2 பிப்ரவரி, 2022

உலக சதுப்பு நில நாள்

   உலக சதுப்பு நில நாள், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ளக் கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியே சதுப்பு நிலங்கள் எனப்படுகின்றன.

    பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. 

    அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

    1971 இல் காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவு செய்து அது பற்றிய விவாத கூட்டத்தையும் அதே ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உலக சதுப்பு நில நாளாக ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகின்றது. 

      161 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ள இந்த ராம்சர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. முதன்முதலில் ராம்சர் நகரில் கூடியதால், இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு, அவற்றில் சிறப்பானவை என 1950 சதுப்பு நிலங்களைப் பட்டியலிட்டுள்ளது. 

    இந்திய அளவில் இந்த பட்டியலில் 25 சதுப்பு நிலங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கோடியக்கரை, பழவேற்காடு ஆகியவை இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

    பெருகி வரும் நகர்மயமாக்கல், தொழிற்சாலைகளுக்கான ஆக்கிரமிப்புகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத்தலங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவைகளால் மிகப்பெரிய அழிவைச் சந்தித்து வருகின்றன.


    ஈர நிலங்களை "உயிர் பேரங்காடி" என்பார்கள். உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பறவைகள் வாழ்விடமாகவும் ஈரநிலம் உள்ளது. 

    மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துதல், வாடும் பயிர்களுக்கு உயிர் நீராகச் செயல்படுதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், சுனாமி அலைகளை எதிர்கொள்ளுதல், வெள்ள நீரை உள்வாங்கி, வெள்ளச் சேதத்தைத் தடுத்தல் போன்றவற்றை ஈரநிலங்கள் செய்கின்றன. 

சதுப்பு நிலங்கள் அழிவதால் ஏற்படும் விளைவுகள்

    உயிர்ச் சங்கிலி உடையும், பல்லுயிர் வளம் பாதிக்கப்படும், சூழல் சூனியமாகும். நிலத்தடி நீர்வளம் நீர்த்துப்போகும். முக்கியமாக, நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்றுபோகும். உணவுச் சங்கிலியின் உறுதியான பிணைப்பை உறுதி செய்யும் ஈரநிலங்களின் அழிவு, பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

    ஆழிப்பேரலையான சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில் அலையாத்திக் காடுகள் ஆற்றிய மகத்தான பணியை மறந்துவிடக் கூடாது. இந்த ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்

1 பிப்ரவரி, 2022

பம்மல் சம்பந்தம் பிறந்தநாள்

     தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் பிறந்த தினம் இன்று.

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந்தவர். இவரது அப்பா தமிழாசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர். புத்தகங்களையும் வெளியிட்டுவந்தார். அவர்கள் வீட்டில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன.

    சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறுவார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

     'நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.

    அது 1891 ஆம் வருடம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அப்போது புதிதாகத் திறக்கப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில் பெருங்கூட்டம்.  கார்களிலும், ஜட்கா வண்டிகளிலுமாக வந்திறங்கிய பெரிய மனிதர்களுடன், சாதாரண மக்களும் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்  எடுத்தபடி இருந்தனர். எதற்குத் தெரியுமா? ஆந்திராவிலுள்ள பெல்லாரியிலிருந்து (இன்று கர்நாடகாவில் உள்ளது இந்நகரம்) வந்த, ‘சரச  விநோதினி சபா’ என்ற நாடகக் குழு  தெலுங்கு மொழியில் அரங்கேற்றிய ‘சிரகாரி’ நாடகத்தைக் காண்பதற்காக!

    இதை நடத்தியவர் பெல்லாரியில் வக்கீலாகப் பணியாற்றிய கிருஷ்ணமாச்சார்லு. இவரது நாடகக் குழுவில் இருந்த பலரும் அரசுப்பணியாற்றி வந்தனர். அன்று நாடகம் என்றாலே கூத்து என்றும், அதைப் போடுபவர்களைக் கூத்தாடிகள் என்றும் மோசமாகவே  சித்தரித்தது சமூகம். 

    ஆனால், இந்நாடகத்தைத் தயாரித்தவர்கள் அனைவரும், நன்கு படித்து, அரசுப் பணியில் இருந்த மனிதர்கள். அதனாலேயே மொழி  புரியாவிட்டாலும் இதைப் பார்க்க வேண்டுமென பெரும் ஆவல், மெட்ராஸின் பெரிய மனிதர்களுக்கும் ஏற்பட்டது.

     இக்கூட்டத்தில்  நாடகத்தைக் காண, தன் தந்தையுடன் அந்தப் பதினெட்டு வயது இளைஞனும் சென்றிருந்தான். ஆயிரக்கணக்கான பேர் போய் பார்த்தாலும், அந்த இளைஞனுக்கே தமிழிலும் இப்படியொரு நாடக சபையை உருவாக்க வேண்டுமெனும் எண்ணம் தோன்றியது.

    அந்த இளைஞன்தான் தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார்! அவர் எண்ணப்படி, 1891 ஆம் வருடம் ஜூலை  முதல் நாள், ‘சுகுண விலாச சபா’ பிறந்தது. ‘‘மேற்கண்ட தேதியில் சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ஸ்ரீமான்கள்  ஊ.முத்துகுமாரசாமி செட்டியார், வி.வெங்கடகிருஷ்ண நாயுடு, அ.வெங்கடகிருஷ்ண பிள்ளை, த.ஜெயராம் நாயக்கர், ஜி.இ.சம்பத்து  செட்டியார், சுப்பிரமணியப் பிள்ளை, நான்’’ என தன் ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார் பம்மல் சம்பந்த முதலியார்.

    தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரையும் நடிக்கவைத்தார்.

    மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். 

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட, பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.

    அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.

    சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.

    22 ஆவது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற Hamlet, As you like it, Macbeth, Cymbeline, Merchant of Venice  உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.

        சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதிஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.

    இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.

    சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார். நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார்.நாடகக் கலைக்குத் தனிச் சிறப்பும் மரியாதையையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.

31 ஜனவரி, 2022

நாகேஷ் நினைவு நாள்

     நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ், தாராபுரம் பகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.

    தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார்.

    சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

    வசன உச்சரிப்பு ஒரு நடிகருக்கு மிக அவசியம். முக பாவனைகள் மிக மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனும் உடல்மொழி ரொம்பவே அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள் - கலைஞர்கள். மகா கலைஞர்கள். அப்படியான உன்னதக் கலைஞன் - நாகேஷ்.

    ஒல்லியான தேகம்தான். வேலை பார்த்துக்கொண்டே நாடகம், நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடுதல் என தொடர்ந்த முயற்சிகளும், முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் நாடகத்தில், அங்கே ஒன்று, இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன.

    கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பாராம் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. வாலியிடம் இருந்தால் அது நாகேஷின் பணம்.

    சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தில் இவரை இயக்கினார். நாடகங்களில் வாய்ப்பு தந்த பாலசந்தர், திரைத்துறையிலும் பயன்படுத்தினார். தன் முதல்படமான ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷை நடிக்கவைத்தார். நாகேஷ் தான் நாயகன். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் நடிப்பைக் கண்டு திரையுலகமே வியந்து மிரண்டது.

    இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ, ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.

    எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.

    அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி, ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி, முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.

    ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் முழுக்க, ஒவ்வொரு முறை பேசும்போதும், வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி காமெடி பண்ணுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தி எனும் கேரக்டரும் ‘திருவிளையாடல்’ படத்தின் தருமி கதாபாத்திரமும் சாதாரணன் மிகப்பெரிய நடிகனாகிற ‘சர்வர் சுந்தரம்’ படமும் சினிமாப் படமெடுக்கிற ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பாவும் கற்பனையில் இருந்து நிஜமாகவே உருவெடுத்து உலவவிட்டதில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது. 'பாமா விஜயம்’ ‘அனுபவி ராஜா அனுபவி’ என நாகேஷ் முத்திரை பதிக்காத படங்களே இல்லை.

    மாடிப்படி மாது (எதிர்நீச்சல்)வை எவராலும் மறக்கவே முடியாது. ‘வேட்டைக்காரன்’, ’பாமா விஜயம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ஊட்டி வரை உறவு’ என நடித்த படங்களைப் பட்டியலிடுவது அசாதாரணம்.

    ஒருகட்டத்துக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியானார் நாகேஷ். நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்தவர் இந்த முறை வில்லனாக நடித்தார். அதிலும் வில்லன்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இவர்தான். அதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’. இதைத் தொடர்ந்து, ‘இந்திரன் சந்திரன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ என அடுத்த ரவுண்டிலும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து வெளுத்து வாங்கினார் நாகேஷ். அதிலும் ‘நம்மவர்’ படத்தில் இவர் நடித்ததெல்லாம் வேற லெவல். மகளைப் பறிகொடுத்து அவர் புலம்புகிற அந்தப் பத்துநிமிடங்களும் நம்மை உலுக்கிப் போட்டுவிடுவார்.

    ‘பீம்பாய் பீம்பாய்’ அதுவொரு ரகம் காமெடி. ‘மேகின்னா ஸ்டெப்னியா?’ என்று கேட்கும் ‘பஞ்ச தந்திரம்’ காமெடி வேறு வகை சரவெடி. ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்ததைப் பார்த்து, பிணமே எழுந்து வாய்விட்டுச் சிரிக்கும்.

    எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுகிற, தனி முத்திரை பதித்துவிடுகிற மகா கலைஞன், நகைச்சுவை நாயகன் நாகேஷ். சாகாவரம் பெற்ற கலைஞன். பூமியும் வானமும் உள்ளவரை, பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றிருப்பார் நாகேஷ். மக்கள் மனங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

    அடைமொழி கூடிய சினிமா உலகம். இரண்டு படங்கள் நடித்தாலே பெயருக்கு முன்னே பட்டம் வைத்துக் கொள்கிற உலகில், நாகேஷுக்கு எந்த அடைமொழியும் இல்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் என்ன ? நகைச்சுவையின் இன்னொரு பெயர் -  நாகேஷ் என்கிறது சினிமா அகராதி.

நன்றி : இந்து தமிழ் திசை

எழுத்தாளர் அகிலன் நினைவுநாள்

     நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும் தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் அவர்களது நினைவுநாள் இன்று.

    நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக்  கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே.

     ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்'' என்று கூறியுள்ளார் அகிலன்.

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் (1922) பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மாதான் கஷ்டப்பட்டு இவரைப் படிக்கவைத்தார்.

    பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.

    இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார்.மாணவப்பருவத்தில் - 1938  முதலே அகிலன் எழுதத் தொடங்கினார். பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய  "அவன் ஏழை' எனும் அவரது முதல் சிறுகதை, அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது. இதை அவரே தனது "எழுத்தும் வாழ்க்கையும்' என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.

    முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ 1944 இல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய, எளிய நடை இவரது படைப்புகளின் சிறப்பம்சங்கள்.

    அகிலனின் சிறுகதைகள், வாழ்வின் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை. எளிய நடையில், வலிமையான கருத்துகளை சுவாரசியமான தனது எழுத்து நடையால் வாசகரின் மனதில் பதிய வைப்பதே காலத்தை வென்ற படைப்பாளியான அகிலனின் தனித்துவம்.

    ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ அதே உணர்வை, படிக்கும்போது வாசகரும் பெறுவதே அந்தப்  படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி அகிலன்.

    இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன.


    இவரது ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், தினமணி ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 2 பாகங்களாக வெளிவந்தன.

    ‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள், ‘சத்ய ஆவேசம்’, ‘ஊர்வலம்’, ‘எரிமலை’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

    ‘வேங்கையின் மைந்தன்’ நாவல் 1963 இல் சாகித்ய அகாடமி விருதையும் ‘சித்திரப்பாவை’ 1975 இல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார்.

    அகிலனின் "பாவை விளக்கு' அவரது சுய வாழ்வின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஓர் இலக்கிய வாதியின் போராட்ட  வாழ்வை மிக இயல்பாகக்  கூறிச் செல்லும் இந் நாவல், திரைப்படமாக்கப்பட்டு சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டது. கலப்புமணப் பிரச்னையை "வாழ்வு எங்கே?' நாவல் அலசுகிறது. இது "குலமகள் ராதை' - என்ற பெயரில் திரைப்படமானது.

    காந்தியத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அகிலன், மூன்று முறை அரசு அழைப்பை ஏற்று ரஷ்யா சென்றார். தமது பயண அனுபவங்களை "நான் கண்ட ரஷ்யா', "சோவியத்  நாட்டில்' என்ற புத்தகங்களில்  பதிவு செய்தார்.

    மு.வரதராசனார், கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம் என பல துறைகளின் ஜாம்பவான்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.காமராஜர், சி.எஸ்., ஜீவா, மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, கே.முத்தையா ஆகிய தலைவர்களுடனான அகிலனின் நட்பு குறிப்பிடத்தக்கது.

    எளிமை, உண்மை, மனித நேயம், கலைத்தன்மை, நேர்மை, அஞ்சாமை, என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து, கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி - தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த படைப்பாளி அகிலன், தனது 66 ஆவது வயதில் (1988) மறைந்தார்.

30 ஜனவரி, 2022

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

     


    உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

தொழுநோய் ஹேன்சனின் நோய் என்றும் அழைக்கப்படும்.

    தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரேசில், இந்தோனேசியா, இந்தியா ஆகியவையே அதிக  நோய்பாதிப்புள்ள நாடுகள்.

தொழுநோய் என்றால் என்ன?

    மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (எம். லெப்ரே) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்று நோயே தொழுநோய். எம்.லெப்ரே மிக மெதுவாகப் பெருகுவதால் தொற்று ஏற்பட்டு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ஆகிய நீண்ட நாட்கள் கழித்தே  நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த நோய் பொதுவாகத் தோல், நரம்பு விளிம்புகள், மேல் மூச்சு மண்டலத்தின் சளிசவ்வுகள் மற்றும் கண்களையே பாதிக்கின்றன.

    தொழுநோய் பாசிபெசில்லரி (PB)  அல்லது மல்டி பெசிலரி (MB) என நீள்நுண்ணுயிரிகளின் தொகையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். பாசிபெசில்லரி வகையில் ஒரு சில (அதிகபட்சம் 5) தோல்புண்களே காணப்படும் (வெளிறிய மஞ்சள் அல்லது சிவப்பு). மல்டி பெசிலரி வகையில்  கூடுதல் (ஐந்துக்கும் மேல்) தோல் புண்கள், முடிச்சுகள், காறைகள், தோல் தடிப்புகள் அல்லது தோல் ஊடுருவிகள் காணப்படும்.

            நோய் எவ்வாறு பரவுகிறது?

    சிகிச்சை பெறாத தொழுநோயாளியே, இதுவரை அறிந்த  நோய் பரவலுக்கான,ஒரே காரணம். தொழுநோயாளியின் உடலில் இருந்து நோய்க்கிருமிகள் பரவும் முக்கிய வழி சுவாச மண்டலமே: குறிப்பாக மூக்கு மூலமே அதிகம் பரவுகிறது.

    சிகிச்சை பெறாதவர்களோடு தொடர்ந்து தொடர்பு வைக்கும் போது நோய்க்கிருமிகள் வாய் அல்லது மூக்குத் துளி வாயிலாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. உடலுக்குள் நுழைந்த நுண்ணுயிரிகள் நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.

    ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நரம்புகளுக்கு மேலும் சிதைவு ஏற்பட்டு நிரந்தர ஊனம் உண்டாகலாம்.

தொழுநோய் - அறிகுறிகள்    

கீழ்க்காணும் குறிகளும் அறிகுறிகளும் தென்பட்டால் தொழுநோயாக இருக்கக் கூடும்.

    அடர் நிறத் தோல் உடையவர்களுக்கு வெளிறிய தோல் திட்டுகளும், மங்கல் தோல் உடையவர்களுக்கு அடர் அல்லது சிவப்புத் திட்டுக்களும் இருக்கும்

தோல் திட்டுக்களில் உணர்வு குறைதல் அல்லது இழப்பு

கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது கூச்சம்

கை, கால் அல்லது இமை பலவீனம்

நரம்புகளில் வலி

முகம் அல்லது காது மடலில் வீக்கம்

கால் அல்லது கையில் வலியற்ற காயம் அல்லது தீப்புண்

    சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்குக் கண்கள், கைகள் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய், தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை, நன்கு கவனிக்க வேண்டும். எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

    உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி Multi Drug Therapy  எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

பன் மருந்து சிகிச்சை (MDT) என்றால் என்ன?

    தொழு நோயை எந்த ஒரு தனி மருந்தாலும் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சையே எம்டிடி.

தொழு நோயின் வகையைப் பொறுத்து ஒரு நன்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரிடம் இருந்து முழு வேளை எம்டிடியை உட்கொள்ள வேண்டும்.

எம்டிடி இலவசமாகப் பெரும்பான்மையான மருத்துவ நிலையங்களில், கிராமப்புறங்களில் கூட, கிடைக்கிறது.

முக்கியச் செய்திகள்

தொழுநோய் பன்மருந்துச் சிகிச்சையால் குணப்படுத்தக் கூடியது.

தொடர்ந்து பன்மருந்து சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாகக் குணப்படுத்தப்பட்டு, ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, பரவலும் தடுக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட நோயறிதல், தகுந்த சிகிச்சை மற்றும் முழுவேளை மருந்து தொழு நோயால் ஏற்படும் ஊனத்தைத் தடுக்கும்.

தொழுநோய் மரபுவழி நோயல்ல; இது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதில்லை.

கைகுலுக்குதல், சேர்ந்து விளையாடுதல் அல்லது சேர்ந்து பணிபுரிதல் ஆகிய வழக்கமான நடவடிக்கைகள் மூலம் தொழுநோய் பரவுவதில்லை. சிகிச்சை பெறாத நேர்வுகளோடு நெருங்கியத் தொடர்பு வைத்துக் கொள்ளுவதால் பரவக் கூடும்.

    தொழுநோய், பழைய பாவத்தாலோ கெட்ட நடத்தையாலோ ஏற்படுவதில்லை. மைக்கோபாக்டீரியம் என்ற ஒரு நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. 

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்ணியத்தோடு வாழ உரிமை உண்டு. மனிதாபிமானத்தோடு அவர்களை நடத்துவதே நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமை.


மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் - கண்ணம்பாளையம்

 தியாகிகள் தினம்
------------------------------------------------------------------

    மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் கண்ணம்பாளையம்

    கோவை மாவட்டத்தில், கண்ணம்பாளையம் என்றொரு கிராமம். இது தியாகத்தின் விளைநிலம். ஓர் ஊரே விடுதலைக்காகக் கிளர்ந்தெழுந்தது. நாட்டு விடுதலைக்காக, சுமார் 20 பேர், தீவிரப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    
    ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அணிதிரண்டு, போராடிய வரலாறு இவ்வூருக்குண்டு.சூலூர் விமானப்படைத் தளத்தைத் தீக்கிரையாக்கியதற்காக, அலிப்பூர் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கண்ணம்பாளையத்தின் போற்றுதலுக்கும்,
வணக்குதலுக்கும் உரிய தியாகிகள்

    இன்னும் சில விடுதலைப்போராட்ட வீரர்கள், போராட்டம் தொடர்ந்து நடைபெறவேண்டி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் சிறைசெய்யப்பட்டனர். இன்றளவும் அவ்வூரில், தியாகிகளை மறவாது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், பள்ளி மாணவர்களது ஊர்வலம் - நாட்டுபற்றுடன் கூடிய கோஷங்கள், பதாகைகள் என நடைபெற்று, இறுதியில் தியாகிகள் மேடையில் முடிவடையும். 

    அங்கு, அலங்கரிக்கப்பட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்ச்சான்றோர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் மரியாதை செலுத்துவர்.நாட்டு விடுதலைக்காகப் போராடிய இவர்கள் போன்றோரது ம(றை)றக்கப் பட்ட வரலாறுகளை வெளிக்கொணர்ந்து நாடறியச் செய்யவேண்டியது நாட்டுபற்றுடைய ஒவ்வோர் இந்தியக் குடிமகனுடைய கடமையும் ஆகும்.

------------------------------------------------------------------------------------

                    இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவிப்பதே இந்நாளின் நோக்கம்.

    “அவர்கள் முதலில் வாள்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் துப்பாக்கிகள் கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “அவர்கள் துப்பாக்கி பயிற்சி பெற்று வந்தார்கள். நாங்கள் வெடிகுண்டுகளால் தாக்கினோம்”
 “அவர்கள் வெடிகுண்டுகள் வீசினார்கள். நாங்கள் பீரங்கி கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “இறுதியாக அவர்கள் அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தினார்கள். இதுவரை உலகிலே அகிம்சையை வெல்ல எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாங்கள் வெளியேற வேண்டியதாகிவிட்டது'' 
என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நமது சுதந்திரப் போர் குறித்து பேசியதாகச் செய்தி உண்டு.

    அந்த அகிம்சைதான் மகாத்மாவை உலகின் தலைவராக மாற்றியது. எல்லோரிடமும் எளிதாகக் கொண்டு சேர்த்தது. இந்தியாவின் தேசத் தந்தை என்று   போற்றப்படும் அளவுக்கு அவரை உயர்த்தியது. 

    இருப்பினும்,அயல் நாட்டில் இருந்து படை திரட்டி பரங்கியரைப் பதறவைத்த சுபாஷ்சந்திர போஸ், ஆவேசம் கொண்ட இளைய பட்டாளமாக நின்ற மாவீரன் பகத்சிங் , வீரவாஞ்சிநாதன், கொடியினைத் தன் இறுதிமூச்சு இருக்கும்வரை கீழேவிழாமல் தடுத்து, தனது இன்னுயிர் ஈந்த கொடிகாத்த குமரன், இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்ட ஜெர்மனி அதிபர் ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்து, ஜெய்ஹிந்த் என்ற சொல்லை இந்திய திருநாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த ஜெய்ஹிந்த் செண்பகராமன், ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் கம்பெனி நிறுவி, அதை இயக்க முயற்சித்த,மாவீரர் வ.உ.சிதம்பரனார், மாவீரன் உத்தம்சிங் போன்றோர்களது தியாக வரலாறுகளை எளிதாக மறந்து விட இயலாது.

    விடுதலைக்குப் போராடிய யாவரும், தனக்கான ஜாதி, மத, இன அடையாளங்களை துாக்கி எறிந்து இந்தியராகவே நின்றனர். அவர்களின் விருப்பமான  ஒரு தேசத்தைப் படைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

'இமயச் சாரலில் ஒருவன் இருமினால்,குமரியில் வாழ்பவன் மருந்துகொண்டு ஓடுவான்'

    என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். இங்கே நமக்கான அடையாளம் நமது தேசம் மட்டுமே. தேசத்தில் இருப்பவர்கள் அனைவருமே நமது உறவுகள்தான்.தேசத்தையும் தாண்டி மனிதம் வளர்த்த நாடு நமது நாடு. 

    அத்தகு தியாக தீபங்களை இந்நாளில் நினைவுகூர்வுகூர்ந்து நன்றிகளைக் காணிக்கையாக்குவோம்.

ஜெய்ஹிந்த்

29 ஜனவரி, 2022

பழம்பெரும் நடிகை பண்டரிபாய் நினைவு நாள்

     பண்டரிபாய் தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். 

    பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது தணியாத பற்றுக் கொண்டவர் எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார். நாடகம் பற்றிச் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தார்.

    நாடகத்துக்குப் பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய், சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார். அவர் முயற்சியால் “வாணி” என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்குக் கிடைத்தது.

    எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது. தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். இந்தப்படத்தில்  பண்டரிபாய் நடித்தபோது அவருக்கு வயது 14 தான்.

    பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது.என்றாலும் பண்டரிபாயிடம் இருந்து தமிழ் வார்த்தை தெலுங்கில் தான் வந்தது .பி டி சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கைக் கற்றுக்கொண்டது தான் மிச்சம்.


    பின்னர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றார். விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச, பண்டரிபாய் கற்றுக் கொண்டார். ஏ வி. எம். கூட்டுறவுடன் நேஷனல் பிக்சர்ஸ் 1952 இல் தயாரித்த பராசக்தி படத்தில், சிவாஜியின் ஜோடியாக பண்டரிபாய் நடித்தார்.

    சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி, தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார்.

    தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி….. இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.சிவாஜிகணேசனின் தாயாக தெய்வ மகன், கௌரவம் போன்ற படங்களில் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

     கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 7 மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துச் சாதனை படைத்தார்.மன்னன் படத்தில் ரஜினி காந்தின் தாயாராக நடித்தபோது, ”அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாடலில் இக்காலத் தலைமுறையினருக்கும் அறிமுகமானார்.

    ஒரு முறைப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னையிலிருந்து பெங்களூருவிற்குப் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்தபின், திரைப் படங்களில் நடிக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு மறைந்தார்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece