11 டிசம்பர், 2021
பன்னாட்டு மலை நாள்
பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.
https://www.fao.org/international-mountain-day/en/
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது
உலகின் பல்லுயிர்ப்பெருக்கத்திற்குப் பாதிக் காரணம் மலைகளே. புவி நிலப்பரப்பில் 27% மலைகளே நிரம்பியுள்ளன. உலக மக்கள்தொகையில் 15% மக்களுக்கு மலைகளே இருப்பிடமாய் அமைந்துள்ளது.உலக மக்கள்தொகையில் பாதிப்பேர் தங்களது அன்றாடக் குடிநீர்த்தேவைக்காக மலைகளையே நம்பியுள்ளனர்.
கடந்த 17 ஆண்டுகளில் மிக உயர்ந்த மலை உயரத்தில் உள்ள பகுதிகள் (3 500 மீட்டருக்கு மேல்) மக்கள்தொகை குறையும் போக்கை தொடர்ந்து அனுபவித்து வருகின்றன, மற்ற உயரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்தது. அனைத்து ஆப்பிரிக்கத் துணைப் பகுதிகளிலும், தென் அமெரிக்காவிலும், மத்திய மற்றும் மேற்கு ஆசியாவிலும், தாழ்வான பகுதிகளை விட மலைகளில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது.
வளரும் நாடுகளில், 648 மில்லியன் மக்கள் (மொத்த மலை மக்கள் தொகையில் 65 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் - 346 மில்லியன் - 2017 இல் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நமது தமிழ் இலக்கியங்களில், ஐவகை நிலங்களில் முதலிடம் வகிப்பது ,குறிஞ்சி ,என்னும் மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும்.வெற்பு, கிரி, அசலம், முதலான பல பெயர்களால் அழைக்கப்படும் மலைகளில் தான் ஆதிகுடிகள் வசித்தனர் என இலக்கியங்கள் கூறுகின்றன.
இத்தகு பெருமைகள் நிரம்பிய இயற்கை வளம் கொஞ்சும் மலைகளைக் காத்து, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வழிவகுப்போம்.
10 டிசம்பர், 2021
மூதறிஞர் இராஜாஜி பிறந்தநாள்
உத்தமர் காந்தியடிகளால் “எனது மனசாட்சியின் பாதுகாவலர்” என்றும், அரசியல் சாணக்கியர், ராஜதந்திரி என்றும் அழைக்கப்பட்டவர். பேரறிஞர் அண்ணா அவர்களால் மூதறிஞர் ராஜாஜி என்று பெருமிதத்தோடும், அழைக்கப்பட்டவர் இராஜகோபாலாச்சாரியார்.
சி.ராஜகோபாலாச்சாரி என்பது ராஜாஜியின் இயற்பெயர். விடுதலைப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். 1900ம் ஆண்டிலேயே, ஒரு வழக்குக்கு கட்டணமாக, 1000 ரூபாய் வாங்கிய வெற்றிகரமான வழக்கறிஞர். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பிறகு, விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடினார். 1930 இல் வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தி, சிறை சென்றார்.
1937 இல் அப்போதைய மதராஸ் மாகாண பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்று, மாகாணம் முழுவதும், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.
1947 - 1948 இல் மேற்கு வங்க ஆளுநராகவும், 1948 - 1950 வரை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.
எவ்வளவு பெரிய கருத்தையும் குட்டிக் குட்டிக் கதைகளாக விளக்குவதில் மூதறிஞர் ராஜாஜி மிகவும் வல்லமை பெற்றவர். மகாபாரதக் கதையை "வியாசர் விருந்து' என்ற பெயரிலும், இராமாயணக் கதையை "சக்கரவர்த்தித் திருமகன்' என்ற பெயரிலும் இனிய தமிழில் எழுதினார். "வியாசர் விருந்து' நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சாகித்ய அகாதெமி, அவருக்கு விருது தந்து சிறப்பித்தது. திருமூலர் தவமொழி, முதல் மூவர் கைவிளக்கு ஆகிய நூல்களும் அவரது ஆன்மிகச் சிந்தனையின் அரிய படைப்புகளாக முகிழ்ந்தன.
"எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்'- என்ற பெருமைக்குரிய திருக்குறளை, ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்து வழங்கினார். அதன் மூலம் அவரது ஆங்கிலப் புலமையையும், மொழிபெயர்ப்புத் திறனையும் அறிஞர்கள் உணர்ந்து போற்றினர். குறிப்பாக, ஜி.யு.போப் அந்நூலைப் படித்துப் பாராட்டியது, ராஜாஜியின் மொழியாக்கத் திறனுக்குக் கிடைத்த நற்சான்று. சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகளை எழுதுவதிலும் ராஜாஜி தமக்கென்று தனி பாணியைப் பின்பற்றினார்.
"குடி குடியைக் கெடுக்கும்' என்னும் கருத்தை மையமாக வைத்து அவரால் புனையப்பட்டதே "திக்கற்ற பார்வதி' எனும் படைப்பாகும். பின்னாளில் அது வெண் திரையில் காட்சிக் காவியமாகத் திரைப்படமாயிற்று.கல்வி அறிவும், கலை பயில் தெளிவும் கொண்ட ராஜாஜி அவ்வப்போது கட்டுரை ஓவியங்களும் தீட்டினார். கல்கி, இளம் இந்தியா, சுயராஜ்யா ஆகிய ஏடுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் பலரால் பாராட்டப்பட்டவை.
அவரது இலக்கிய ஈடுபாடு ஓர் எல்லைக்கு உட்பட்டதல்ல. பஜ கோவிந்தம், உபநிஷதப் பலகணி, வேதாந்த தீபம், ஆத்ம சிந்தனை, ஸோக்ரதர், துறவி லாதென்சு ஆகியவை ஒப்புவமை இல்லாதவை. சிசுபாலனம், அபேத வாதம், கண்ணன் காட்டிய வழி, அரேபியர் உபதேச மொழிகள், குடி கெடுக்கும் கள், தாவரங்களின் இல்லறம், தமிழில் வருமா? என இப்படி அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இலக்கிய வளர்ச்சிக்கு உரம் சேர்ப்பதாக அமைந்தன.
ஓர் எழுத்தாளர் எவ்வளவு நூல்கள் எழுதியிருந்தாலும் மன நிறைவைத் தந்த நூல் சிலவாகவே இருக்க முடியும். அந்த வகையில் இராமாயணத்தை "சக்கரவர்த்தித் திருமக'னாக அவர் எழுதிய அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்: "என்னுடைய அரசியல் பணிகளைக் காட்டிலும், இலக்கியப் பணியையே நான் விலைமதிக்க இயலாதது என்று கருதுகிறேன்.
இராமாயணம் எழுதும் பணி எனக்கு முடிந்துவிட்டது. நான் மகிழ்ச்சியான ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல் இருக்கிறேன். இராமன் அயோத்தியை விட்டுச் சென்றபோது, அவன் வருந்தவில்லை. ஆனால், சீதையை இழந்தபோதுதான் அவன் வருத்தம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டான். அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன்.
உயர்ந்த பதவியிலிருந்து விலக நேர்ந்தபொழுது நான் வருந்தவில்லை. அடுத்தாற்போல் என்ன செய்வது என்று திகைக்கவில்லை. ஆனால், அயோத்தி இராமனின் வரலாற்றை எழுதி முடித்த நிலையில் நான் ஒரு வெறுமையை, சூன்யத்தை உணர்கிறேன். ஆலயம் ஒன்றிலிருந்து ஆண்டவன் அகன்றுவிட்டதைப் போல் ஆகிவிட்டது என் மனம்!'' என்கிறார். இதன் மூலம் தொய்வின்றி எழுத வேண்டும் என்னும் அவரது ஆர்வம் வெளிப்பட்டது.
“சேலத்து மாம்பழம்” என்றும் ராஜாஜி என்று அன்புடன் அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சரியார் 1972-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி 94-ம் வயதில் காலமானார்.
மூதறிஞர் இராஜாஜி நல்லடக்கம் செய்யும்பொழுது உடல் இயலாத நிலையிலும், தந்தை பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்து, குலுங்கி குலுங்கி அழுததே, நட்பிலக்கணத்திற்கு நற்சாட்சியாகும்.
சர்வதேச மனித உரிமைகள் தினம்
இரண்டாம் உலகபோரில் உலகம் முழுவதும் படுகொலைகள், சொத்து இழப்பு, பேரழிவுகள் ஏற்பட்டன. அதற்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் 53 நாடுகள் அங்கம் பெற்றன.
முதல் பணியாக, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 30 பிரிவுகளின் கீழ், மனித உரிமைகளை அடையாளம் கண்டு, உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது.
மீண்டும் மனித உரிமை மீறல்கள் நடக்காமல் தடுக்க, உலக நாடுகள் இணைந்து 1948 ஆம் ஆண்டு, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்கின.இதை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்று கொண்ட டிசம்பர் 10 அன்றுஉலகம் முழுவதும் மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மனித உரிமைகள் என்றால் என்ன?
மனித உரிமைகள் என்றால் என்ன என்ற கேள்விக்கு பன்னாட்டு மனித உரிமைகள் சாசனத்தின் பதில் -
* சம உரிமையும், சுதந்திரமும்,ஒவ்வொருவரும் பிறக்கும் போதே, உடன் பிறக்கின்றன.
* யார் ஒருவரையும் இனம், நிறம், மொழி, மதம், பிறப்பால் பாகுபாடு செய்யக்கூடாது.
* யாரும், யாருக்கும் அடிமை இல்லை. யாரும் சித்ரவதைக்கு உட்படலாகாது.
* சட்டத்தின் முன் அனைவரும் சமம். நியாயமின்றி யாரையும் தடுத்து வைக்கக்கூடாது.
* நீதிமன்றத்தை அணுக, குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என கருதப்பட, அந்தரங்கங்களைப் பாதுகாக்க, சட்டத்திற்குட்பட்டு அனைத்து இடங்களுக்கும் செல்ல, சித்ரவதையிலிருந்து தப்பிக்க, புகலிடம் கேட்க, தேசிய அடையாளம் கேட்க, குடும்பம் நடத்த, சிந்தனை, சமய, கருத்து, மக்களாட்சி சேர்ந்திருக்க சமூக பாதுகாப்பு, விளையாட, ஓய்வெடுக்க, கல்விக்கு, உணவிற்குள்ள உரிமைகள் மனித உரிமைகளாகும்.
இந்தியாவில் மனித உரிமைப்பாதுகாப்பு
இந்திய அரசு 1993 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தில், மனித உரிமைகள் என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அல்லது நீதிமன்றத்தால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கை உள்ளிட்ட, வாழ்வுரிமை, தனி மனித மாண்பு, சமத்துவம் தொடர்பான உரிமைகளாகும் என குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களைத் தடுக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் பட்டன.
எவ்வாறு புகாரளிப்பது?
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அதைப் பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவரோ அல்லது பிறரோ ஆணையருக்குப் புகாரளிக்கலாம்.
மனித உரிமை மீறல், யாரால், எப்போது, யாருக்கு எதிராக எவ்வாறு நடந்தது என்றும், அதற்கு என்ன தீர்வு வேண்டும் என்றும் குறிப்பிட்டு, புகாரை நிரூப்பிப்பதற்கான ஆதாரங்களைக் குறிப்பிட்டு, வேறு நீதிமன்றத்தில் புகார் இருந்தால் அதையும் குறிப்பிட்டு அனுப்பலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மனித உரிமை நீதிமன்றமாகச் செயல்படுகிறது. மனித உரிமைகள் மீறலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர விரும்பினால், முதலில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவு செய்ய வேண்டும். புகாரைப் பரிசீலனை செய்து, சாட்சிகளை விசாரணை செய்து மனித உரிமை மீறல் நடந்தது என்று கருதினால் மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பப்படும்.
மனித உரிமை நீதிமன்றத்தின் விசாரணைகளில், இரு தரப்பினரும் நேரடியாக ஆஜராக வேண்டும். வர முடியாத நாள்களில் காரணத்தை விளக்கி அனுமதி பெற வேண்டும். தகுந்த காரணமின்றி ஆஜராகாத அரசு அலுவலர், பிடிகட்டளை மூலம் கைது செய்யப்பட்டு, ஆஜர்படுத்த மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம்.
நம்மைச் சுற்றி நடக்கும், மனித உரிமை மீறல்களைத் தடுத்து, மக்களைப் பாதுகாக்க உரிய சட்டங்களும், பாதுகாப்பு நடைமுறைகளும் நம்மிடம் உள்ளன. அவற்றை முறையாக, அதிகமானோர் பயன்படுத்தினால்தான் நன்மைகள் கிடைக்கும். மக்களின் மனித உரிமைகள் அனைவராலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
9 டிசம்பர், 2021
சர்ஜிகல் ஸ்ட்ரைக் மாஸ்டர்- பிபின் ராவத்
“அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் ராணுவம்தான் எல்லை தாண்டிச் சென்று சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என்றிருந்த நிலையை மாற்றி, இந்திய ராணுவத்துக்கும் அப்படி ஒரு முகம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் பிபின் ராவத்”
தற்போதைய உத்ததரகாண்ட் மாநிலத்தின் பௌரியில் 1958 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இந்து ரஜபுத்திர வம்சத்தில் பிறந்தவர் பிபின் ராவத். அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்திய ராணுவத்தில் பல தலைமுறைகளாக பணியாற்றியுள்ளனர். பிபின் ராவத் தந்தை லெட்சுமண் சிங் ராவத், இந்திய ராணுவத்தில் போர்க்குணத்துக்குப் பெயர் பெற்ற கூர்க்கா ரெஜிமென்டில் லெப்டினன்ட் ஜெனரலாகப் பணிபுரிந்தவர் . அவரைப் போலவே அந்த கூர்க்காப் படையில் போர்க்கலை பயின்றார் மகன்.
பிபின் ராவத் டேராடூன் மற்றும் சிம்லாவில் பள்ளிப் படிப்பை படித்தார். அப்போதே கடக்வாஸலா தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கான கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவின் ஃபோர்ட் லீவன்வொர்ட் நகரில் உள்ள ராணுவ கல்லூரியில் உயர் படிப்பை படித்தார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பில்., மேலாண்மை மற்றும் கணினிஅறிவியலில் பட்டயப்படிப்பையும் முடித்துள்ளார்.
இருப்பதிலேயே சீனியர் ஆபீஸரைத்தான் இந்திய ராணுவத்துக்குத் தலைமைத் தளபதியாக நியமிப்பது மரபு. இதனால், போர்க்கள அனுபவம் இல்லாதவர்கள்கூட தலைமைத் தளபதி ஆகியிருக்கிறார்கள். காலம் காலமாக இருந்த இந்த மரபை மாற்றி, சீனியர்கள் இருவரைப் புறக்கணித்துவிட்டு மூன்றாவது இடத்தில் இருந்த பிபின் ராவத்தை கடந்த 2017 ஜனவரியில் ராணுவத் தளபதி ஆக்கினார் பிரதமர்.
காரணம், சியாச்சின் எல்லையின் நிலவரமும் அவருக்குத் தெரியும். காஷ்மீரில் எங்கெங்கு தீவிரவாதிகள் ஊடுருவல் நிகழ்த்துவார்கள் என்பதையும் அவர் அறிவார். வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களின் ஜாதகமும் அவருக்கு அத்துபடி.அதி உயரத்தில் நிகழும் போர்முறைகளில் அதிக அனுபவம் கொண்டவர். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார்.
மத்திய அரசு இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தலைமை தளபதி என்றொரு புதிய பதவியை உருவாக்கியது. அந்த பதவிக்கு பிபின் ராவத்தை தேர்வு செய்தது. அதன்படி 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை குடியரசுத் தலைவர் நியமித்தார். அதனையடுத்து 2020 ஜனவரி ஒன்றாம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றார். இதன் மூலம் அந்த பதவியை அலங்கரித்த முதலாவது ராணுவ ஜெனரல் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
ராணுவ உடையில் இல்லாதபோது பிபின் ராவத் ஓர் அமைதியான ஜென்டில்மேன். சீருடை போட்டுவிட்டால் அவர் டெர்ரர். இளம் அதிகாரியாக இருந்தபோதே அப்படித்தான். 1987ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச எல்லையில் சும்தோராங் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, சிறிய படையை வைத்துக்கொண்டு அவர்களை எதிர்த்தார் பிபின் ராவத். 1962 சீனப் போருக்குப் பிறகு சீனாவுடன் நிகழ்ந்த மிகப்பெரிய மோதலாக அப்போது அது கருதப்பட்டது. 'யார் இந்த ராவத்?' என்று அப்போதே கேட்க வைத்தார்.
சர்வதேச அளவில் இந்திய ராணுவத்துக்குக் கௌரவம் தந்த ஒரு விஷயம், ஐ.நா அமைதி காக்கும் படையில் பங்கெடுத்து காங்கோ நாட்டில் அமைதியை நிலைநாட்டியது. அந்த மிஷனுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றவர் ராவத். அதுவரை ஐ.நா அமைதி காக்கும் படைக்கு காங்கோ மக்கள் மத்தியில் மரியாதை இல்லை. இவர்களின் வாகனங்களைப் பார்த்தால் கல் எறிந்து தாக்குவார்கள்.
பிபின் ராவத் அங்கே போனதும் சூழலையே மாற்றினார். 'அமைதி காக்கும் படை என்பது வேடிக்கை பார்க்கத் தேவையில்லை, நம்மிடம் பிறகு ஆயுதங்கள் எதற்கு?' என்ற கேள்வியுடன் களத்தில் இறங்கினார். மக்களைத் தாக்கவோ, தங்கள் படைக்கு ஆள் சேர்க்கவோ கிளர்ச்சியாளர்கள் வந்தபோது அவர்களை ஐ.நா படை விரட்டியது. கிளர்ச்சியாளர்கள் மீது விமானத் தாக்குதலையும் (MONUSCO) நடத்தினார் ராவத். அதன்பின் காங்கோ மக்கள் ஐ.நா படையை மரியாதையாகப் பார்த்தனர். விரைவில் அங்கு அமைதி திரும்பியது. அதற்காக இரண்டு முறை ஃபோர்ஸ் கமாண்டர் கமெண்டேஷன் விருது பெற்றார்
இந்திய ராணுவத்தில் முப்படைத் தளபதி என்று ஒரு பதவி இதுவரை கிடையாது. ராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி. விமானப்படைத் தளபதி ஆகிய மூவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள்.அந்த வரலாற்றை மாற்றி, இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக 2020 ஜனவரி முதல் தேதி நியமிக்கப்பட்டவர் பிபின் ராவத். எல்லா படையினரும் வித்தியாசங்களைக் கடந்து மதிக்கும் ஒரு வீரராக இருந்தார் என்பதே பிபின் ராவத்தின் பெருமை!
ஜெனரல் பிபின் ராவத் தனது பணிக்காலத்தில் பரம் விசிஷ்ட் சேவா விருது, உத்தம் யுத் சேவா விருது, அதி விஷிஷ்ட் சேவா விருது, விசிஷ்ட் சேவா விருது, யுத் சேவா விருது, சேனா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இத்தகு பெருமைவாய்ந்த ஒரு மாமனிதரை நம் நாடு இழந்துள்ளது. அன்னாருக்கு நம் வீர வணக்கங்களைச் சமர்ப்பிப்போம் 😭
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
ஒவ்வோராண்டும் டிசம்பர் 9ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
எந்த ஒரு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களையும் ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், பொருளாதாரச் சமநிலைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை நம்மால் காண முடிகிறது.
எனவே சர்வதேச அளவில் ஊழலைத் தடுக்க, ஐ.நா., அமைப்பு, 2003 அக்டோபர் 31 இல், ஊழலுக்கு எதிரான போரைத் தீவிரமாக நடத்தி, அதை உலக நாடுகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் 'Transparency International' என்ற நிறுவனம், 2014 இல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 175 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில் ஊழல் தரவரிசையில் இந்தியா 86 ஆம் இடத்தில் உள்ளது என்பது நாம் அனைவரும் கருத்தில் கொள்ளத்தக்கது.
நமது வேலையை உடனே முடித்துக்கொள்வதற்காக, அதைச் செய்யும் நபருக்கு, ஒரு தொகையை லஞ்சமாகவோ அல்லது 'அன்பளிப்பு' என்ற பெயரிலோ கொடுத்து, காரியங்களை முடித்துக்கொள்வதில் தவறில்லை என்ற மனநிலைக்குப் பொதுமக்கள் மாறிவிட்டனர்.
இத்தகைய மனப்போக்கானது, தங்களது கடமையைச் செய்வதற்கு பெறப்படும் லஞ்சத்தை, பொதுமக்கள் அங்கீகரித்து விட்டனர் என்ற உணர்வை லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பவராகவோ அல்லது லஞ்சம் பெறுபவராகவோ இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை. விதிமுறைகளுக்குட்பட்ட காரியங்களை செய்து கொடுக்க, லஞ்சம் கொடுப்பவர்களுக்கு உடனடியாக செய்து கொடுப்பதும், கொடுக்காதவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இழுத்தடிப்பதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.
இன்றைய சூழலில், ஒரு நியாயமான, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்ட காரியத்தைச் செய்து கொள்வதற்கு லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை ஒருவர் மேற்கொண்டால், அவர் சமுதாயத்தில் சந்திக்க வேண்டிய இடையூறுகளும், அதன் விளைவாக ஏற்படும் மனவேதனையும் அளவிட முடியாதது.
தனது பணியில், லஞ்சம் வாங்கமாட்டேன் என்று கடமையாற்றும் ப்ல அரசு அலுவலர்களும் உள்ளனர். அவர்களது நேர்மையாகச் செயல்பாட்டால், உடன் பணியாற்றும் ஊழியர்கள், உயர் அதிகாரிகளின் விரோதம், அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதுபோன்ற அலுவலர்களின் வாழ்க்கை நிலையை, அரசுப் பணியேற்கும் இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக காட்டப்படும் சூழலும் இன்று நிலவி வருவதைக் காணமுடிகிறது.நேர்மையான செயல்பாடு என்பது அரசுப் பணியில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறையாகும்.
லஞ்சம் கேட்பவரிடம், 'லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும் ?' எனக் கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாநில லஞ்சஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வுத் துறைக்குரியது என எண்ணி, தங்களது பங்களிப்பைப் புறக்கணிக்கக்கூடாது.
ஆசிரியர்களின் பொறுப்பு:
ஊழலுக்கு எதிரான உணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பில் பெரும்பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்களே.
தேர்வுக்குரிய பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்காமல், ஊழலின் கறைபடியாமல் களங்கமற்ற மனிதர்களாக வாழ்வில் திகழும் வழிமுறைகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். ஊழலுக்கு அடிப்பணியாமல் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்தவும் மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும்.
“ஊழல் எதிர்ப்புணர்வை வளர்ப்பதில் வெளியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தமக்குத்தாமே விதித்துக்கொண்டவையாக இருப்பின், அது நிச்சயமாக நல்ல பலனை தருகின்றன” என்ற காந்திஜியின் வாக்கு, இன்றைய எதார்த்த நிலையை உணர்த்துகிறது
8 டிசம்பர், 2021
SAARC அமைப்பு தினம்
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்றழைக்கப்படும் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று.
SAARC (South Asian Association for Regional Cooperation) இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய, ஏழு நாடுகள் இணைந்து, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்ற, 'சார்க்' அமைப்பை, 1985 டிசம்பர் 8இல் துவக்கின.1983 இல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது.
சார்க் அமைப்பானது தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , ஒத்துழைப்பு , வர்த்தகம் , முதலீடுகள், சமூக வளர்ச்சி , நட்புறவுடன் கூடிய தலையீட்டின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்பனவற்றினைக் குறிக்கோளாகக் கொண்டு, கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும்.
தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950 இல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954 இல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.
1970 களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை, அந்த நாடுகள் முன்வைத்தன. 1981 இல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள்.
தொடக்கத்தில் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின. தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இந்தியாவுக்குச் சந்தேகம் இருந்தது.
அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம், தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
சீனா, ஈரான் நாடுகள், இந்த அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட, ஒன்பது நாடுகள், 'சார்க்' அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன.
துவக்கத்தில், ஆண்டுதோறும் நடந்த, 'சார்க்' கூட்டம், அதன் பின், இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது.
Featured post
Reading maketh a human
https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece
-
சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம். "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே...
-
1. சைவ சமயக் குரவர் ------------------- 2. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ------------------- 3. ‘ அழுது அ...
-
விநாடி - வினா 1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை 2. நவீனக் கணினியின் தந்தை யார்? சார்லஸ்...