19 டிசம்பர், 2021

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் நினைவுநாள்

 “பேச்சு பவளம்; பெருந்தொண்டு நல்முத்து
மூச்செல்லாம் தூயதமிழ்”  

        என்று உவமைக் கவிஞர் சுரதாவால் போற்றப்பட்டவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன்.

நன்றி : பட உதவி - தினமணி

         முத்தமிழ்க் காவலர், தமிழ்ச் செம்மல், தமிழ் வித்தகர், சித்த மருத்துவ சிகாமணி, வள்ளுவவேள், செந்தமிழ்க் காவலர், இலக்கியச் செல்வர், தனி நாயகர், உலகத் தமிழர்ச் செம்மல், கலைமாமணி, தமிழ்மறைக் காவலர் என பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், தமிழிசை மீட்சிக்காகவும் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.

       ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஓர் இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக இருக்கிறது. ஒருசில மொழிக்கே இப்படிப்பட்ட உள்ளார்ந்த பண்பு இருக்கும் என்பது அறிஞர்களின் கூற்று. அப்படிப்பட்ட தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விஸ்வநாதமும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், தமிழறிஞர், அரசியலர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், ‘சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்’ என்று போற்றப்படுபவரும்கூட.

        தமிழ் இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகமாக மட்டும் பார்க்காமல், அவை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கைக்குப் பாடமாகவும் பாலமாகவும் இருக்கிறது என்பதைச் சொல்வதற்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் கி.ஆ.பெ.விஸ்வநாதம். அவருடைய படைப்புகள் எல்லாமே பாமரருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கியங்களின் இன்றைய தேவைகள் போன்றவையெல்லாம் காலத்துக்கேற்ற உதாரணங்களுடன் பள்ளி மாணவரும் புரிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளன.

        தமிழ் மொழிக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், தமிழ் படிப்பதற்காகப் பள்ளி சென்றதில்லை. ஆனால், எந்தப் பள்ளியிலும் படிக்காத இவரை, இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆட்சிக்குழு உறுப்பினராக ஏற்றுக்கொண்டதோடு, “டாக்டர்’ பட்டமும் வழங்கிச் சிறப்பித்தன.

       சிறு வயதில் முத்துசாமி கோனாரிடம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். பிறகு, வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கியங்கள் கற்றுப் புலமை பெற்றார். வாலையானந்த சுவாமிகளிடம் சைவத்தைக் கற்றறிந்தார். இந்த ஆளுமைகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார் விஸ்வநாதம்.

      ஒரு முறை அறிஞர் கி.ஆ,பெ. விசுவநாதம் தமிழனின் சொத்துக்கள் எவை என்பது குறித்து உரையாற்றினார்."துளைக் கருவி, நரம்புக் கருவி, தோல் கருவி இந்த மூன்றிலும் அனைத்து இசைக் கருவிகளும் அடங்கிவிடும். இவற்றையே நம் பெரியோர், குழல், யாழ், முழவு என்றழைத்தனர். வேறெந்த மொழியிலுமில்லாத சிறப்பான "ழ' கரம் இந்த மூன்றிலும் இருப்பது வியப்பளிக்கிறது! இதுவே தமிழின் சொத்து!'' என்றவுடன் கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது!

       தமிழிசை இயக்கத்திலே முத்தமிழ்க் காவலரின் பங்கு மகத்தானது. தமிழகத்தில் இசை மேடைகளில் தமிழ்ப் பாட்டுப் பாடாமல் தெலுங்கு, சம்ஸ்கிருதப் பாடல்கள் பாடிவந்த நிலையை எதிர்த்து அண்ணாமலை அரசர் இயக்கம் கண்டபோது (1942), கி.ஆ.பெ. பொதுச் செயலாளராக இருந்து நாடெங்கும் சுற்றி, இசை இயக்கத்துக்கு வலுவூட்டினார்.

     அறிஞர் அண்ணா, தமிழக முதல்வராக இருந்து நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று, மாநாடு வெற்றிபெறத் துணை நின்றார்.

      உலகில் தொன்மையான பல மொழிகள் வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் அவ்வாறு ஆகிவிடக் கூடாதென்று, தமிழ் மொழியைப் பாதுகாத்து வளர்க்க, ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வந்தார்.அவருடைய வேண்டுகோளை ஏற்று அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தஞ்சையில் தமிழுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். இது கி.ஆ.பெ.வியின் சாதனைகளுள் ஒன்றாகும்.

      தனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமையுணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் போன்ற பணியைத்தான் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் புத்தகங்கள் செய்கின்றன. 

      விஸ்வநாதத்தின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

     வள்ளுவர் (1945), வானொலியிலே (1947), ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950), அறிவுக்கு உணவு (1953), தமிழ் மருந்துகள் (1953), வள்ளுவரும் குறளும் (1953), எண்ணக் குவியல் (1954), தமிழ்ச்செல்வம் (1955), திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956), திருக்குறள் கட்டுரைகள் (1958), நான்மணிகள் (1960), ஆறு செல்வங்கள் (1964), தமிழின் சிறப்பு (1969), நல்வாழ்வுக்கு வழி (1972), திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974), நபிகள் நாயகம் (1974), மணமக்களுக்கு (1978), வள்ளலாரும் அருட்பாவும் (1980), எனது நண்பர்கள் (1984), அறிவுக்கதைகள் (1984), திருக்குறளில் செயல்திறன் (1984), மாணவர்களுக்கு (1988), எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994). 



    தனது 96ஆவது பிறந்த நாள் விழாவில் (1994) குன்றக்குடி அடிகளார் தலைமையில் கடைசியாகப் பேசினார். அவர் பேசும்போது, “”நான் அதிக காலம் உயிருடன் இருக்க மாட்டேன். உடல் நலம் குன்றிவிட்டது. இந்நிலையில் தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி குறித்து அரசு ஆணை வந்தால் மகிழ்ச்சியோடு உயிர் துறப்பேன்” என்று பேசினார். அதுவே அவரது நிறைவுரையாக அமைந்தது.

     “அரசு ஆணை வந்தால் பார்த்துவிட்டுச் சாவேன்” என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏங்கியவாறு, 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி தம் பூத உடம்பு நீத்துப் புகழுடம்பு எய்தினார்.

          தமிழுக்கும் தமிழருக்கும் பாதுகாவலராகத் திகழ்ந்த கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழ்ப் பணிகளை நினைத்துப் பார்த்தால், நிச்சயம் அவர் ஒரு முத்தமிழ்க் காவலர் என்பது விளங்கும்.

17 டிசம்பர், 2021

ஓய்வூதியர் நாள்

     


      ஓய்வூதியம் என்பது அரசு துறையில் பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் தொகை. அரசு ஊழியர், அரசு மற்றும் உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவன ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வயது முதிர்வின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு பெற்று எஞ்சிய வாழ்க்கையில் பொருளாதார நிலையை ஈடுகட்டும் வகையில் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. 

   தனது இளமைக் காலம் தொடங்கி 58 அல்லது 60 வயது வரை அரசுக்கும், மக்களுக்கும் சேவை உணர்வோடு பணியாற்றிய அரசு ஊழியர் ஓய்வு பெற்றபின் தனது முதுமை காலத்தில் நிராதரவாக விடப்படாமல் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாழ உதவி செய்வது ஓய்வூதியம் தான்.

    பழங்காலத்தில்,மன்னருக்காகவும், நாட்டுக்காகவும் உயிர்த் தியாகம் செய்த ஊழியரின் குடும்பத்திற்கு வீடுகள், நிலம் என மானியம் வழங்கப்பட்டதாக மட்டும் சில வரலாற்று பதிவுகள் உண்டு.அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்பது இந்திய தேசத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1857- க்குப் பின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

     1871 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 'இந்திய ஓய்வூதியச் சட்டம் - 1871' - இயற்றிச் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தில் 'ஓய்வூதியம் என்பது அரசு வழங்கும் கருணைத் தொகை அது அரசு ஊழியரின் அடிப்படை உரிமை இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைக்குப் பின்னரும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.'ஓய்வூதியப்பிதாமகன்’ மத்திய பாதுகாப்புத் துறையில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய டி.எஸ்.நகரா என்பவர் 1972இல் தமது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வூதியத் தந்தை திரு. D S நகரா 

     அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் சில முரண்பாடுகளும், சிக்கல்களும் இருப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் 1982, டிசம்பர்17 இல் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு டி.எஸ்.நகராவுக்குத் தகுதியான ஓய்வூதியம் வழங்கித் தீர்ப்பளித்தது. 

    அந்தத் தீர்ப்பில்

'ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத் தொகையோ நன்கொடையோ அல்ல; ஓர் அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசுக்கும், மக்களுக்கும் பணியாற்றியமைக்காகப் பெறும் உரிமைத் தொகையாகும்'
என்று குறிப்பிட்டதுடன்,
'அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின் அமைதியாக, கவுரவமாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்'
என்றும் ஆணித்தரமாகத் தீர்ப்பளித்தது.

     அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், தற்போது ஊதியக் குழு அமைத்துப் பணியில் இருப்பவர்களின் ஊதியம் திருத்தி அமைக்கப்படும் போதெல்லாம், ஓய்வூதியமும் திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது. 

    பணியில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட டிசம்பர்17ஆம் நாள் 'ஓய்வூதியர் தினமாக'க் கொண்டாடப்படுகிறது

16 டிசம்பர், 2021

வெற்றி தினம்


          


         1971-ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான்      போரில், பாகிஸ்தான் இராணுவம், தனது 90 ஆயிரம் வீரர்களுடன் இந்தியாவிடம் சரணடைந்தது. இதையடுத்து கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி ‘வங்காளதேசம்’ என்ற தனி நாடாக மாறியது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த  வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் நாள் ‘விஜய் திவாஸ்’(வெற்றி தினம்) அனுசரிக்கப்படுகிறது.

          இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லி இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துவார். அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் திசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்கின்றனர்.

15 டிசம்பர், 2021

சர்வதேச தேயிலை தினம்

          சர்வதேச தேயிலை தினம் ஒவ்வோராண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை  நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

     2004 மற்றும் 2005ல் முறையே இந்தியாவின் மும்பை மற்றும் பிரேசிலின் போர்டோ அலெக்ரி போன்ற இடங்களில் நடைபெற்ற உலகச் சமூக மன்றத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15 ஆம் தேதியைச் சர்வதேச தேயிலை தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    முதல்முறையாக 2005 டிசம்பர் 15ஆம் தேதி புதுடெல்லியில் இத்தினம் கொண்டாடப்பட்டது. தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் போன்றோரின் மீது உலகத் தேயிலை வர்த்தகம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலையைப் பயன்படுத்துவோர் எதிர்நோக்கும் பிரச்னைகளை, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

    உலகத் தேயிலை உற்பத்தியில், நம் நாடு, 2 ஆம் இடம் பெறுகிறது.தென் மாநிலங்களில், தமிழகம், 70 சதவீதம், கேரளா, 26 சதவீதம், கர்நாடகா, 4 சதவீதம் அளவுக்கு தேயிலையை உற்பத்தி செய்கின்றன.

    தேநீர் உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் பானமாக உள்ளது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அருந்தப்படுவது தேநீர் என கூறப்படுகிறது. தேயிலைச் செடியில் உள்ள தளிர் இலைகளில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. சூடான நீரில் தேயிலைப் பொடியைக் கலந்து தேனீராக அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர்.

    தேயிலையைச் சர்வ நோய் நிவாரண பானமாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தமையால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன.

   தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் ஆகியவை அடங்கிய பகுதிகளில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து உலகின் 52 நாடுகளுக்கு, தேயிலை அறிமுகமானது. 

    ஆனால், சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்குதான் முதன்முதலில் தேயிலையை நீரில் ஊறவைத்து குடிப்பது சுவையானது என மனிதன் அறிந்து கொண்டான்.

   தேநீர்களுள் பலவகைகள் இருந்தாலும், அதை அளவுடன் நுகர்வதே நம் உடலுக்கு நன்மைபயக்கும் என்பதை மனத்துள் கொள்வோம்.

14 டிசம்பர், 2021

சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம்

 

       ஆண்டு தோறும் டிசம்பர் 14 ஆம் தேதி சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    நாம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும், நம் அன்றாடப் பணிகளுக்கு அவசியமான ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆற்றல்களை வீணாக்கி வருகிறோம். தற்போது, நம்மிடம் இருக்கும் இந்த ஆற்றல்கள் எல்லாம், 100 அல்லது 150 வருடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஆற்றல் பாதுகாப்புக் குறித்து கட்டுரைகள் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல்,போட்டிகள் நடத்துதல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கியக் குறிக்கோளாகும்.

      தற்போது நிலக்கரி, பெட்ரோல், அணு, மின்சாரம் ஆகியவை முக்கிய எரிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு அடுத்த 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி அடுத்த 200 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எரிசக்தியைச் சேமிக்கும் கட்டிடங்களைக் கட்டும்போது அவற்றின் எரிசக்திப் பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களைத் தொழிட்நுட்ப வல்லுநர்கள் கண்காணிப்பதற்கு வசதியான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

     தொடக்கத்தில் சற்று அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பது இத்தகைய கட்டிடங்களை அமைப்பதில் ஒரு பெரும் தடையாக இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் இதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருந்தாலும் அதனால் ஏற்படும் மின்சார சிக்கனம், அதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டை விட பெருமளவு லாபம் கிடைக்கும். 

      எனவே எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டுவதற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற தயக்கத்தை போக்குவதற்கான முயற்சியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

    மின்சாரத்தைப் போலவே நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் பயணமும் அதற்கான வாகனங்களும். இதற்காக வாகன எரிபொருளுக்கு நாம் பெருமளவு செலவு செய்கிறோம். அத்துடன் இந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.

   பெட்ரோலும் டீசலும் பெட்ரோலியம் எனும் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30-40 ஆண்டுகளில் தீர்ந்து போகக்கூடியது.

     இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலும் டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலைச் சார்ந்து நாம் இயங்க முடியாது.

    எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பெட்ரோல், டீசலைச் சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றையும் குறைத்துப் பணத்தையும் சேமிக்க முடியும்.

     பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். தனியாகக் காரில் செல்வதைத் தவிருங்கள். அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.

     சைக்கிள், மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளை அதிகம் பயன்படுத்த முயற்சியுங்கள்.
எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள். வெயில் நேரடியாகப் படும் இடத்தில் நிறுத்துவது எரிபொருளை அதிகம் ஆவியாக வைக்கலாம்.இந்த யோசனைகளைத் தொடர்ந்து நினைவில் வைத்துக் கடைப்பிடித்துவந்தால், எரிபொருள் செலவை நிச்சயம் குறைக்கலாம்.

     எனவே, நமது வருங்காலச் சந்ததியினருக்கு எரிபொருள் ஆற்றலை கொஞ்சமாவது விட்டு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுநாள்

 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுநாள் இன்று 

 * தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணியனுக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். 

 * எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பாப்புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர் . ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார் . அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி , பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ , அருமைப்பாடல் ” எனக்கூறி இருவருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.அன்றுமுதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும் அழைக்கப்பட்டார் . 

 * எட்டயபுரத்திலும், நெல்லை சிஎம்எஸ் கல்லூரி பள்ளியிலும் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பையும் முடித்தார். 

 * வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே, முதுநிலை சட்டம் படித்து பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞர் என்று புகழ்பெற்றார். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் அவரது சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 

 *வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர் . அவற்றுக்கு சோமசுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக, ஆங்கிலேயர் வ.உ.சி. , சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்குகளை எதிர் கொண்டு வாதாடினார். 

 * ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். நெல்லை, மதுரையில் காங்கிரஸ் கட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார். 

 * ‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். 

 * காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக, குழந்தைகளின் நகைகளைக் கழற்றி காந்தியிடம் அளிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

 * அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கி யங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். 

 * தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். ‘நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.

 * இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் ‘கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது. 

 * சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவர். சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80ஆவது வயதில் (1959) மறைந்தார்.

13 டிசம்பர், 2021

எழுத்தாளர், தீபம் நா.பார்த்தசாரதி நினைவுநாள்

 

      நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. 

    வத்தலக்குண்டு அருகே நதிக்குடி கிராமத்தில், 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி பிறந்தார் அமரர் "தீபம்' நா. பார்த்தசாரதி. வாழ்ந்த காலங்கள் 55 ஆண்டுகள்தான். அதற்குள் அவர் படைத்தவை 93 புத்தகங்கள். இவற்றில் சிறுகதை, குறுநாவல் தொகுதிகளும் உண்டு. அவற்றில் இடம்பெற்றுள்ள படைப்புகளின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பார்த்தால், அவர் படைத்த மொத்தப் படைப்புகளின் கூட்டுத்தொகை பிரமிக்க வைக்கும். எழுத்தே வாழ்வாக வாழ்ந்து மறைந்தவர் நா.பா.

     ராமன், கிருஷ்ணன் போன்ற இதிகாச நாயகர்கள் மாதிரி அவர் படைத்த "குறிஞ்சிமலர்' நாவலின் கதாபாத்திரங்களான அரவிந்தனும் பூரணியும் வாசகர்கள் மனத்தில் நிலைபெற்றுவிட்டார்கள். ஏராளமான பேர் தங்கள் குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார்கள், மகிழ்கிறார்கள்.

       எல்லாவகைப் படைப்புகளையும் எழுத முடிந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் அவர். அவரது குறிஞ்சிமலர், பொன்விலங்கு முதலிய சமூக நாவல்கள் எத்தனை புகழ்பெற்றனவோ, அதற்கு இணையாக அவரது மணிபல்லவம், நித்திலவல்லி, பாண்டிமாதேவி, ராணி மங்கம்மாள் ஆகிய சரித்திர நாவல்களும் புகழடைந்தன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என அவர் தொடாத துறையே கிடையாது.

           தற்கால இலக்கியவாதிகளில், நா.பா.வின் தனித்தன்மை அவரது எழில் கொஞ்சும் நடைதான். "அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்தது என்றால், அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது” என்பதுபோல வார்த்தைகளை மடக்கிப்போட்டு அழகிய வாக்கியங்களை அவரால் எழுத முடிந்தது. 

       கதாநாயகியின் பாதங்களில் மருதோன்றிச் சுவடு தென்பட்டதைப் பற்றிச் சொல்லும்போது, "சிவப்பு மையால் அடிக்கோடிட்டதுபோல'' என்று எழுதினார் அவர். அழகிய கையெழுத்தைப் பற்றி எழுதும்போது, "தேர்ந்து பழகிய கை, பூத்தொடுத்த மாதிரி'' என்று எழுதினார். இப்படி இதுவரை யாரும் சொல்லாத புத்தம் புதிய உவமைகளை எழுதும் அவரது ரசனை மிகுந்த மனம் பலரையும் கவர்ந்தது.

   “அறிவாளிகள் சுயமரியாதை காரணமாகத் தட்டத் தயங்குகிற கதவுகளை முட்டாள்கள் உடைத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்வதுதான் இன்று நாட்டின் அவலம்'' என்பன போன்ற அவரது வரிகள், அன்றைய காலத்தை விடவும் இன்று இன்னும் அதிகமாகப் பொருந்துகின்றன.

     அவரது எழுத்து இளைஞர்கள் பலரையும் ஈர்க்க முக்கியக் காரணம், அவற்றில் தென்பட்ட சுயமுன்னேற்றச் சிந்தனைகள். அவரது எழுத்தைப் படித்தால் ஒரு மில்லி மீட்டராவது மனம் மேம்படும் என்று நம்பியே இளைஞர்கள் அவர் எழுத்தைக் கொண்டாடினார்கள். 

"குறிஞ்சிமலர்” தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது, அதில் அரவிந்தனாக நடித்த இன்றைய முதல்வர் மாண்புமிகு. ஸ்டாலின், அந்தத் தொடரில் நடித்ததால் தன் மனம் மென்மைப்பட்டதாகக் கூறி மகிழ்ந்தார்.

 சாகித்ய அகாதெமி பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்படப் பல பரிசுகள் பெற்றவர் நா.பா.

     நா.பா., எண்ணற்றவர்களின் உள்ளம் கவர்ந்த சிறந்த பேச்சாளரும் கூட. தற்கால இலக்கியம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தம் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். அக்காலகட்டத்தில் சோ, ஜெயகாந்தன் ஆகியோரோடு நா.பா.வும் ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பேசினார். 

       காமராஜ் எந்த அளவு நா.பா.வைக் கவர்ந்தார் என்றால், தமது "சத்தியவெள்ளம்' என்ற நாவலில் அவரை ராமராஜ் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கும் அளவு. 

      பழந்தமிழைக் கசடறக் கற்றுப் "பண்டிதர்' பட்டம் பெற்றவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளில் ஒன்று "கம்பராமாயணத் தத்துவக் கடல்” என்பது. கல்வி கற்க வயதே இல்லை என்ற கருத்துடைய நா.பா.,

       இறுதி நாள் வரை கல்வி கற்றார். தம் 45 வயதுக்குமேல் பச்சையப்பன் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். "பழந்தமிழர் கட்டிடக்கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

      டாக்டர் தி.முத்து கண்ணப்பர்தான் அவரின் நெறியாளர். ஆய்வேட்டைச் சமர்ப்பித்தும், நேர்காணலில் கலந்துகொள்ள வாய்ப்பின்றி, அது என்று நிகழவிருந்ததோ, அன்று காலமானார். முனைவர் பட்டம் பெறும் முன்பே அமரர் பட்டம் பெறும்படி நேர்ந்தது அவரது துரதிருஷ்டம்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece