24 நவம்பர், 2021

கோவை தினம் - நவம்பர் 24

      

      


    1804 ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் உருவானதுதான் கோவை மாவட்டம். இந்தக் காலகட்டத்தை வைத்துத்தான் கோவை தினமாகக் கோவை மக்களால் கொண்டாடப்படுகிறது. 

    கோயம்புத்தூரின் பூர்வகுடிகள் இருளர்கள். இவர்களின் தலைவன் கோவன் என்பவன் இந்த அடர்ந்த காட்டுப்பகுதியை பரிபாலனம் செய்து வந்தான். அவன் கும்பிட்டு வந்த தெய்வம் கோனியம்மன். கோவனின் வழி வந்த கோசர் குலத்தவர்கள் சங்க காலத்தில் இங்கே ஆட்சி புரிந்ததால் கோவன், கோனியம்மன், கோசர் பெயராலேயே கோவன்புத்தூர், கோசர்புத்தூர், கோயம்புத்தூராகி, கோவையாகி மருவியது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று.   

   இன்றைக்கும் இவனுக்காக, அவனுக்காக, அவளுக்காக, இவளுக்காக, இவருக்காக, அவருக்காக என்பதை அவனுக்கோசரம், இவனுக்கோசரம், இவளுக்கோசரம், அவளுக்கோசரம், இவருக்கோசரம், அவருக்கோசரம் என கொங்கு மொழியில் சொற்கள் உருளுவதைக் காணலாம். 

   அநேகமாக கோசரம் என்ற சொல், இப்படி கோவை மண்ணில் விடாப்பிடியாக உருண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

 கொங்கு நாடு என எப்படி பெயர் வந்தது? 

       மலைகளும், மலைசார்ந்த பகுதிகளான கோவையில் சோலைகளும், தேனடைகளும் அதிகம். அதைச் சுவைத்துப் பருகிய ஆதிகுடிகள் மத்தியில் சேரர் மரபைச் சேர்ந்த கொங்கன் என்ற அரசன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அதனால் இது கொங்குநாடு என்றும் பெயர் பெற்றதாக பேரூர்ப் புராணம் குறிப்பிடுகிறது. 

     இதில் ஆதி முதலான நகராகப் பேரூர் சொல்லப்படுகிறது. பேரூர் புறநகரில் பொய்கைகளும், அதில் தாமரை மலர்களும், அவற்றில் அன்னப்பறவைகளும், மயில், கிளி, நாகண வாய்ப்பறவை, சக்கரவாகப்பறவை என காட்சிப்படுத்தப் படுகின்றன. வன்னி, வில்வம், கொன்றை, பாதிரி முதலிய மரங்களும் சாதி முல்லை, மல்லி முதலிய கொடிகளும் படர்ந்து நிற்கின்றன. 

      இதில் இடைநகர், உள்நகர், பரத்தையர் வீதி, கடை வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி என வகைப்படுத்தப் பட்டு, நட்ட நடுவே பட்டிப்பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோயில் இருக்கிறது. 

      கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் ஒன்று ஆறை நாடு. இன்றைக்கும் கோவைக்கு மேற்கே ஆனைகட்டி மலைப்பகுதிகளில் ஆறைநாட்டுக்காடு என ஒரு பழங்குடி கிராமம் பெயர் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த ஆறைநாட்டுக்காடு மேற்கில் வெள்ளிமலை தொடங்கி கிழக்கில் அவிநாசி வரை நீள்கிறது. இதில் கிழக்குப் பாகத்தை வடபரிசார நாடு என்றும் மேற்குப் பாகத்தை பேரூர் நாடு என்றும் பெயர் வழங்கியிருக்கிறார்கள். 



     கி.மு. 44 முதல் கி.பி. 54 வரை உரோமபுரி நாட்டுடன் பேரூர் நாட்டிற்கு, வாணிகத்தொடர்பு இருந்தது. அக்கால ரோமானியக் காசுகள் பேரூர் நொய்யல் கரைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 3 முதல் 7-ம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழகம் முழுக்க ஆண்டுள்ளனர். கி.பி. 650-ல் அப்பர் சுவாமிகள் பேரூருக்கு வந்து சென்றுள்ளார் என பேரூர் புராணம் குறிப்பிடுகிறது. கி.பி. 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் சேரர்களும், பாண்டியர்களும், அதன் பின் கங்கர்களும் பேரூர் நாட்டை ஆண்டுள்ளனர். கங்கர்கள் ஆட்சியில் சுந்தரர் கி.பி. 850 இல் பேரூர் வந்துள்ளார். கி.பி. 9 முதல் 12 வரை பேரூர் நாடு சோழர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பேரூர் திருக்கோயிலின் அரத்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை சோழர்களால் கட்டப்பட்டன. 

      அதன் பின்னர் கொங்குச் சோழர்களும், கொங்குப் பாண்டியர்களும். ஹொய்சாளர்களுமே, மாறி மாறி இதனை ஆண்டனர். கி.பி. 1295 இல் அல்லாவுதீன் என்ற அரசன் தென்னாட்டு அரசர்களைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றியதில் பழைய அரசியல் முறைகள் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டது. பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது.

   விஜயநகர அரசர்கள் ஆட்சியின் போது அருணகிரிநாதர் கி.பி. 1450-ல் பேரூர் வந்துள்ளார். 

   1565 இல் விஜயநகர அரசு முடிவுக்கு வந்தது. 1600 இல் கொங்குநாடு மைசூர் வசம் சென்றது. சில ஆண்டுகளில் நாயக்கர்கள் இதை வசப்படுத்தினர். இந்தக் காலத்தில் வீரசைவர் ஆச்சார்ய சாந்தலிங்கர் என்பவர் இங்கே வந்து திருமடம் அமைத்து மாணவர்களுக்கு பாடம், சாஸ்திர நூல்கள் கற்றுத் தந்திருக்கிறார். 

     கி.பி. 1672இல் மீண்டும் பேரூர் நாடு மைசூர் வசம் சென்றது. 1873 வரை சர்வமான்யமாக இருந்த பேரூரை, திப்பு சுல்தான் ஜப்தி செய்து, அதில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மட்டும் கோயிலுக்குக் கொடுத்து வந்திருக்கிறார். 1790-91ல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கைப்பற்றி இதன் முழு வருவாயை கோயிலுக்கே கொடுத்துள்ளனர். 

     1799-ல் ஆங்கிலேயர் பேரூர் கிராமம் முழுவதும் கைப்பற்றி கோயிலுக்கு பட்டாச் செய்து கொடுத்து விட்டனர். 1847-ல் இந்த கிராமம் தர்மகர்த்தாக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பேரூர் 1607.50 ஏக்கர், மாவுத்தம்பதி 3005.77 ஏக்கர் என இரண்டு கிராமங்கள், ஒரு வாய்க்கால், இரண்டு குளங்கள், இன்னொரு குளத்தில் பாதி என இதன் பரப்பளவு நீண்டது. 

பேரூர்,பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நகரமாக திகழ்ந்துள்ளது.



      தற்போதைய தெக்கலூர் அருகே நடந்த அகழாய்வில் வண்ணத்தாங்கரை என்ற இடத்தில் கால்நடைகளின் செமி ஃபாசில்கள் கிடைத்துள்ளன. அவை மேற்கே உள்ள குருடிமலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாளமடல் ஓடை, தன்னாசிப் பள்ளத்தில் கரைபுரண்ட காட்டாற்றில் அடித்துவரப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என்கிறார்கள். அப்போதே அங்கு கால்நடைகளை வளர்த்த நாகரிக மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. 

    சோழ நாட்டையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் ராஜகேசரிப் பெருவழி, பாலக்காட்டுக் கணவாய்க்கு அருகில் செல்கிறது. கி.மு 4ஆம் நூற்றாண்டிலேயே ரோமானிய கிரேக்க நாடுகளுடன் சோழநாடு வணிகத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு ஆதாரமாக இப்பெருவழியையொட்டி ஓடும் நொய்யலில் பல இடங்களில் அகழாய்வின்போது ரோமானியக் காசுகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன. இதில் பழைமையான நகரங்களாக திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடுமணல், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர், பேரூர் இருந்துள்ளது. 

     கி.பி. 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை 32 அணைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் கட்டி நீர்ப் பரிபாலனம் செய்துள்ளனர், அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட சோழர்கள். இதனால், ஆண்டு முழுக்க செழிப்பான பகுதியாக இருந்தது கோவை. 1804 இல் பிரிட்டீஷார் கோவை மாவட்டத்தை உருவாக்கியபோது, கேரளத்தின் பாலக்காடு தொடங்கி, கர்நாடகாவின் கொள்ளேகால் வரையிலும் கோயமுத்தூரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது. அதிலிருந்து 1868 இல் நீலகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

    கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு, உடுமலைப்பேட்டை ஆகியவை கோயமுத்தூர் மாவட்டத்தின் தாலுகாக்களாக இருந்தன. 

    1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிறந்தபோது, பாலக்காடு கேரளத்துடனும், கொள்ளேகால் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன. மாவட்டப் பிரிவினையின்போது, கரூர் தாலுகா திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பின்னர், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உதயமானது. 

    இதேபோல், பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979 இல் உருவான ஈரோடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009 இல் திருப்பூர், உடுமலை பகுதிகளைப் பிரித்து, திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.  

   கோயில் சார்ந்த, கிராமம் சார்ந்த, விளைச்சல் சார்ந்த மக்கள் வாழ்க்கை இக் காலகட்டத்தில் தொய்வு பெற்று, அதைத்தாண்டி கிழபுறமுள்ள பிரதேசம் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், பவுண்டரிஸ், இண்டஸ்ட்ரீஸ், இயந்திரப் பணிமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என பெருக தற்போதுள்ள கோவை நகரமும், கோவை மாவட்ட கிராமங்களும் வளம்பெற்றன. 


       பேரூர் என்ற ஆதி கோவை நகரம் இதில் ஒரு சிறு கிராமமாக மாறி நிற்கிறது.இத்தகு  பெருமைகள் கொண்ட கோவையில் பிறந்து வாழ்வதைப் பெருமையாகக் கொள்வோம்.

23 நவம்பர், 2021

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்



 

 “கவிதை எழுதுவது எளிய செயலில்லை. அதற்கு ஆழ்ந்த படிப்பும் கடின உழைப்பும் வேண்டும். கவிதை எழுதுவதற்குப் பதிலாக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.” - சுரதா 


       இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை பாரதியாரால் மறுமலர்ச்சி பெற்றது. பாரதியார்பால் கொண்ட பற்றின் காரணமாகவே புதுவைக்காரரான சுப்புரத்தினம் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். 

    தாசன் என்பதற்கு அடியவர், தொண்டர் என்று பொருள். தாசன் என்று முடியுமாறு புனைப்பெயர் வைத்துக்கொள்வது அன்றைய போக்காக இருந்தது. அதனால்தான் முத்தையா என்பவர் கண்ணதாசன் ஆனார். கம்பதாசன், வாணிதாசன் என மேலும் சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

    செய்யுள் மரபு மாறாமல் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர் சுரதா (இராசகோபாலன்). இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 

    “ஓடப்பராய் இருக்கும், ஏழையப்பர்,உதையப்பராகி விட்டால் ஓர்நொடிக்குள், ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” 

என்பவை பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகள். 

நாகப்பட்டினத்தை அடுத்த பழையனூரில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாளில் பிறந்த இராசகோபாலன் அவ்வரிகளைக் கேட்கிறார். அந்நொடியில் இளைஞர் இராசகோபாலன் அதனை இயற்றிய பாரதிதாசன்மேல் பற்றுக்கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ ஆனார். 

 பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா.

அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார். தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

கவிஞர் திருலோக சீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. 1944ம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார் 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். 

 கப்பல் கவியரங்கம், படகுக் கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம் என்று பலவாறு முயன்றவர். 'கவிஞர் காலண்டர்' ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்கூட இருந்தார்.   

சுரதா எழுதிய திரைப்பாடல்கள் எண்ணிக்கையில் முப்பது. எம்ஜிஆரின் 'என் 'தங்கை திரைப்படத்திற்கு எழுதிய 

 “ஆடும் ஊஞ்சலைப் போலவே அலை ஆடுதே” என்பதுதான் சுரதாவின் முதற்பாட்டு. முதல் பாடலின் முதல்வரியே உவமைதான். 

“அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு, ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே, 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா, கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே” 

போன்ற பாடல்கள் சுரதாவினுடையவை. 

 “கவிதை என்பது வரப்பிரசாதமில்லை. கற்றுக்கொண்டு உழைத்தால் வருவது” என்பதில் உறுதியான கருத்துடையவர்.

 தம்மை ’மொழிப்பற்றாளர்’ என்று கூறுவதையும் அவர் ஏற்கவில்லை. “இது மொழிப்பொறுப்பு. பற்று வைத்தல் இன்னொன்றைச் சிறப்பாகக் கண்டவுடன் மாறிவிடக்கூடியது” என்றார். 

எதனைப் பற்றியும் அஞ்சாமல் தடாலடிக் கருத்துகளைக் கூறுபவர் சுரதா. அவற்றில் உண்மையும் இருந்ததால் மறுப்பதும் கடினம்.

“புதுக்கவிதைக்கு வடிவம் இல்லையே, வடிவம் இல்லாதது எப்படி நிலைக்கும்?” என்றார். “மரபு வடிவம் இல்லாமல் இருப்பதால் இப்போதைக்குப் புதிதாகத் தெரிகிறது” என்பது அவரது கணிப்பு.

அது உண்மையும்கூட. தற்போது தம் புதுமையை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்ற இக்கட்டில் புதுக்கவிதையுலகம் இருக்கிறது. மரபுக்கவிதை என்பது தமிழின் தோற்ற வடிவம். அதன் வடிவம் மாறாமல் காப்போம்.

22 நவம்பர், 2021

உலக தொலைக்காட்சி தினம்

     


     1996ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் பரிந்துரையின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ஆம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. 
ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 17, 1996 இல் நடந்த 99ஆவது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தின்படி இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

     முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது.தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைக்கூறுவதும், தொலைக்காட்சியினூடாக, உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு,சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதும்,மற்றும் தங்களது கலை, கலாச்சார, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்வதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருள்களாகக் கொள்ளப்படுகின்றன. 

     இத்தினத்தில் தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு பற்றி சற்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். 1926ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியலறிஞர்தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஆனால் தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

     'பில்லோ பான்ஸ்வர்த்' என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் 'விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின்" என்பவர் கண்டுபிடித்தார். இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் அறிமுகம் செய்தவர் என்பதனால் 'ஜான் லூகி ஃபெர்டு" 'தொலைக்காட்சிக் கண்டுபிடித்தவர்" என்று இனங்காட்டப்படுகின்றார்.

      தொலைக்காட்சி மிகச் சிறந்த ஊடகம். அதன் மூலம் மக்களுக்கு அரிய பல செய்திகளைக் குறித்த நேரத்தில் கொண்டுசேர்க்க இயலும்.ஒருதலைப்பட்சமின்றி நடுநிலையான செய்திகளைத் தருவதன் மூலமே மக்கள் மனங்களில் தொலைக்காட்சி ஊடகம் இடம்பெற இயலும்.

20 நவம்பர், 2021

சர்வதேசக் குழந்தைகள் தினம் - நவம்பர் 20

       


      ஐ.நா-வின் யுனிசெஃப் ( UNICEF) எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20 ஐ, உலகக் குழந்தைகள் தினம் என அறிவித்துள்ளது. 

குழந்தைகள் நலனுக்காக, கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. 

     உலக மக்களிடையே, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டப்பூர்வமாகத் தரப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து GoBlue என்ற பிரசாரத்தை நடத்தப்பட்டுவருகிறது. நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு.

     இதைத் தாண்டி உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்யேகமாகக் கொண்டாடப் படுகின்றது. 

     ஐக்கிய நாடுகள் அவை, இனம், நிறம், பால், மொழி, மதம், கருத்து, செல்வம், திறன் ஆகியவற்றைக் கடந்து  18 வயதிற்கு உட்பட்டோர்க்கு குறைந்த பட்சம் உரிமைகள் மற்றும் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும் என்று வரையறுக்கின்றது.


குழந்தைகளின் உரிமைகள்

               ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமே  “குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள் அளிக்கப்படல் வேண்டும் “ என்பது தான். மேலும், குழந்தைகளின் உரிமைகள் நான்கு பரந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரிவுகளும் சமூக, பொருளாதார, கலாச்சார , குடிமை உரிமைகளை அளிக்கக்கூடியதாகும். அந்த உரிமைகள் என்னென்ன ?

1.வாழும்உரிமை

               வாழும் உரிமையானது குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும் பொழுதே துவங்கி விடுகின்றது.  நம்  இந்திய  அரசாங்கத்தின்  கொள்கையின் படி குழந்தையின் வாழ்க்கையானது தாயின் கருவில் 20 வாரங்களிலேயே துவங்கி விடுகின்றது. வாழும் உரிமையில் குழந்தையின் பிறக்கும் உரிமை, குறைந்தபட்ச தர அளவிலான உணவு, உறைவிடம், உடை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியனவும் அடங்கி விடுகின்றன.

2.பாதுகாக்கப்படும்உரிமை

               பாதுகாக்கப்படும் உரிமையானது குழந்தைகள் புறக்கணிக்கப்படுதலிலிருந்து காத்தல் , வீடு மற்றும் பிற இடங்களில் சுரண்டல் மற்றும் தவறாக நடத்தப்படுதலிலிருந்து காத்தல் ஆகியன ஆகும். ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேசக் குழந்தைகள் நிதியமான யுனிசெஃபும் இதனையே  வலியுறுத்துகின்றது.

3.பங்கேற்கும்உரிமை

               குழந்தைகளின் பங்கேற்கும் உரிமையானது, குழந்தைகள் சார்ந்து முடிவெடுக்கும் விஷயங்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகள் பங்கேற்கும் உரிமையினைப் பெற்றுள்ளமை ஆகும். மேலும், வயதிற்கேற்றாற் போலவும் முதிர்ச்சிக்கேற்றாற் போலவும் பங்கேற்கும் நிலையானது வேறுபடுகின்றது.

4.முன்னேற்ற உரிமை

               குழந்தைகள் அனைத்து விதமான முன்னேற்ற உரிமைகளைக் கொண்டுள்ளார்கள். அவை குறிப்பாக உணர்வு, உடல் மற்றும் மன ரீதியான முன்னேற்ற உரிமைகளை உள்ளடக்கியது. உணர்வுசார் முன்னேற்ற உரிமையானது முறையான வளர்ப்பு மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. மன ரீதியான முன்னேற்ற உரிமையானது கல்வி மற்றும் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியது.  அனைத்து உரிமைகளையும் குழந்தைகளுக்கு அளித்திடல் வேண்டும்.


 குழந்தைகளின் உரிமைகளை,அவர்களுக்கு முழுமையாக அளிப்போம். அவர்கள், உரிய முறையில் வளர்வதை உறுதி செய்வோம்.

19 நவம்பர், 2021

சர்வதேச ஆண்கள் தினம் - நவம்பர் 19

 

       உலக ஆண்கள் தினம் (International Men's Day),ஆண்களைப் பெருமைப் படுத்தும் வகையிலும் அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

       1999 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளிலுள்ள ட்ரினிடாட் & டொபாகோவில் இது தொடங்கப்பட்டது. ஐக்கியநாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட நாளாகவும் இதுவிளங்குகிறது.  இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஹங்கேரி போன்றவற்றை உள்ளடக்கிய உலகின் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

   ஆண்கள் -  பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டும். வீரம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கு அதிகம். 

      மேலும் அலுவலகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதைவிட அதிகம் என எண்ணும் போது அவர்களுடைய மனம் மற்றும் உடல் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. 

     அலுவலகம், குடும்பம் என பல்வேறு இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் . ஆண்களுக்கான பிரச்சினைகளைக் களைவதற்கும், அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தை பேண ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஆண்கள் தங்களுக்காகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அனைத்து கவலைகளையும் மறந்து கொண்டாட ஏற்படுத்தப்பட்டது.

 “அன்பு காட்டத் தெரியாதவன் ஆண் அல்ல. அன்பைக் காட்ட நேரமில்லாமல் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு ஜீவன்".

      ஆண்கள் என்பவர்கள் இயந்திரம் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே. தன் குடும்பத்தின் தேவைக்காக தன்னையே அழித்துக்கொள்பவர் ஆண்கள்.பதற்றம், கவலை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. உணர்ச்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஆண்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

     எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்கள் மீது இந்த சமூகம் வைக்கும் எல்லா எதிர்பார்ப்புகளையும், எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியா விட்டாலும்,  சமாளிக்க முயல்வார்கள்.

   அன்பை வெளிப்படுத்துவது சிறப்பு என்றால், அந்த அன்பை ஒரு சிறப்பு நாளில் வெளிப்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். நம் வாழ்க்கையில் தொடர்புடைய எல்லா ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்.


18 நவம்பர், 2021

வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்

 


         வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டம், எங்கும் தங்கு தடையின்றி நடைபெற்ற காலம். கதர் சட்டையைக் கண்டால் அடி. கதர் குல்லாயைக் கொண்டால் அடி. வந்தேமாதரம் என்றால் உதை என்று ஆங்கியேர்களின் வெறியாட்டம் நடந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் தமிழக மக்களிடம் மறைந்திருந்த புரட்சிக் கனலைத் தட்டியெழுப்பி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர்முனைக்குத் தமிழ்ப்படைகளை அழைத்துச் சென்ற தமிழன் வ.உ.சிதம்பரனார்.

     தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர்கள் பன்னிரெண்டு மணிநேரம் ஓய்வில்லாமல் வேலை செய்வதையும், விடுமுறையே இல்லாமல் சிரமப்படுவதையும் கண்டு மனம் நொந்தார். அதை ஒன்பது நாள்கள் தொடர்ந்து நடத்திய  போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை, வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்தது.

     பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள்

     சுதேசியின் மீது சிந்தனையைச் செலுத்திய வ.உ.சி. பல்வேறு சுதேசி உணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளையர்களின் கொள்ளைகளை உணர்ந்தார். அதை ஒழித்துக் கட்ட   “தரும சங்க நெசவுச்சாலை”, ”சுதேசிய நாவாய்ச் சங்கம்”, ”சுதேசிய பண்டகசாலை”களை ஆரம்பித்தார். அவர் மேடையிலேறி மக்களைத் திரட்டினார். அந்நிய ஆடைகளைக் கொளுத்தினார். அந்நியப் பொருள்களை கையால் கூட தொடுவதில்லை என்று உறுதியெடுத்தார்.

      ஆங்கிலேயர்களின் கொள்ளை லாபத்துக்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தத் திட்டமிட்டார். பாண்டியர்கள், சோழர்கள் காலம் முதல் கடலாதிக்கம் பெற்றிருந்த தமிழர்கள், ஆங்கிலேயர்களின் கப்பல் வர்த்தகத்தால் தடைபட்டுவிட்டது என்று கருதினார்.இதனால் 1906-ம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கினார். 

      வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

     தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே, “ சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதி நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். பின்னர் அந்த தண்டனை மேல்முறையீட்டுக்கப்  பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.  வ.உ.சி சிறை சென்றதும், கப்பல் கம்பெனி நொடிந்து விட்டது.

      சிறைச்சாலையில் மாட்டிற்குப் பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்கச் செய்து ஆங்கிலேயர்கள் அவருக்கு சித்ரவதை கொடுத்தனர். கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின; சணல் நூற்று, கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப் புரட்டி போட்டது.  

    ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தொடர்ந்து சேவை செய்தார். 1936-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக வ.உ.சி இயற்கை எய்தினார்.

உலக தத்துவ தினம்


   உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.

       2002ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலில் 2005ஆம் ஆண்டில், உலக தத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

     இந்தத் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூர முடியும்;  நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தைத் தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது.

     ஐநா சபையின் வரையறையின்படி, உலக அமைதிக்கு அடிப்படையான ஜனநாயகம், மனித உரிமைகள், நீதி, சமத்துவம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான கருத்தியல் தளத்தை அமைப்பது தத்துவம்.

       தத்துவம் என்பது அறிவு, அனுபவம், இருப்பு மற்றும் எதார்த்தத்தைப் பற்றிய படிப்பைக் குறிக்கிறது. தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயலும்.

     மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்வதற்கும், புதிய கருத்துகளை வெளிப்படையாக ஆராய்ந்து விவாதிப்பதற்கும், சமூகச் சவால்கள் மீது விவாதத்தை மேற்கொள்ளவும், தத்துவங்கள் பயன்படுகின்றன.

     மாறி வரும் காலங்கள் நம் முன்வைக்கும் சிக்கல்களை சமாளிப்பதற்கும் தேவையான புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் வளர்ப்பதற்குத் தேவையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் ஏற்படுத்தப்பட்டது.

   இன்றைய தினத்தில், தற்போது நமக்கு என்ன மாதிரியான தத்துவங்கள் தேவை, அதை எப்படி உருவாக்குவது, எப்படி கற்பது கற்பிப்பது என்பது சம்பந்தமான கலந்துரையாடல்கள், விவாதங்கள் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெறும்.

   தத்துவம் அனுபவத்தின் உடனடியான வெளிப்பாடு, நிதர்சனங்களின் நேரடியான குரல்கள். சுருங்கச் சொல்வது என்றால் தத்துவம் வாழ்க்கையின் அற்புதமான தரிசனம்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece