாடல்கள் அவரது குரலால் தனிச்சிறப்புப் பெற்றன. இவர் பலரது இசையமைப்பிலும் பாடல்கள் பாடத் தொடங்கினார். தன் இசைவாழ்வுக்கு முதன்முதல் ஆலோசனை கூறி வழிகாட்டிய மேதை ஜி. இராமநாதன் இசையிலும் பல பாட்டுக்களைப் பாடியுள்ளார்.

    'பட்டணம் தான் போகலாமடி' (எங்க வீட்டு மகாலட்சுமி - இசை எம்.வேணு),


 'அமுதும் தேனும் எதற்கு' (தைபிறந்தால் வழி பிறக்கும் - இசை கே.வி.மகாதேவன்), 

'மாட்டுக்கார வேலா' (வண்ணக் கிளி - இசை கே.வி.மகாதேவன்), 


    'வில் எங்கே கணை எங்கே' (மாலையிட்ட மங்கை - இசை விஸ்வநாதன்-இராமமூர்த்தி) என்று பல்வேறு பாடல்கள் பாடினார். பட்டிதொட்டியெங்கும் சீர்காழியின் குரல் ஒலித்தது. சீர்காழியின் வெண்கல நாதம் இசையியல் வரலாற்றில் தனித்தன்மை மிக்கதாகவே இருந்தது.

    கர்ணன் படத்தில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ எனும் பாடலில், சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கேட்போரின் கண்களைக் கலங்கச் செய்து விடும்.


    பக்திக்குத் தமிழ்மொழியின் சிறப்பு ஆழமானது, அழகானது. இதனால்தான் பக்தியிசை தமிழ் சார்ந்த அழகியல் தத்துவத்தின் பின்னணியில் வெளிப்படும்போது அது ஏற்படுத்தும் தாக்கம் உணர்வு பூர்வமானது. சீர்காழியின் பக்திப்பாடல்கள் ஆத்மார்த்த தரிசனத்தின் நிகழ்காலச் சாட்சி ஆகும். மனித மனங்களை மனித நிலைப்பட்ட இறைவனுடன் தொடர்புபடுத்தும் ஒரு கருவியாகவே பக்தி இசை விளங்குகிறது.

    திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

    தமிழ்த் திரையிசை கூடத் தமிழர் வாழ்புலத்தின் கடத்துகையின் ஒருவித மோதல் நிலை என்றே கூறலாம். ஆனால் அது சுகமானது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா (நீர்க்குமிழி), உள்ளத்தில் நல்ல உள்ளம் (கர்ணன்), வெற்றி வேண்டுமா (எதிர்நீச்சல்) போன்ற பாடல்கள் ஏற்படுத்தும் பதிவுகள் ஆழமானவை. இதற்குப் பாடல் வரிகள் மட்டுமல்ல அந்த வரிகள் எந்த குரலில் ஒலிக்கின்றன என்பதும் முக்கியம். இதுபோல் எத்தனையோ பாடல்களைக் குறிப்பிட முடியும். 

    பாரதி, பாரதிதாசன் பாடல்களைச் சீர்காழியின் குரலில் கேட்கும்பொழுது ஏற்படும் சுகம் சொல்லிமாளாது.சீர்காழி பாடி நடித்த படங்களும் உண்டு. அப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் அவருக்கு பெரும்புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளன. திரையிசையிலும் நடிப்பிலும் அவரளவிற்கு தனித்துவம் பேணக் கூடியவர்கள் வெகுசிலரே. அவர்களுள் ஒருவர் சீர்காழி.    

    இசையரசு, இசைப்புலவர், இசைப்பேரறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழகம் மட்டும் அல்ல தமிழ்பேசும் நாடுகளிலும் சீர்காழியின் குரல் ஓங்கியொலித்தது அவரது பாடல் இன்றுகூட புதிய அனுபவங்களைத் தரும் வகையிலேயே உள்ளது. 

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராகவும் இவர் பணிபுரிந்ததுண்டு. அத்துடன் இசையியல் பற்றிய நுட்பமான, ஆழமான கருத்துக்களையும் கொண்டிருந்தார்.

    கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதோடு மேலும் பல கௌரவங்களுக்கு உரியவராகவே விளங்கிவந்தார். இவர் மார்ச் 24, 1988-ல் மறைந்தாலும் இவர் பாடிய பாடல்கள் மூலம் அவரது குரல் உயிர்கொண்டு வாழ்கிறது. இசை உலகில் சீர்காழி ஓர் சகாப்தம்தான்.

ஜேம்ஸ்வாட் பிறந்தநாள்

     பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி, ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட் பிறந்தநாள் இன்று.


     ஜேம்ஸ் வாட், ஸ்காட்லாந்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் படங்கள் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். காகிதம் வாங்க காசு இருக்காது என்பதால், வீட்டுத் தரையிலேயே வரைவார். இவரது ஓவியங்களில் வட்டம், சதுரம், முக்கோணம் என கணித சம்பந்தமானவை அதிகம் இடம்பெறும்.

    பிறவியிலேயே சற்று பலவீனமானவர். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். தொடர்ந்து பள்ளிக்குச் செல்லமுடியாததால், தன் அம்மாவிடம், வீட்டிலேயே கல்வி கற்றார்.

    உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும் இயந்திரங்களைப் பற்றியே கனவு காண்பார். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். ஊர் திரும்பிய அவருக்கு கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்தில் இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை கிடைத்தது.

    தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு 1764-ல் கிடைத்தது. அதில் அதிக சக்தி வீணாவதைக் கண்டார். 

    உடல்நிலை அனுமதிக்காதபோதும் மனம் தளராமல் கடுமையாக உழைத்தார். இயந்திரத்தில் சக்கரம் பொருத்தும் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி அதை மாற்றம் செய்தார்.இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. இதற்கு காப்புரிமை பெற்றார். 

    இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்தார்.

    1775 இல் பொறியாளர் மேத்யூ போல்டன் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இருவரும் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்து பெரும் செல்வந்தர்களாயினர். இவரது கண்டுபிடிப்புகள் மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக விளங்கின.

    அதுவரை மனித, விலங்கு ஆற்றல்களையே நம்பியிருந்த தொழில் உலகம் புதிதாக நீராவி என்ற இயற்கை சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியது. உற்பத்தி பல மடங்கு பெருகியது. தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது.

    ஜேம்ஸ் வாட்டின் கண்டுபிடிப்பு பல துறைகளில் ஊடுருவியுள்ளது. 1783 ஆம் ஆண்டு ஒரு படகில் நீராவி இயந்திரத்தைப் பொருத்தி அதனை இயக்கினார் Marques de zafra என்பவர். 1804 ஆம் ஆண்டு Richard Trevithick என்பவர் நீராவி இயந்திரத்தைக் கொண்டு இயங்கும் இரயில் வண்டியைக் கண்டுபிடித்தார். 

    அவையிரண்டும் ஆரம்பத்தில் வெற்றியடையாவிட்டாலும் சில ஆண்டுகளில் நீராவிப் படகும், நீராவி இரயிலும் முறையே கடல் மற்றும் நிலப்போக்குவரவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. நீராவிப் படகுகள் கடல் அலைகளை வெற்றிக் கொண்டன. நீராவி இரயில்கள் நிலப்பரப்புகளை வெற்றி கண்டன. 

    மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு ‘வாட்’ என இவரது பெயரே சூட்டப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் பல துறைகளுக்கும் பரவின. துணி காயவைக்கும் இயந்திரம், நச்சுக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி, சிற்பங்கள் மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று இவரது கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் இவரே.

    ஒரு பலம் வாய்ந்த குதிரை ஒரு சராசரி வேலையைச் செய்வதற்கு எவ்வளவு சக்தியைப் பயன்படுத்துகிறதோ அதுதான் ஒரு குதிரை சக்தி. 

    550 பவுண்ட் எடையை ( ஏறத்தாழ 250 கிலோ) ஒரு நொடிக்குள் ஓர் அடி உயரத்திற்கு தூக்குவதற்கு தேவைப்படும் சக்தியை ஒரு குதிரை சக்தி அதாவது ஒரு  'Horsepower' என்று நிர்ணயித்தார் ஜேம்ஸ் வாட். இன்றளவும் எந்த இயந்திரத்தின் வலிமையும் குதிரை சக்தி அளவில்தான் கணக்கிடப்படுகிறது.

    வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய நோயாளியாகவே வாழ்ந்த இவர் மனிதகுலத்துக்கு வழங்கிய மகத்தான பங்களிப்புகள் ஏராளம்.இயற்கையான நீராவி சக்தியை மகத்தான சக்தியாக மனிதகுலத்துக்கு மடைமாற்றிய வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட் 83 வயதில் மறைந்தார்.

    வறுமையும், நோயும், அவரது தன்னம்பிக்கைக்கும், உழைப்புக்கும் தடைபோட முடியவில்லை. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வானத்தை வசப்படுத்த உதவிய காரணங்கள் இன்றைக்கும்கூட பொருந்தக்கூடியவைதான்.

     ஜேம்ஸ் வாட்டைப்போல தடைகளைக் கண்டு தயங்காமல் தன்னம்பிக்கையோடு உழைக்கும் எவருக்கும், எப்போதும், எந்த வானமும் வசப்படும்.

18 ஜனவரி, 2022

தைப்பூசம்

     வினைகளைக் கண்டு அஞ்சாதே.வேலுண்டு, வினையில்லை,மயிலுண்டு,பயமில்லை. குகனுண்டு, குறையில்லை என்று உணர்த்தும் தினம் - தைப்பூச தினம்.


    தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை, தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். 

    ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர்.  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

    தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீ பிழம்புகளை உருவாக்கினார். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின.

    அந்த 6 குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். கார்த்திகைப் பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர்க் கலைப் பயிற்சியளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைந்து ஒருவராக மாறினர். 

    6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் இணைந்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்    

    அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும்.

     அவ்வாறு அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

    முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

    பழனி முருகன் ஞானவேலைப் பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் தைப்பூச விழாவானது பழனி முருகன் கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நன்னாளை எதிர்நோக்கி முருக பக்தர்கள், துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது வழக்கம்.

    தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக் கடவுள்.

    எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.



        பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.

    தை நீராடுதல் பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில் கொண்டாடப்படுகிறது. நட்சத்திரங்களின் தலைவனாக புராணங்களில் சொல்லப்படும் பிரஹஸ்பதி என்னும் தேவ குருவை பூஜிப்பதாகக் கொள்வர். பிரஹஸ்பதி அறிவின் தெய்வமாகக் கருதப்படுபவர். எனவே தைப்பூசத்தன்று புனித நீர் நிலைகளில் நீராடி குருவை வழிபட கல்வி - கேள்வி - ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.


    குரு பகவானுக்கும் குருவாக கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த சிவபெருமானுக்கும், சிவனால் மனங்குளிர உபதேச மந்திரம் உபதேசித்த முருகப் பெருமானுக்கும் இப்பூசநாள் உகந்தது. இம்மாதிரி ஒரு தைப்பூச நாளில்தான் நடராஜப் பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாதருக்குத் தமது திருக்கூத்தை காட்டியருளினார்.

    மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, மொரீஷியஸ் முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

வள்ளலார் நினைவு நாள்

  “பசிப்பிணிதான் மனிதனுக்கு பெரும்பிணி, ஆதலால் பசியாற்ற உணவளிப்பதே உயர்ந்த அறம் என்று நாள்தோறும் அணையாத அடுப்பெரியச் செய்து காலமெல்லாம் அன்னதானம் அளிக்கும் அரும்பணியைத் தொடங்கிய அருட்பிரகாச வள்ளலார் ஒளியில் கலந்த தினம் இன்று.


     கடலூர் மாவட்டம் வடலூருக்கு அருகில் உள்ள மருதூரில் 05.10.1923 அன்று இராமையாப் பிள்ளை, சின்னம்மையார் ஆகியோரின் மகனாக இராமலிங்கம் எனும் திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவர் பிறந்த ஆறாவது மாதத்திலேயே இவரின் தந்தை மரணமடைந்த காரணத்தால், தாயார் மற்றும் அண்ணன் சபாபதி அவர்களின் வளர்ப்பில் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தார். 

    சிறுவயதிலேயே பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லாத வள்ளலார், கந்தகோட்டம் முருகன் கோவிலுக்கு தினமும் சென்று மனமுருக பாடல்களைப் பாடத்தொடங்கினார்.

 “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” 

    என்று தொடங்கும் பாடலை கந்த கோட்டத்தில் வள்ளலார் பாடுவதைக் கண்ட அவரது ஆசிரியர் , வள்ளலாரின் மெய்யாற்றலை உணர்ந்து மனமுருகினார், வள்ளலார், தான் கற்பிக்கும் கல்விக்கு அப்பாற்பட்டவர் என்று கூறினார். அதன்பின்னர் வள்ளலார் முழுவதுமாக இறைப்பணியில் தொண்டாற்றத் தொடங்கினார். 

    தனது ஒன்பதாவது வயதிலேயே அறிஞர்கள் நிறைந்த அவையில் அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் மிகச்சிறந்த ஆன்மீக உரையாற்றினார் வள்ளலார். அதன்பின்னர் நாடு முழுவதும் உள்ள பல கோவில்களுக்கும் சென்று இறைவனை வேண்டி வழிபட்டு பாடல்களைப் பாடினார்.

     உருவ வழிபாட்டை மறுத்து, உள்ளெழும் ஜோதி வழிபாட்டை பிரபலமாக்கி மக்களை அறிவு வழியே ஆற்றுப்படுத்திய ஞான வள்ளல் இவர். கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு என ஆன்மாவை மறைக்கும் ஏழு திரைகளின் வழியே அருள்பெரும் ஜோதியை வழிபடச் செய்த மெய்ஞ்ஞான குரு இவர். 

       'சாதி, சமயம், இனம், மொழி, நாடு என எந்தப் பாகுபாடும் நம்மில் கூடாது. எல்லா மக்களையும் சகோதர நோக்குடன் நேசிக்கவேண்டும், ஏனெனில் எல்லா உயிரிலும் இறைவனே வசிக்கிறார்' என்ற இவரின் உயரிய கருத்துக்கள்  மக்களைக் கவர்ந்தது. 


     பசிப்பிணி போக்குவதுதான் எல்லா அறங்களுக்கும் மேலானது என்று போதித்த வள்ளலார், 1867 ஆம் ஆண்டில் வடலூர் அருகே பார்வதிபுரம் என்னும் கிராமத்தில் மக்களிடம் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று சமரச சுத்த சன்மார்க்க தரும சாலையை நிறுவினார். 

    மக்களிடம் தானமாகப் பொருட்களை வாங்கி ஏழை, பணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்றுவேளையும் உணவு வழங்கத் தொடங்கினார். அந்த அன்னதானப் பணி இப்போதுவரையும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    1867 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி நிறுவப்பட்டு எரியத்தொடங்கிய 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்ட அடுப்பு 153 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரிந்து, மக்களின் பசிப்பிணியைப்போக்கி வருகிறது.

 “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உயிர்நேயம் வளர்த்த வள்ளலாரின் கொள்கைகள்

 *கடவுள்ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் 

*எதிலும் பொது நோக்கம் வேண்டும் எந்த உயிரையும்கொல்லக்கூடாது, புலால் உண்ணக்கூடாது 

*எல்லா உயிர்களும், நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது 

*பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு பாராது உணவளித்தல் வேண்டும் 

*சாதி, மத வேறுபாடுகள் கூடாது, மத வெறி கூடாது

* இறந்தவர்களை எரிக்கக் கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்

     வடலூரில் சத்திய தரும சாலைக்கு அருகில் 1871ஆம் ஆண்டு ஒளித்திருக்கோவிலை அமைக்கத்தொடங்கினார் வள்ளலார், அதன்பின்பு 1872 ஆம் ஆண்டு முதல் தைப்பூச நாளில் ஏழு திரைகள் விலகி இந்த கோவிலில் ஜோதி தரிசனம் நிகழ்ந்து வருகிறது. 

    1874 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் ஒளியாய் மாறினார் வள்ளலார். வள்ளலார் ஏற்றிய ஞான தீபம் இன்றும் உலகெங்கும் பல மக்களால் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. அவர் ஆற்றிய பசிப்பிணி நீக்கும் அற்புதப் பணியை இன்றும் பல மக்கள் சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள். 


    வள்ளலார் என்ற தூய ஆன்மா நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கொள்கைகளும் தூய பணிகளும் இன்றும் மக்களிடையே பரவி வருகின்றன. அதுவே அவரின் வாழ்வுக்கும் கிடைத்த வெற்றி எனலாம்.

17 ஜனவரி, 2022

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்

 


    இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர்.

    இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

    ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.

    பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு வெள்ளித்திரை மீதே இருந்தது.

    அந்தக் காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.

    இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண் வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.


    14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.


    அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.

    1936ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.

    அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை எம்ஜிஆர் இணைத்துக் கொண்டார். தேசிய அரசியலில் இருந்து திராவிட அரசியலுக்கு எம்ஜிஆர் வருவதற்கு உரமாக இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர்
மு. கருணாநிதி.

    எம்ஜிஆருக்கு, பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தியது. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதுபோல, இந்தியத் திரைப்பட வரலாற்றில், குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதை பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972 ஆம் ஆண்டில் ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.


    திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    1962 இல் தனது 50ஆவது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967 இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர்.1977இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, மிகப்பெரிய பலத்துடன் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.


    1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.


    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவர் நடத்திய 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கிடும் திட்டம், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை. 


    அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிவரையில் கலைஞர் கருணாநிதி உடனான உயர்ந்த, உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர். 

    பகுத்தறிவுக்குப் புறம்பான மந்திரக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். அதைப் பற்றி கேள்விகேட்ட போது, ’படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் சினிமாப் பார்க்கிறார்கள். அவர்கள் நான் படத்தில் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அவர்களிடம் மந்திரத்தில் மாங்காய் விழும் என்பது போல நான் நடித்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அல்லவா? நடிகன் என்ற முறையில் எனக்கு ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதைக் காக்க நினைக்கிறேன்’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர்!

    எம்.ஜி.ஆர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். மருதமலை முருகன் ஆலயத்திலும், மூகாம்பிகை ஆலயத்திலும் அவர் பாதம் பட்டிருக்கிறது. ஆனாலும், அவர் பக்திப்படங்களில் நடித்ததில்லை. இதைக் கேட்டபோது, ‘எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனைக் கோயில்களை வைத்து வளர்க்கமுடியாத பக்தியை, சினிமாப் படங்களா வளர்த்துவிடப்போகிறது? என்னைப் பொறுத்தவரை தாயிடம் அன்பு, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்தப் பண்புகளே மனதை தூய்மையாக்கும். மனத்தூய்மையே பக்தி…’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர். 


    எம்.ஜி,ஆரின் மொத்த வாழ்க்கையையே நாடோடி மன்னன் என்ற வார்த்தையில் அடக்கிவிடலாம். ஜூபிடர் பிக்சர்ஸூக்கு வந்து தரையில் படுத்துறங்கி திரையில் கதாநாயகனாகும் வரை அவர் நாடோடி. அப்புறம், திரைவானில் கொடிகட்டிப் பறந்து, அரசியலில் நுழைந்து சாதித்து கண்மூடியபோது, அவர் மன்னன்!




Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece